Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திரா காந்தி நினைவு தினம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 27வது நினைவு தினம் இன்று (31.10.2011) அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இனியொருவில் வெளியான இக் கட்டுரை இந்த நாளில் மீள்பதிவாகிறது.

இந்திரா- சீக்கியர்-இந்தியா : தமிழில், பஷீர்.

காங்கிரஸ் ஈன்றெடுத்த இந்திராகாந்தி (Indira Priyadarshini Gandhi) என்ற நவீன காளி வீழ்ந்து 25 வருடங்கள் உருண்டோடி விட்டன. ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது போல ” இந்திரா இருந்தாலும் இழவும் இறந்தாலும் இழவு ” என்பது விடுதலைக்குப் பிந்தைய இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திரா என்ற நவீன காளிமண்டையைப் போட்டதை கொண்டாடும் விதமாக நவீன காளியின் பக்தர்கள் தில்லி, கான்பூர், பொகாரோ உள்ளிட்ட பல வடமாநில நகரங்களில் 4,000 ௲ த்துக்கும் மேற்பட்ட சீக்கியர்களின் தலைகளைச் சீவி நவீன காளிக்கு கபால பூஜை செய்தனர். நவம்பர் 01, 1984 ௲ ல் தொடங்கிய இந்த கபால பூஜை சில நாட்கள் வரை நீடித்தது.

சீக்கியர்களை பலியெடுத்த இந்திராவும் ( “ஒரு விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும்” -வைகோ. சீக்கியர் படுகொலை தொடர்பான வைகோவின் பாராளுமன்றக் கேள்விக்கு ராஜீவ்காந்தி அளித்த பதில் இது) அதை நியாயப்படுத்திய அருமைப்புதல்வன் ராஜீவ்காந்தியும் இன்று இல்லை. ஆனால் தங்களின் உயிர்களை, உதிரங்களை, இழந்த சீக்கிய சமூகம் அந்த ஊழித்தாண்டவத்தை தம் நெஞ்சுக் கூட்டினுள் பசுமையாக பாதுகாத்து வருகிறார்கள்.

அந்த குருதிக்காவின் ஒரு ஒரு படலத்தை மட்டும் பாருங்கள் டெல்லியில் வசிக்கும் ஆடைவணிகரான நிர்பிரீத் கவுர் என்ற சீக்கியப் பெண்மணி மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர் .இவர் கணிதத்தில் முதுநிலைப் பட்டதாரியும் கூட. இவர் ஒரு காலத்தில் தீவீரவாத இயக்கத்தோடு தொடர்பு வைத்திருந்தார் என்பதை கற்பனை செய்யக் கூட கடினமாக இருக்கும். தன்னை இன்னும் அலைக்கழிக்கும் அந்த நிகழ்வுகளைப் பற்றிக் கண்ணீருடன் நினைவு கூறுகிறார்.

” கலவரத்தில் என் தகப்பனார் இறந்த பிறகு என் வாழ்வில் ஏற்பட்ட வெற்றிடத்தை அவர் இறந்த நாளிலிருந்து இன்றுவரை நான் தினசரி உணருகிறேன். என் கண்ணெதிரிலேயே என் தந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி முழுக்க நனைத்த பின் அந்தக் கும்பல் ஒரு தீக்குச்சி மூலம் உயிரோடு கொளுத்திக் கொன்ற கொடூர நினைவுகள் ஒரு நாளும் மங்கியழியாது. கருணைகாட்டுமாறு என் குடும்பத்தினர் கோரியது செவிடன் காதில் ஊதிய சங்கு போலாயிற்று. அந்த வன்செயலுக்கு காரணமானவர்கள் அனைவருமே மிக மிக பழக்கப்பட்ட என் அண்டை அயலார்களேயாவர் . குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடுதலை செய்யப்படும் வேளையில் நாம் நீதியைக் கூட மறந்து விடலாம். ஆனால் அடுத்த தலைமுறைக்கு என்ன நேரிடும் என்பதை மட்டும் யாராலும் எதிர்வு கூறைடவியலாது.”

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் இரண்டாம் தலைமுறையைப் பற்றி திருமதி.கவுர் கூறுகையில்,

“கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள்தான் அந்தக் கடினத்தாக்குதலை சுமந்தார்கள். அவர்கள் தங்கள் படிப்புகளை தொடர்ந்திட இயலவில்லை. போதைப் பொருள் பாவனை,சூதாட்டம், திருட்டு போன்ற குற்றச் செய்ல்களில் ஈடுபடுகின்றனர். இதன் தொடர்ச்சி அவர்களின் அடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும், அதாவது இக் கலவரத்தின் வாயிலாக குறைந்தபட்சம் சீக்கியர்களின் மூன்று தலைமுறை தொலைக்கப்பட்டுள்ளது.அரசிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பவைகளை விட்டு விடுங்கள்: கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களது சொந்த சீக்கிய சமூகம் கூட ஆதரவுக்கரம் நீட்டவில்லை. அதீத துன்பத்திற்குள்ளாக்கப்பட்ட 25 சீக்கிய குடும்பங்களை நிமிரச் செய்தோம் எனச் சொல்லிட நல்ல நிலையில் உள்ள ஒரு சீக்கிய குடும்பத்தால் கூட முடியவில்லை என்பது எத்துணை வெட்கக்கேடு?”

திருமதி.கவுர் 1987 -ல் காலிச்தானிய இயக்கத்தில் இணைந்தார். காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரை மணந்தார். 12 வருடங்களுக்குப் பின் கணவனை இழந்து கைம்பெண் ஆனார். அவர் மேலும் கூறுகிறார். “பழிவாங்கும் உணர்வு என்னுள் அழுத்தமாக இந்ததால் நான் (கைம்பெண்ணான) பிறகும் கூட காலிஸ்தான் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் தொடர்ந்து ஈடுபட்டேன். பழிவாங்குவதில் உள்ள தாகம் என்னை 1988 ஆம் ஆண்டிலிருந்து எட்டரை ஆண்டுகள் சிறையில் கழிக்கச் செய்தது. அப்போது என் மகனுக்கு வயது 10. அவனுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையை என்னால் கொடுக்கவியலும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்”.

தனது இயல்பான வாழ்விற்கு திரும்பியதைப் பற்றி கவுர் கூறுகையில்: “எனது குடும்பமும், நெருங்கிய நண்பர்களுமே என்னை மீண்டெழச்செய்தனர். என்னுள்ளிருக்கும் கடினமான உணர்வுகளை சமாளிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. ஆனால் அதை தாயாரின் உதவியின்றி செய்திருக்க முடியாது. இன்று வரை நான் என்னை ஒரு கைம்பெண் இல்லை என்றே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். ஆனால் எனது தயார் இறக்கும் நாளிலிருந்து என்னை கைபெண்ணாகவே உணர்கிறேன். கடந்த 25 ஆண்டுகளாக எனது போராட்டம் தொடர்கிறது. எனினும் கடந்த காலத்தின் நிழல் என்னை விட்டு நீங்கியபாடில்லை.

கடந்த காலத்தில் நான் கொண்டிருந்த போராட்டத் தொடர்பினாலும், சிறைவாசத்தினாலும் என்னை மக்கள் நம்ப மறுக்கிறார்கள். இதன் விளைவாக எனது தொழில் இன்னும் நிலைபெறவில்லை. நான் சொல்ல விரும்பும் செய்தி ஒன்றே ஒன்றுதான். கலவரத்தில் தங்கள் பெற்றோரை இழந்த அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு மறு வாழ்வளிக்க நாம் முன்வரவேண்டும்” என்கிறார் கவுர்.

சீக்கியர்களுக்கெதிரான கபடுகொலைகளின் 25-ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில் பரிசாக அளிப்பதற்கு ஒரு நினைவுச் சின்னத்தை பிரத்தியேகமாக வடிவமைத்துள்ள கவுர் அதை பெருமையுடன் எடுத்துக் காட்டினார்.அந்த நினைவுச் சின்னத்தைப் பற்றிப் பேசுகிற அவர். ” அதில் எனது தந்தையின் படத்துடன் நீல நட்சத்திர நட்வடிக்கையில் கொல்லப்பட்ட போராளிகளின் படமும் உள்ளது. இவ்விரண்டுமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கங்கள் என்பதை சொல்வதற்காகத்தான் அவ்வாறு வடிவமைத்திருக்கிறேன்.” என்று சொல்கிறார் நிர்பிரீத் கவுர்.
(இந்து நாளிதழ்- 1-11-2009)

போராட்ட பலிபீடக் குருதி நமக்கு உணர்த்துவது என்ன? அரசியல்- ஆயுதம்- உரையாடல்:

தனக்கு நடந்த அவமானத்திற்கு காரணமானவர்களை தேடிக் கண்டு பிடித்து தண்டித்த இந்தியாவின் 1.91 சதவீதம் உள்ள தன்மானம் மிக்க சமூகம், அதற்காக அது கொடுத்து வரும் விலை உட்பட பல விஷங்களை ஒடுக்கப்படும், போராடும் மக்கள் ஆய்ந்து கற்றுணர வேண்டியிருக்கிறது.

ஒரு மக்கள் திரளின் நவரச உணர்வுகளின் மீது ஆழ்ந்த வலியும், குருதிப்பெருக்கும் உள்ள காயமானது ஒரு ஒற்றை முத்திரையாக வலிந்து திணிக்கப்பட்டுள்ள அவலத்தை ஒடுக்கப்படும், போராடும் பிறிதொரு சமூகத்தினராலேயே முழு வீச்சில் உணரமுடியும்.

அது போன்று அப்போராட்டத்தின் போதாமை, தோல்விகளிலிருந்தும் படங்கற்க வேண்டிய கடப்பாடும் நமக்குண்டு. எதிரியைக் காப்பாற்றும் நிர்வாகமும், சமூக ஒழுங்கும் வாழ்வை முழுமையாக அனுபவித்துக் கொண்டே பிறரை ஒடுக்குக் கொண்டிருக்கும் போது நாம் ஏன் நமது அனைத்தையும் அனைத்து வலுவையும் போராட்ட பலிபீடத்தில் இழக்க வேண்டும்? எதிரிகளிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ள நமக்கு நிறைய இருக்கின்றது.

இலங்கை, ஈராக், ஆப்கானிஸ்தான் என போராடும் சமூகம் அனைத்துமே வலு இழந்து நிற்க, நேபாளத்தின் United Communist Party of Nepal (Maoist) கட்சியிடமிருந்தும், லெபனானின் ஹிஸ்புல்லாவிடமும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளிட்மிருந்தும் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

எந்த ஒரு மக்கள் திரளினருக்காக ஆயுதம் ஏந்துகின்றோமோ இறுதியில் அவர்களை இல்லாமலாக்கும் தூய இராணுவாதம், அரசியல் நீக்கம் போன்ற பிழைகளில் இருந்து மீண்டு அரசியல்- ஆயுதம்- உரையாடல். என்ற முச்சூத்திரத்தை செப்டம்பர் பதினொன்று நிகழ்வுக்குப் பிந்தைய மாறியுள்ள உலகச் சூழலுக்கும், உள்ளூர் நிலவரங்களுக்கேற்பவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி மகிழத்தக்க வெற்றியை ஈட்டி அனுபவித்து வருகின்றனர்.

அத்துடன் தங்களது போராட்ட நியாத்தை உலகத்தாரும், தங்களோடு அடுத்து வாழும் பிற சமூக, பண்பாட்டுக் குழுவினரும் ஏற்றுக் கொள்ளத்தக்க விதத்தில் விளக்கி போராட்டத்தில் அவர்களையும் தேவைக்கேற்ப இணைத்து போராட்ட பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இனத்தூய்மைவாதத்தையும், விலக்கி நிறுத்தும் கோட்பாட்டையும் தூக்கி எறிந்து விட்டு எந்த ஒரு இனத்தின் மிகச்சிறு அடையாளங்களையும் விருப்பங்களையும் அங்கீகரித்து உள்வாங்கிக் கொண்டதனாலேயும் மகிழத்தக்க இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

எதிரியை துல்லியமாக தனிமைப்படுத்தி தேவைக்கேற்ப வன்முறைய அளந்து பயன்படுத்தி அரசியல், உரையாடல் வெளிகளை திறந்து வைத்துக் கொண்டே போராடும் சக்தியை (Fire Power) தக்கவைக்கும் நுட்பத்தையும் திறனையும் கைக் கொள்ளும் போது போராடும் நமக்கும், நமது தலைமுறையினருக்கும் கண்ணீரும், துயரமும் மட்டுமே முழு உடமையாக இராது.

This post was written  on Wednesday, November 4, 2009

Exit mobile version