Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சுன்னாகம் நிலக்கீழ் நீர்: விக்னேஸ்வரன் யாரைப் பாதுகாக்க முயல்கிறார்?

viknesswaranஉப்பின் விலை அதிகரித்தால் கூட மக்கள் அரசைத் திட்டுவார்கள். ஆக, உப்பிலும் அரசியல் உள்ளது. இந்த நிலையில் ஒரு பெரும் பிரதேசம் பல்தேசிய நிறுவனத்தின் இலாப வெறியும் பேரினவாத நோக்கங்களும் கலந்த எண்ணைக் கசிவுகளால் மக்களின் குடியிருப்புக்களை நோக்கித் திருப்பப்பட்டுள்ளமையின் பின்னணியில் அழிவு அரசியலே காணப்படுகின்றது. இதனை அரசியலாக்காதீர்கள் என்று மிகவும் கொச்சைத் தனமாக வட மகாண முதலமைச்சர் கூறியுள்ளார். சிக்கலான பிரச்சனைகள் தோன்றும் போதெல்லாம் நான் அரசியல்வாதியல்ல நிர்வாகி அல்லது நீதிபதி எனக்கூறும் விக்னேஸ்வரன், உலகின் முக்கிய அரசியல் பிரச்சனைகளில் ஒன்றான நச்சு நீர்ப் பிரச்சனையை அரசியல் அல்ல என்கிறார்.

எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் நிறுவனத்தின் நடவடிக்கைகள் 2009 ஆம் ஆண்டிற்குப் பின்பே ஆரம்பித்ததாகவும் ஆனால் அதற்கு முன்பிருந்தே நீரில் இரசாயனப் பதார்த்தங்கள் கலந்திருந்ததாகவும் குறிப்பிடுகிறது. அதனால் தமது நிறுவனமும், தாம் நடத்திய மின் உற்பத்தியும் நீரை நஞ்சாக்கவில்லை என நிறுவ முற்படுகிறது.

விக்னேஸ்வரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘குடாநாட்டின் நிலத்தடி நீர்ப்பரப்பில் எண்ணெய் போன்ற மாசுக்கள் கலந்திருக்கின்றது என்ற செய்தி புதியதல்ல. 2008 ஆம் ஆண்டிலேயே யாழ் மாவட்டத்தின் அப்போதைய அரசாங்க அதிபர் இது குறித்து கடிதம் ஒன்றின் மூலம் இலங்கை மின்சாரசபைக்கு இது பற்றித் தெரியப்படுத்தியிருந்தார். ‘ என்கிறார்.

ஆக, விக்னேஸ்வரனின் அரசியலும் அவர் நியமித்த நிபுணர் குழுவில் முடிவும் பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது.

தொடரும் விக்னேஸ்வரன், “அதனைத் தொடர்ந்து 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் குடாநாட்டின் சில பிரதேசங்களில் எண்ணைக்கசிவு உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. ஆயினும் இது தொடர்பில் பூரணமான ஆய்வுகள் செய்யப்பட்டு முழுமையான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.”

இதில் வேடிக்கை என்றவென்றால் 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு தெளிவானது. நீரில் எந்த அளவிற்கு என்ன பதார்த்தங்கள் கலந்திருக்கின்றன என விலாவாரியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆக, விக்னேஸ்வரன் யாரைக் காப்பாற்ற முயல்கிறார்?

இறுதியாக, ‘பொதுமக்களே! குடாநாட்டு குடிநீர் நெருக்கடியில் எந்த ஓர் விடயத்தையும் நாம் மறைக்க வேண்டிய தேவையோ அழுத்தங்களோ எமக்கில்லை. மாறாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவ் வடமாகாணசபை உறுப்பினர்கள் பொதுமக்களின் பிரச்சினைக்கு உண்மையானதும் நிரந்தர தீர்வினைக் காணும் நோக்கத்துடனும் இதுவரை பல்வேறுபட்ட நடவடிக்கைளை எடுத்து வந்துள்ளது. எதிர்காலத்திலும் அவசியமான நடவடிக்கைகளை எடுக்க முயன்று வரும். அதுவரை பொறுமை காத்து குடாநாட்டின் குடிநீர்ப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வினை நோக்கி முன்நகர வடமாகாண சபையுடன் கைகோர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.’ என்கிறார்.

தீர்வு காண்கிறோம் என்ற தலையங்கத்தில் சுன்னாகம் நீர் சுத்தமானது என வட மாகாண சபை நியமித்த நிபுணர் குழு அறிவித்த போதே மக்கள் கொதித்தெழுந்தனர். மக்கள் வாக்குக் கட்சிகளின் அரசியலையும் நோக்கங்களையும் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மக்களின் குடி நீர்ப் பிரச்சனையின் பின்னணியில் செயற்படும் பல்தேசிய நிறுவனத்தின் அரசியல் உலகளாவியது. எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனம் இலங்கையில் பங்கு சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. அந்த நிறுனத்தின் இயக்குனர்களில் ஒருவரான நிர்ஜ் தேவா ஹேலிஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர். ஹெலிஸ் நிறுவனமே வெலிவேரியாவில் போராடிய சிங்கள மக்களைப் படுகொலை செய்த கிரிமினல் நிறுவனம். ரனிலின் நண்பரான நிர்ஜ் தேவா சிறீலங்கன் ஏயர் லைன்சின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பில்கேட்சுடன் தேவா

ஹேலிஸ் நிறுவனம் மன்னார் கடற்படுக்கையில் எண்ணை அகழ்வு என்ற பெயரில் கடலை நாசப்படுத்தி அழிக்கும் செயற்பாட்டிற்கு இயந்திரங்களை வழங்கி வருகிறது. மன்னார் கடலிலிருந்து இயற்கை வாயு விற்பனை விரைவில் ஆரம்பிக்கும் என இலங்கை மின்வலு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மைக்ரோ சொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் போலியோ தடுப்பு மருந்து வழங்குவதாகக் கூறி இந்திய குழந்தைகளின் உடலில் அதனைப் பரிசோதித்து குழந்தைகளைக் கொன்றமை உலகம் முழுவதும் பேசப்படுகிறது. பில் கேட்ஸ் குழுவுடன் இந்தியா சென்ற ஒரே ஆசிய நாட்டவர் இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் வசிக்கும் நிர்ஜ் தேவாவே.

ஆக, சுன்னாகம் நிலத்தையும் நீரையும் நஞ்சாக்கும் நிகழ்வு அரசியலே. போலி நிபுணர்கள் குழுவை நியமித்து போலு அறிக்கை தயாரித்து சுன்னாகம் நீரில் நச்சுப் பொருட்கள் இல்லை என அறிவித்துவிட்டு அதன் பின்புலத்தில் அரசியல் இல்லை என விக்னேஸ்வரன் கூறுவது அப்பட்டமான பொய்.

விக்னேஸ்வரனின் போலித் தேசியம் புலம்பெயர் போலித் தேசியவாதிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர்கள் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக விக்கியைப் பாதுக்காக்க முயற்சிக்கின்றனர்.

இதோ முதலமைச்சரின் அறிக்கை:

குடாநாட்டின் சில பிரதேசங்களில் நிலத்தடிநீர் மாசடைந்திருப்பது தொடர்பில் பொதுமக்களின் கரிசனைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல்வேறு தரப்பினரும் முயன்று வருவதுடன் இது தொடர்பில் வடமாகாண சபை அசமந்தப் போக்கில் உள்ளது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முனைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. அவர்களுடைய நடவடிக்கைகள் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதை நோக்கிச் செல்லாது பிரச்சினைக்கான குற்றச்சாட்டினை எம் மீது முன்வைப்பதனை மையமாகக் கொண்டு நகர்ந்து செல்கின்றது. இவ்வாறான செய்கைகள் குடிநீர்ப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைப் பெற்றுத்தரப் பயன்படப் போவதில்லை என்பதுடன் பொதுமக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகின்ற ஒரு முயற்சியாகவே அமைந்துள்ளன.


நீண்டகாலப் பிரச்சினை

குடாநாட்டின் நிலத்தடி நீர்ப்பரப்பில் எண்ணெய் போன்ற மாசுக்கள் கலந்திருக்கின்றது என்ற செய்தி புதியதல்ல. 2008 ஆம் ஆண்டிலேயே யாழ் மாவட்டத்தின் அப்போதைய அரசாங்க அதிபர் இது குறித்து கடிதம் ஒன்றின் மூலம் இலங்கை மின்சாரசபைக்கு இது பற்றித் தெரியப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் குடாநாட்டின் சில பிரதேசங்களில் எண்ணைக்கசிவு உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. ஆயினும் இது தொடர்பில் பூரணமான ஆய்வுகள் செய்யப்பட்டு முழுமையான அறிக்கைகள் எதுவும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

தூயநீருக்கான விசேட செயலணி

இந்நிலையில் பொதுமக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு உண்மையானதும் பூரணமானதும் நிரந்தரமானதுமான ஓர் தீர்வினைக் காணும் பொருட்டு நீண்டகால மற்றும் உடனடித் தீர்வு நோக்கி வடமாகாண சபையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதில் முதலாவதாக, 9 பேர் கொண்ட தூயநீருக்கான விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் ஆகியோரை இணைத்தலைவர்களாகக் கொண்ட இச்செயலணியில் வடமாகாண, மற்றும் வேற்று மாகாண நிபுணர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இவர்கள் இப்பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து பூரண அறிக்கை ஒன்றினை ஏப்ரல் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.

ஓர் தற்காலிகத் தீர்வாக பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகம் ஒன்றினை மாகாணசபை உள்;ராட்சி அமைப்புக்களுக்கு ஊடாக ஆரம்பித்து அதனைத் திறம்பட செயற்படுத்தி வருகின்றது.

இதனது இன்னொரு நடவடிக்கையாக நீரில் கலந்திருக்கக் கூடிய எண்ணெயின் அளவுகளை மிக விரைவாக கண்டறியக்கூடிய இயந்திரம் ஒன்றின் தேவையினைக் கருத்தில் கொண்டு நிபுணர்குழுவின் சிபார்சிற்கமைய புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் பொருத்தமான இயந்திரம் ஒன்றினை பெற்றுக்கொடுக்கவும் வடமாகாண சபை நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் பயனாக நிபுணர் குழுவிடம் இருந்து இடைக்கால அறிக்கை ஒன்றினைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆயினும் இது ஓர் இடைக்கால அறிக்கை மாத்திரமே. இறுதி அறிக்கை வரும் வரை காத்திருப்பதே பொருத்தமான செயலாகும். அதனை இம்மாத இறுதியில் பெற்றுக்கொள்ளலாம் என நம்பப்படுகிறது. அதுவரை குறித்த கிணறுகளில் இருந்து நீரைக் குடிக்காதிருப்பதே உசிதம்.


முதலமைச்சரின் தலைமைத்துவம்

இந்நிலையில் தூயநீருக்கான விசேட செயலணிக்கு என்னைத் தலைமைதாங்கும்படியும் அதன் செயற்பாடுகளில் நேரடியாக தொடர்புபடும்படியும் சிலர் வலியுறுத்தி வந்தனர். சிறப்பான நிர்வாகம் என்பது பொருத்தமான அதிகார பகிர்ந்தளிப்பின் மூலமே சாத்தியப்படும். இந்த வகையில் இத்துறையுடன் தொடர்புடைய இரண்டு அமைச்சர்களுக்கு இவ் விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை இடுவதற்கான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக துறைசார் வல்லுனர்களைக் கொண்ட குழுவொன்று இது தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு வருகின்ற வேளையில் இவ் விடயம் பற்றி ஊடகங்களுக்குத் தொடர்ச்சியாகக் கருத்துக்களை தெரியப்படுத்துவதன் மூலம் பிரபலம் தேடவேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லையாதலால் பொருத்தமான அதிகாரப் பகிர்ந்தளிப்பைச் செய்து இறுதி அறிக்கை வரும் வரை காத்திருக்க முடிவுசெய்திருந்தேன். நேற்றைய தினம் கௌரவ ஆளுநர் அவர்கள் தம்முடன் இணைந்து இது சம்பந்தமாகச் செயல்ப்படும்படி கேட்டபோது கட்டாயமாக நாங்கள் எங்கள் ஒத்துழைப்பை எங்கள் மக்கள் நலன் கருதி வழங்குவோம் என்று கூறினேன்.

எனினும் சிலரின் நடவடிக்கைகளை ஆழ்ந்து ஆராய வேண்டியுள்ளது.

உள்நோக்கம் கொண்ட செயற்பாடுகள்

தேர்தல் காலங்களில் ஏதாவது ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்து அதன் மூலம் மக்களிடம் தமது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள முனைவதும் தேர்தலுக்காகத் தம்மை ஆயத்தப்படுத்திக்கொள்வதும் வழக்கமான ஒன்றேயாகும். அந்த வகையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை நோக்காகக் கொண்டு சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் நேரடியாகவும் சில அமைப்புக்களைப் பயன்படுத்தி மறைமுகமாகவும் குடாநாட்டு குடிநீர்ப்பிரச்சினையைக் கையில் எடுத்து கொண்டதுடன் மக்களைத் தேவைக்கதிகமாகப் பதட்டமடைய வைத்து வருகின்றார்கள் என்று கருதமுடிகின்றது. அவ்வாறானவர்கள் தயவு செய்து மக்களின் குடிநீர்ப் பிரச்சினையை அரசியலாக்கி மக்களைப் பதட்டமடையச் செய்யாதீர்கள் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.


தீர்வை முன்வையுங்கள்

குடிநீர்ப் பிரச்சினை பற்றி பிரஸ்தாபிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறுமனே ஊகங்களின் அடிப்படையில் பிரச்சினையைப் பெரிதுபடுத்தி கருத்துக்களை வெளியிடுவதிலும் அதன்மூலம் மக்களை பதட்டமடையச் செய்யும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறார்களே தவிர யாழ் குடாநாட்டின் குடிநீர்ப் பிரச்சினையை எவ்வாறு அணுகலாம் அதற்கான நிரந்தர தீர்வினைக் காண்பதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி ஆக்கபூர்வமான கருத்துக்கள் எதனையும் இதுவரை முன்வைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு பிரச்சினையை பெரிதுபடுத்துவது இலகு. ஆனால் அதன் மூலம் பொதுமக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. இப் பிரச்சினையில் உண்மையான அக்கறை கொண்டுள்ள சூழலியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள் பொதுமக்கள் மற்றும் அமைப்புக்கள் இப்பிரச்சினை தொடர்பில் தமது ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைப்பதே பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் என நான் கருதுகின்றேன். இதனால்த்தான் கௌரவ ஆளுநருடன் சேர்ந்து வருகின்ற ஞாயிறு காலை 9.30 மணிக்கு சகலரையும் கூப்பிட்டு ஒரு கூட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளேன்.

நிறைவாக குடாநாட்டின் குடிநீர்ப் பிரச்சினையில் அக்கறை கொண்ட தரப்பினர் இது குறித்து வெறுமனே பத்திரிகை அறிக்கைகளையும் எதிர்மறையான கருத்துக்களையுங் கேட்டு விட்டு கவனயீர்ப்பு போராட்டங்களை மாத்திரம் மேற்கொள்ளாது இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான பங்களிப்புக்களை வழங்கும் பொருட்டு வடமாகாணசபையுடனும் கௌரவ ஆளுநருடனும் இணைந்து செயலாற்ற முன்வருதல் அவசியம். அதுவே இன்றைய தேவையுங் கூட.

பொதுமக்களே! குடாநாட்டு குடிநீர் நெருக்கடியில் எந்த ஓர் விடயத்தையும் நாம் மறைக்க வேண்டிய தேவையோ அழுத்தங்களோ எமக்கில்லை. மாறாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட இவ் வடமாகாணசபை உறுப்பினர்கள் பொதுமக்களின் பிரச்சினைக்கு உண்மையானதும் நிரந்தர தீர்வினைக் காணும் நோக்கத்துடனும் இதுவரை பல்வேறுபட்ட நடவடிக்கைளை எடுத்து வந்துள்ளது. எதிர்காலத்திலும் அவசியமான நடவடிக்கைகளை எடுக்க முயன்று வரும். அதுவரை பொறுமை காத்து குடாநாட்டின் குடிநீர்ப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான தீர்வினை நோக்கி முன்நகர வடமாகாண சபையுடன் கைகோர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன். தீர்வு கிடைக்கும் வரையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குத் தூயநீர் தொடர்ந்து கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

Exit mobile version