Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இரா.துரைரத்தினமும் ரவிகுமாரும் ஐபீசி தொலைக்காட்சியும் : வழி பிறழும் விவாதங்கள்

thuratnam_ravikumar_ibcஇரா.துரைரத்தினம் என்ற ஊடகவியலாளர் சமூக வலைத்தளம் ஒன்றில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ரவி குமார் என்ற அரசியல்வாதியைப் ‘பறை நாயே’ என்று அவரது சாதிப்பிரிவு சார்ந்த பெயரைக் கூறி விழித்துள்ளமை தொடர்பாக பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. முதலில் இரா. துரைரத்தினத்தின் கருத்து கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல, அதன் பின்புலத்தில் புதைந்திருக்கும் மனோ நிலைக்கு எதிரான போராட்டமும் எமது சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டும். துரைரத்தினம் பிரதிபலித்ததுள்ளது மொத்த சமூகத்தின் மனோநிலையையே.

ஆயுதப் போராட்டம் எங்கு நடந்தாலும் அதற்கான ஆள்பல தேவைக்காக சமூக ஒடுக்குமுறைகள் தணிந்திருக்கும். ஈழப் போராட்ட காலத்திலும் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதீயினரின் பங்களிப்புத் தேவைப்பட்டது. சாதீயம் பெண் ஒடுக்குமுறை போன்றவற்றிற்கு எதிராக ஆயுதப் போராட்டத் தலைமைகள் செயற்பட்டனவாயினும் அதனை முற்றாக அழிப்பதற்கான வர்க்கம் சார்ந்த கோட்பாடுகளை யாரும் கொண்டிருக்கவில்லை. ஆக, புரையோடிப் போயிருந்த சாதிய மேலாதிக்க மனோபாவம், இன்று அதன் புதிய ஆதிக்க எல்லைகளை வகுத்துக்கொள்கிறது.

துரைரத்தினம் போன்றவர்கள் போருக்குப் பின்னான சமூகத்தின் வெளித்தெரியும் பிரதிநிதிகளே என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. அதிலும் புலம்பெயர் சமூகத்தில் சாதிய முரண்பாடுகள் மிகவும் அழுத்தமானதாகக் காணப்படுகின்றன. புலம்பெயர் நாடுகளின் அரசியல் சூழலோடு இரண்டறக் கலந்துவிட முடியாத தமிழர்கள் தமது அடையாளங்கள் அனைத்தையும் பல தசாப்பதங்களுக்கு முன்பிருந்த நிலையிலேயே பேணிவருகின்றனர். ஆக, முழு சமூகத்தின் ஆதிக்க சாதி மனோபாவத்தின் ஒரு உதாரணம் மட்டுமே துரைரத்தினம்.

இவ்வாறான சிக்கல்களை தனிமனிதர்களின் மனோபாவமாக மட்டும் கருதுவது மிகவும் தவறான முடிவுகளுக்கே நம்மை அழைத்துச்செல்லும்.

போருக்குப் பின்னான சாதீய முரண்பாடுகள் ஆழமடைந்துள்ளதைத் தொடர்ந்து தோன்றியுள்ள சூழலில் ஆதிக்க சாதியினரின் எழுச்சி மட்டுமல்ல சாதீய அடையாளத்தைப் பயன்படுத்தி சுயலாபமடையும் குழுக்களின் எழுச்சியும் சமூகத்தின் உள்ளார்ந்த பிரச்சனைகளை மறைத்து அதிகாரவர்க்கத்திற்குத் துணை செல்கிறது.

இன்று துரைரத்தினத்திற்கு எதிராகப் பேசுகின்ற முகநூல் நண்பர் குழுக்களில் பெரும்பாலானவர்கள் அதன் மறுபக்கத்தை மறந்துவிடுக்கின்றனர். சாதீய அடையாள அரசியலால் சுயலாபமடையும் குழுக்கள் துரைரத்தினத்தைப் பயன்படுத்தி சமூகத்தின் அடித்தளத்திலுள்ள முரண்பாடுகளை மறைத்துவிடுகின்றனர். இக் குழுக்களையும் அதிகாரவர்க்கமே வளர்த்தெடுக்கின்றது. ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாகவே பெரும்பாலான சாதியக் குழுக்கள் செயற்படுகின்றன. ரவிகுமார் இந்த அடையாளக் குழுக்களை தோற்றுவிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். பின்நவீனத்துவ அடையாள அரசியல் என்ற அழிவை தென்னித்தியாவில் புகுத்திய ஆரம்பகால முகவர்களில் ரவிகுமாரும் ஒருவர்.

ஆக, துரைரத்தினத்தின் சாதீய வெறி என்பது ரவிகுமாரின் கருத்தை அடிப்படையாகக் கொண்ட அனைத்துக் குழுக்களுக்கும் பொன்முட்டை போடும் வாத்து.

ரவிகுமாருக்கு ஐ.பி.சி தொலைக்காட்சி வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கியிருப்பதை திருப்பிப் பெற வேண்டும் என்பது இதே முகநூல் காரர்கள் பலரின் கோரிக்கை. ஐ.பி.சி என்பது வியாபார நிறுவனம். அதனைச் சமூகப்பற்றுள்ளதாகக் கருதிக் கோரிக்கை முன்வைப்பது என்பது கேலிக்குரியது. தற்செயலாக ஐ.பி.சி, துரைரத்தினத்தின் விருதைத் திரும்பப் பெற்றுக்கொண்டால் அது மக்கள் சார்ந்த நிறுவனம் என்று இவர்கள் அறிப்பார்களா என்ன?

Exit mobile version