Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கஜேந்திரகுமாரின் தோல்வி : புலம்பெயர் பிழைப்புவாதிகளுக்கு மக்களின் ஆணை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு : 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
 ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி : 1 நாடாளுமன்ற உறுப்பினர்
 ஐக்கிய தேசியக் கட்சி : 1 நாடாளுமன்ற உறுப்பினர்
 மொத்த வாக்காளர்கள் : 529, 239
 அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் : 325, 805
 நிராகரிக்கப்பட்ட வாக்குகள் : 25496
 ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் : 300, 309

வாக்குக்களின் அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதன் வேட்பாளர்களும் இணைந்து பெற்ற வாக்குக்களின் தொகை பதின் ஐந்தாயிரத்து இருபத்து இரண்டு மட்டுமே. அதிலும் ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றை விடக் குறைவான வாக்குகளையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெற்றுள்ளது.

வாக்களித்தவர்களில் பெருந்தொகையான முன்னை நாள் போராளிகள், வன்னியிலிருந்த புலிகளின் ஆதரவாளர்கள் போன்ற பலர் உள்ளடங்குவர். புலிகளின் தொடர்ச்சி எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட கஜேந்திரகுமர் பொன்னம்பலமும் அவரது கட்சியான அகில இலங்கைத் தமிழ் காங்கிரசும் மக்களின் கொல்லைப் புறத்தைக்கூட எட்டிப்பார்க்கவில்லை,

மாற்றத்திற்கான குரல் என்று கூறி பல மாதங்களுக்கு முன்பிருந்தே புலம்பெயர் நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் அரசியல், இனக்கொலையாளி மகிந்தவின் கட்சியை விடக் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.

மக்கள் மாற்றத்திற்கான குரலை விரும்புகிறார்களா இல்லையா என்பதைப் பரிசோதிப்பதற்கான களமாக இத் தேர்தல் அமையவில்லை, மாறாக மாற்றம் ஏற்படுத்தப் போவதாகக் கூறிய போலிகளை வீட்டுக்கு அனுப்புவதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

புலிகளின் அரசியல் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை மக்கள் மயப்படுத்துவதை விரும்பாத புலம்பெயர் பிழைப்புவாத வியாபாரிகள் கஜேந்திரகுமாரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காகப் பணம் சேர்க்க ஆரம்பித்து பல மாதங்கள் கடந்துவிட்டன. இறுதிப் போருக்காகப் பணம் சேர்த்த அதே குழுக்கள் அப்பணத்தை இன்னும் மக்கள் மயப்படுத்தவில்லை.

அவை தனியுடமையாக்கப்படுள்ளன. ஈழ மக்களின் அவலங்களை முன்வைத்துச் சொத்துச் சேர்த்துக்கொண்ட அதே குழுக்கள் இப்போது புலிகளின் பெயரால் மீண்டும் சொத்துச் சேர்க்க ஆரம்பித்திருந்தன. கஜேந்திரகுமார் சிறிய வெற்றி பெற்றிருந்தால் கூட இவர்களின் சூறையாடல் தொடர்ந்திருக்கும்.

புலம் பெயர் மக்கள் மத்தியிலுள்ள சிறிய குழுக்களே இவ்வாறான சூறையாடல்களில் ஈடுபடுகின்றன.

ஈழ மக்களின் நலனுக்காக நடைபெற்ற எந்தப் போராட்டத்திலும் பங்குபெறாத இக் குழுக்கள் பணம் சேர்ப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டவை.

இனிமேல் தங்களது பெயரால் பணம் சேர்க்க்க வேண்டாம் என இக் குழுக்களுக்கு மக்கள் இட்ட ஆணையே கஜேந்திரகுமாரின் படுதோல்வி.

Exit mobile version