
இந்த அபிவிருத்தி அரசியலுக்குப் பின்னால் பல்வேறு மறைக்கப்பட்ட முகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்து வருகின்றன என்பது ஆழ்ந்து அவதானிக்க வேண்டியதாகும். தமிழ் மக்களைக் குறிவைத்து நிற்கும் அபிவிருத்தி என்ற போர்வைக்குள் அரசாங்கம் கிள்ளிப் போடும் அற்ப உதவிகள், அவற்றை ஏந்தி மக்களுக்குக் கொடுப்பதாகக் கூறும் சலுகை அரசியல்வாதிகள், அந்நிய-உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்;கள், மூலதனமிடும் உள்நாட்டு முதலாளித்துவ நிறுவனங்கள், வளங்களை வாரி அள்ளிச் செல்ல நிற்கும் பல்தேசிய ராட்சத நிறுவனங்கள், அரச-தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றன முன் நிற்கின்றன.
இவை அனைத்தும் பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களில் இறால் போட்டுச் சுறாப் பிடிக்கும் வேலையைத்தான் செய்து வருகின்றன. இதனால் ஒரு சிறு பகுதி நன்மை மக்களின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டும் சென்றடைகின்றது. ஆனால், அதனை விளம்பரக் காட்சிப்படுத்தலாக்கி எல்லா மக்களுக்கும் நன்மைகளும் பலாபலன்களும் கட்டாயம் கிடைக்கும் என்ற ஒருவகை எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு இவ் அபிவிருத்தி உதவிக்குள் அல்லது சலுகை கைகளுக்குள் உள்ளீர்க்கப்படும் மக்கள் ஏதோ ஒரு வழியில் சுரண்டப்படுகின்றனர். அல்லது ஏமாற்றப்படுகின்றனர். உண்மையில் இடம் பெறுவது ஆளும் வர்க்க அல்லது அரசாங்க சார்பு நடவடிக்கைகளும் அத்துடனான முதலாளித்துவ சுரண்டல் நடைமுறைமயாகும்.
இவற்றுடன் அரசாங்கத்தில் அக் கட்சியின் பட்டியலில் வெற்றி பெற்ற ஈ.பி.டி.பி. வடக்கிலும், கருணா, பிள்ளையான் கிழக்கிலும் அபிவிருத்தியின் பெயரால் சலுகைகளுக்கு வாக்குறுதியளித்து அங்கொன்று இங்கொன்றாகச் செய்து வருவதும், அபிவிருத்தி என்றே அழைக்கப்படுகிறது. யுத்தம் முடிந்தவுடன் ஜனாதிபதி மிக ஆடம்பரமான வசனங்களுடன் ஷஷஇனிமேல் நமக்கு முன்னால் இருப்பது அபிவிருத்தி காணும் சவால் மட்டுமே என்றார்.
இதனை நம்பிப் புலம் பெயர்ந்த நாடுகளில் புலகளை எதிர்த்து வந்த பல புத்திஜீவிகள் இங்கு தமிழ் மக்களுக்கு சேவை செய்யவென வந்தார்கள். ஊடகங்களில் பரப்புரைகள் செய்தார்கள். மகிந்த சிந்தனைக்கு கை கொடுத்துப் பலம் சேர்க்க வேண்டும் என்றார்கள். இன்னும் தங்களை இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள் எனக் கூறி வந்த புத்திஜீவிகள் தமது அறிவாற்றலை தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியின் பெயரால் வழங்க டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து செயற்படத் திட்டங்கள் பல வரைந்து கொடுத்து மும்முரம் காட்டினர். மனதார நம்பி வந்தவர்களும் நம்பி நின்றவர்களும் இன்றும் தாம் எதிர்பார்த்த அபிவிருத்தி இடம்பெறாமல் நடுத்தெருவுக்கு வந்தது போன்ற உணர்வுடன் இருந்து வருவதையிட்டு விரக்தியும் அதிருப்தியும் அடைந்து நிற்கின்றனர்.
இதற்கு காரணம் இலங்கையின் அரசியல் யதார்த்தத்தையும் அதன் சுயரூபத்தையும் புரிந்து கொள்ளாமை தான். சற்றுத் தூர நின்று பார்த்தால் இவ் அபிவிருத்தி அரசியல் என்பது தற்காலத்திற்குப் பொருந்தக் கூடியது அவசியமானது என்றே தோன்றும். ஆனால் கிட்ட வந்து உள்ளே சென்று பார்க்கும் போதே அதன் மோசமான செயற்பாடுகளும் ஒழுங்கற்ற போக்குகளும் இயலாமைகளும், ஊழல்களும் ஒவ்வொன்றாகக் கண்களுக்குத் தெரியவரும். எல்லாம் வாக்கு வங்கிக்கும், அதிகார ஆதிக்கத்திற்கும் நிலைப்பிற்குமாகவே மக்களுக்கு அபிவிருத்திக் கோலம் காட்டப்படுகின்றன.
கடந்து வந்த பேரழிவுகளுக்குப் பின் மக்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. தமது இழப்புகளில் இருந்து மீள வேண்டியுள்ளனர். அத்தகைய மக்களை சலுகை அரசியலுக்குள் அகப்படுத்தி தமது ஆதிக்க அதிகாரப் பிடிக்குள் வைத்திருக்க எவர் முற்பட்டாலும் அது தவறு தவறேயாகும். இன்று ஈ.பி.டி.பி. தொடக்கம் ஈரோஸ் எனப்படும் அனைத்து தமிழ் இயக்கங்களும் (தமிழ் அரங்கக் கட்சிகள்) துப்பாக்கி அரசியல் மூலமான அதிகார ஆதிக்க மனப்பாங்கில் ஊறி வளர்ந்து அதனை ஒருவகைத் தொழிலாக நிரந்தரப்படுத்திக் கொண்டவைகளே.
இதற்கு பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கமும் இந்தியாவும் தீனி போட்டு வளர்த்து வந்தன என்பது இரகசியமல்ல. இதன் நீட்சியை இன்றுவரை திடீர் கொலைகள், பாலியல் வன்புணர்ச்சிகள், கப்பம் பெறுதல், மிரட்டல்கள், வாய் வன்முறைகள், நடை உடை பாவனை போன்றவற்றில் காண முடிகிறது. இவற்றையெல்லாம் முன்பு புலிகளும் இவர்களும் விடுதலையின் பெயரால் செய்தனர். இப்போது புலிகள் அழிந்து போன நிலையில் ஏனையவர்கள் அபிவிருத்தியின் பெயரால் செய்து வருகின்றனர்.
இவற்றுக்கு அப்பால் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி என்பதில் அரசாங்கம் காட்டும் அக்கறையும் தூரநோக்கும் வேறுபட்டதும் அபாயகரமானதுமாகும். அவர்களது அபிவிருத்தி முழக்கத்தில் தமிழ்த் தேசிய இனம் சனத்தொகையிலும் பிரதேசத் தொடர்ச்சியிலும் ஒன்றிணைந்த ஒரு இனத்துவ வளர்ச்சியுடன் இருப்பதை மறுப்பதாகும்.
அதன் அடிப்படையில் ஏற்கனவே வடக்குக் கிழக்கு இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அத்துடன் கிழக்கு தமிழ்-முஸ்லிம்-சிங்கள அடிப்படையில் பிரிக்கப்பட்டு வருவதுடன் நிலப் பறிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் கிழக்கின் வளங்கள் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கேள்வி நியாயமின்றி தாரை வார்க்கப்படுகின்றன.
இவை அபிவிருத்தியின் பெயரால் தான் செய்யப்படுகின்றன. இவற்றுடன் பௌத்த சிங்களத் திணிப்பும் அடையாளப்படுத்தலும் அவற்றுக்கு திரிபுபடுத்தப்பட்ட வரலாற்று விளக்கங்களும் வழங்கி விகாரைகள் எழுப்பப்படுகின்றன.
இதன் வேகமான வேலைகளை வடக்கில் முன்னெடுத்து அங்கு
இதில் அபிவிருத்தியானது மக்களின் அடிப்படைத் தேவை என்பதற்கு அப்பால் பேரினவாத இருப்பின் எதிர்காலமே பிரதான கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆளும் வர்க்க அரசாங்கத்தின் தற்போதைய போக்கிற்கு விரும்பியோ விரும்பாமலோ அன்றி நிர்பந்தத்தாலோ தமிழ்க் கட்சிகள் ஆமாம் போட்டு அல்லது மௌன அங்கீகாரம் வழங்கி நிற்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதையும் செய்ய இயலாத்தனத்தில் இந்தியாவிடம் இடையிடை முறையிடுவதைத் தவிர வேறு வழி இன்றி இருந்து வருகிறது.
அவர்கள் தமிழ் மேட்டுக் குடியினரின் பிரதிநிதிகள் என்பதால் சாதாரண உழைக்கும் தமிழ் மக்கள் பற்றி அவர்கள் அக்கறை கொள்ள வேண்டியதில்லை.
அரசாங்கம் எல்லாத் தரப்பையும் ஏதோ ஒருவகையில் மிரட்டி அச்சுறுத்தி சலுகை வழங்கி முதுகில் தட்டி தன் ஆளும் வர்க்க நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி நிற்கிறது. அதேவேளை வடக்கு கிழக்கில் எவ்வித அரசியல் கோரிக்கைகளோ அன்றி எதிர்ப்பு இயக்கங்களோ முன் எழும்பாதவாறு பார்த்துக் கொள்வதில் ராணுவப்பிடியை வலுப்படுத்தியும் நிற்கிறது. ஆனால் நாளாந்தம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களும் அவர்களது பாரம்பரிய பிரதேசங்களும் அபிவிருத்தியின் பெயரால் உடனடிப் பாதிப்புகளை மட்டுமன்றி எதிர்கால இருப்பையும் இழந்து வரும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
இதே நிலைதான் இந்த அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளையும் சலுகைகளையும் வாங்கிக் கொண்டு தமது மக்களுக்குப் புறமுகுது காட்டி வரும் முஸ்லீம் மலையகத் தமிழ்த் தலைமைகள் தமது மக்களுக்குச் செய்வதாக உள்ளது. முஸ்லீம் மக்களும் குறிப்பாக மலையக மக்களும் அபிவிருத்தியின் பெயரால் எவற்றைப் பெற்றார்கள் என ஒரு புள்ளி விபர மதிப்பீட்டை எடுத்தால் அங்கு உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவே செய்யும்.
எனவே அபிவிருத்தியின் அற்ப சொற்பத்தை அனுபவித்து அதற்குள் மூழ்கித் தமது சுயத்தையும் எதிர்காலத்தையும் தமிழ் மக்கள் இழந்து கொள்ள வேண்டுமா? அல்ல இதுவரையான பட்டறிவுகள் மூலமான அரசியல் மார்க்கத்தை மறுமதிப்பீடு செய்து புதிய அரசியல் பாதையில் பயணிப்பதா? மக்கள் தான் தீர்மானிக்க வேண்டியவர்கள். அபிவிருத்தியின் பெயரில் நமது மக்களின் மத்தியில் திணிக்கப்படும் ஒவ்வொன்றைப் பற்றியும் உடனடியானதும் தூரநோக்குடனுமான கண்ணோட்டம் செலுத்தப்பட வேண்டும். நல்லனவற்றை வரவேற்க வேண்டும். தீய விளைவுகட்கும் அழிவுகட்கும் இட்டுச் செல்லக் கூடிய ஒவ்வொன்றையும் எதிர்த்து நிற்க வேண்டும்.
புதிய பூமியிலிருந்து…