Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆயுத பூஜை என்றால் என்ன? – சித்தர்கள் கூறிய விளக்கம் – டென்சிசன்

ஈ.வே ராமசாமி ஐயா எழுதிய கட்டுரையை வாசித்து, அதில் உள்ள தவறுகளை கண்டறிந்ததன் விளைவாகவும், அக்கட்டுரை, முற்றுமுழுதாகவே, போதிய விளக்கம் இன்மையால் தவறாக எழுதப்பட்டிருக்கிறது என்பதனை, இனியொரு வாசகர்களுக்கு சுட்டிக்காட்டிட இக்கட்டுரையை எழுதுகின்றேன். இக்கட்டுரையை எழுத்தொடங்குவதற்கு முன், எமது சமூகத்தில், அந்தணர்கள், பிராமணர்கள் எனும் பெயர்களில் உலாவும், போலி மத போதகர்களை பற்றி எனக்கு கிடைத்த சில தகவல்களை கீழே இணைத்துள்ளேன். அதனை வாசித்து அந்தணர் என்போர் யார்? பார்ப்பனர் என்போ யார்? என்பதனை பற்றிய விளக்கத்தினை பெறல், இக்கட்டுரையை மென்மேலும் விளங்கி கொள்ள உதவும் என்பது எனது கருத்து. -டென்சிசன் (இனியொரு ஆசிரியர் குழு)

” பாரப்பா பல வேத நூலும் பாரு ” என்று மெஞ்ஞான தேடலை பல நூல்களை கற்று தேட சொல்கிறார்கள் அகத்தியர் எனும் தமிழ் சித்தர் பெருமகன்.

இங்கு வேதம் என குறிப்பிடபடுவது யாதெனில், மனிதன் புற விடயங்களில் நாட்டம் செலுத்தாது, அக வணக்கம் செய்து, தன் மனதினை தூய்மைப்படுத்தி, தாமும் இறைவர்களாக முடியும் என்பதனை விளக்க, தமிழ் சித்தர் பெருமகன்களால், மக்கள் அனைவரும் பயன்பெற, எழுதி அருளச்செய்யப்பட்ட, மெஞ்ஞான வழியை சூக்குமமாக விளக்கும் நூல்களாகும். ஆக, இங்ஙனம் சித்தர்களினால் எழுதப்பட்ட வேதத்தை, “மெஞ்ஞான நூல்களை ” படித்து, அதன் நுண் பொருளை உணர்ந்து, வணக்கம் செய்பவரே அந்தணர் ஆவார்! அத்துடன் “அந்தணர் என்போர் அறவோர் ” என்று திருவள்ளுவர் பெருமகனும் கூறுகின்றார். இது, துறவி என்பவர்கள் யார் எனில், உண்மையான பொருளுடைய மெஞ்ஞானத்தினை, கற்று, உணர்ந்து, அதன் வழி ஒழுக்கம் தவறாது, அற வழி நின்று, அதாவது, “எந்த உயிர்க்கும் தீமை செய்யாது, உயிர்களிடத்து அன்பு செய்து, அவைகளின் பசி பட்டினி போக்கிட, ஈகை செய்பவரே” அந்தணர் ஆவார் என்கிறார் வள்ளுவப்பெருந்தகை. ஆக நாம் உண்மையை அறியாது, குடுமி வைத்து கொண்டு, பூணூல் போட்டவர்களை அந்தணன் என்று கருதி, அவர்கள் செய்வதை பூசை முறைகள் என்று கருதி, போலி வழிபாட்டு முறையினை பின்பற்ற கூடாது.

இதனையே சிவவாக்கியர் சித்தரும் தான் பாடி அருளிய பாடல்களின் உடாக எடுத்து காட்டமாக விளக்குகின்றார். அவர் பாடிய பாடலொன்றும் அதன் பொருளொன்றும் பின்வரும் பந்தியில் இருக்கின்றது.

“நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது, அந்த உணவின் ருசியை உணர்ந்து கொள்ளாதது போலவே, மனக்கோயிலினுள் இறைவன் இருப்பதை அறியாமல், வெறும் கல்லை நட்டு வைத்து, தெய்வமென்று பெயரிட்டு, பூக்களாலும் மந்திரங்களாலும் வழிபாடு செய்வது
அறியாமையேயாகும் என்கிறார் சித்தர் சிவவாக்கியர். மேலும் அவர், போலி சமய, சாதி முறைகளினை, வேரறுக்க பாடிய புரட்சி பாடல்களினை, பொருளுடன் வாசிப்பதற்கு இங்கே சொடுக்கவும்.

வேதம் ஓதி உணர்ந்த, அதாவது மெஞ்ஞான நூல்களை கற்றறிந்த அந்தணர் ‘பார்ப்பார்’ எதனை? தன் கண்மணி சிக்குண்டு இருக்கும், வினை திரைகளை, மாயைகளால் சிக்கி உழலும் மனம் எனப்படும் பிராண வாயு ( இரவு வேளைகளிலும், பகல் வேளைகளிலும், அந்தி வேளைகளிலும், நாம் சுவாசிக்கும் வாயு, இடது பக்க நாசி துவாரத்தினூடாக அதிக அளவில் செல்லும்; ஆனால் அதிகாலை சூரிய உதய நேரத்திற்கு அண்மையாக, மற்றும் இரவை அண்மிக்கும் நேரம், அதாவது சூரியன் மறைவதற்கு சற்று முன், எமது சுவாச காற்று, வலது நாசி துவாரத்தின் ஊடாக செல்லும் என்பதுடன், இவ்வேளைகளில், இயங்கும் மூளியினை நாம், எமது தியான பயிற்சியினால், மூளியின் இரத்த ஓட்டம் காரணமாக தழும்பும், சிந்தனைகளை, இரு முறை “ஓம் நமசிவாய” என உச்சரிக்க, அது கட்டுக்குள் வருவதுடன், தொடர்ந்தும் இப்பயிற்சியினை மேற்கொள்ள, மூளியானது, தேவையற்ற வெளியுலக ஆசைகளை தானே இனங்கண்டு, அகற்றும் தன்மையினையும் பெறும். இப்பயிற்சியினை மேற்கொண்டு ஞாபக சக்தியினை அதிகரித்து கொள்ளவும் முடியும். இதில் மேற்குறிப்பிடப்பட்ட நமசிவாய எனும், பஞ்சாட்சர மந்திரமானது, பஞ்ச பூதங்களாகிய முறையே, ந என்பது நீரையும், ம என்பது நிலத்தையும், சி என்பது நெருப்பினையும், வா என்பது வாயு என்பதையும், ய என்பது ஆகாய வெளியினையும் குறித்து நிற்பதுடன், இயற்கையில் உள்ளவை அனைத்தும், மனிதனின் உடலிலும் இருக்கின்றது என்பதனை, மெஞ்ஞான நூல்களை கற்று அறிந்து உணரவும் முடியும். ) எனும் வாயுவின் துணை கொண்டு, அகற்றுவதன் ஊடாக, மனதினை கட்டுக்குள் கொண்டுவந்து, மனதினை வென்ற ஞானியே, பிராமணன் ஆவான். நீங்கள் வெறுமனே, பிராமணர்களை தூற்றுவதிலும் பார்க்க‌, தற்கால கோயில்களில், போலி பூசைகள் செய்யும் போலி பிராமணர்களிடம், இது பற்றிய கேள்விகளை முன்வைப்பதன் ஊடாக, அவர்களை சமூகத்தில் இருந்து அகற்ற வேண்டும்; என்பதுடன், இவர்கள் காரணமாக; தோற்றுவிக்கப்பட்ட சாதிக்கட்டமைப்பை அழிக்க, இதுவே, சிறந்த, மற்றும் முறையான வழியாகும் என்பதுடன் பயனையும் தரும். பார்ப்பனர்கள் என்பதுவும் மேற்கூறப்பட்ட பொருளுடையது என்பதுடன், தன்னையே அறிந்து, உயிராகிய இறைவனைய பார்ப்பவரையே பார்ப்பான் என கொள்ளுதல் வேண்டும்.

பரம் பொருளாகிய இறைவன், நம் உயிராகி, ஒன்றானவனாக துலங்கி, அவரே நம் இரு கண்களிலும், கண் மணி ஒளியாக இரண்டாகவும் துலங்குகிறார், என்பதே மெஞ்ஞானம் கூறும் விளக்கமாகும். ஒன்றான ஜீவன், இரண்டான, இரு கண் ( வலது கண் சூரிய ஒளி, இடது கண் – சந்திர ஒளி ) ஒளியுடன் சேர, மூன்றும் சேர்ந்தால், அதுவே ஓங்காரம் ஆகும்! அதுவே பிரணவ மந்திரமென சைவ நெறியினால் விளக்கப்படுகிறது. அத்துடன் ஓம் எனும் சொல்லினை விரிபுபடுத்தி பார்ப்போமெனில், அ, உ, ம் எனும் எழுத்துக்கள் இணைந்து இருப்பதனை விளங்கி கொள்ள முடியும். ‘அ’ என்பது சூரிய கலையாகிய, வலதுபக்க நாசி தூவாரத்தின் ஊடாக, செல்லும் சுவாசக்காற்று அடி வயிற்றில் எழுப்பும் ஒலி என்பதுடன், ‘உ’ எனும் உகாரம் என்பதாவது, இடதுபக்க நாசி துவாரத்தின் ஊடாக வெளி செல்லும் சுவாசக்காற்று அடிவயிற்றில் எழுப்பும் ஓசை என்பதுடன், ‘ம்’ என்பதாவது, நமது உள்நாக்கின் மேற்பகுதியில் உள்ள, ஒரு பகுதியில், சுவாசங்களினால் ஏற்படும் ஒரு ஒலி என்பதுமாகும். இவற்றை நாம் ஒன்றாக உச்சரிக்கும் போது, பெறப்படும் ஓசைதான் “ஓம்” எனப்படும் பிரணவ மந்திரம் ஆகும். இதனையே பிரணவ மந்திரம் என சைவர்கள் உச்சரிப்பதுடன், புலால் உண்ணாது, நாம் பிரணவ மந்திரத்தினை உச்சரிக்கும் போது, நாம் செய்யும் பாதகச் செயல்கள், பாவங்களினால், மூளையின் நாடி, நரம்புகளினால் உடம்பில் ஏற்படுகின்ற, மும்மலங்களால் ஏற்படும் மாற்றங்கள் மாறி, மூளியின் மையப்பகுதியில் ஆரம்பித்து, இறைசக்தியினால், நம் உடம்பினை சுற்றி, மலங்களினால் கட்டுண்ட, நாடி, நரம்புகள் யாவும் ஒளி பரவி, நம் உடம்பு, ஒளியுடம்பாக மாற்றம் பெறும். இதனையே ஒளி பெற்று வாழ்வு ஆங்கு வாழ்வர் என நம்முன்னோர் கூறி, நம்மையும் சைவ நெறியினை கடைப்பிடிக்க சொல்லி கூறியுள்ளதுடன், இவ் ஒளியுடம்பினை பெற, நாம், புலால் மறுத்து, சைவ உணவினை கடைப்பிடித்து, பாவங்களினை செய்யாது, மாதம் ஒரு முறையாவது ஏழை எளியவர்களிற்கு தானம் செய்து வந்து, நம் பாவங்கள் தீர, தினமும் காலை, மாலை வேளையில் சூரியனை வணங்கி வர வேண்டும். மற்றும் நம் உடலமைப்பானது, சைவ உணவு முறைக்கு ஏற்றாற்போலவே அமைந்துள்ளது என்பதுடன், உயிர்களின் உட்சுரக்கும் அமிலங்கள் யாவும், சைவ உணவினையே, முறையான சமிபாடடைய செய்யும் வகையிலேயே தான், உயிர்களின் சமிபாட்டு தொகுதி அமைந்துள்ளதும் குறிப்பிடதக்கதும் ஆகும். ( இதனை பற்றிய சிறந்த பதிவினை வாசிக்க இங்கே சொடுக்கவும். ) இவ் உண்மை அறிந்து செயற்படும் மனிதர்கள், தாம் பிறந்த இப்பிறவியின் உண்மை பயனை அடைந்துகொள்ள முடியும் என்பது சித்தர்கள் நமக்கு சொல்லி தந்த பாடமாகும். ஆக நாம் மேற்கூறியவாறு ஒழுக்க நெறியினை கடைப்பிடித்து, ஓம் எனும் சப்தத்தினை தினமும் உச்சரித்து , தினமும் சூரியனை, உதயத்தின் போதும், அஸ்தமனத்தின போதும் வணங்கி வர, நாமும் அந்தணர் ஆகலாம்! பார்ப்பார் -பார்! – பார்! என்ற சித்தர்களின் உபதேசத்தை கேட்டு, தன்னையே, கண்மணி வாயிலாக, ஒளி வழி உற்று பார்ப்பவரே, பார்த்துகொண்டு இருப்பவரே பார்ப்பார். உள் ஒளியை சதா காலமும் பார்ப்பவரே, பார்த்துக் கொண்டிருப்பவரே பார்ப்பார் என்பதுதான் மெஞ்ஞானம் கூறும் உண்மைபொருளாகும்!

ஆக கண்களில், கண்மணியிலே உள் உள்ள, நூல் போன்ற நரம்பினை இணைத்து, தவத்தால், வணக்கத்தினால், மேற்கூறியது போன்று சூரிய, சந்திர, உயிர் ஆகிய மூன்று ஒளிக்கலைகளையும், இணைப்பவரே, அந்தணர் அல்லது பார்ப்பனர் எனப்படுபவர்கள் ஆவர். இதனை அறிந்து கொண்டு, நாம் இவ் உண்மையை, மற்றவருக்கும் விளக்கி, உண்மை வழிபாட்டினை மேற்கொண்டு, மூன்று ஒளிகளையும் இணைத்து, நம் பிறந்த இப்பிறவியை கடைத்தேற்ற, அளிக்கப்பட்ட சித்தர்களினை வழிபடாது, அவர்களை தூற்றுதல் பாவம் ஆகும்.
மேலும் கண்ணுக்குள் உள்ள நூல் போன்ற நரம்பினை இணைத்து பூன வேண்டும்! இதுவே பூணூல் எனப்படவதன் உண்மை பொருளாகும். சூரிய சந்திர, அக்னி ( உயிர் ) ஒளிக்கலைகளை இணைத்து ஒன்றாக்கி இணைத்து முடிவதனையே, சித்தர்கள் வகுத்த மெஞ்ஞானம் குடுமி என விளக்குகிறது. இவ் உண்மை அறிந்து புறத்தில் வேஷம் போடுபவர் வேடர்களை, இனங்கண்டு, புறத்திலே வேஷம் போட்டுக் கொண்டு தாம் உயர்ந்த ஜாதி எனவும், ஜாதி வேறுபாடுகளினை, தோற்றும் போலி மத வழக்கங்களையும், உண்மையை விளங்கி கொண்டு அழிக்க போராடுவது நன்மை பயக்கும்.
இனி “ஆயுத பூஜை என்பது பற்றி, சித்தர்களால் அருளிச் செய்யப்பட்ட மெஞ்ஞான நூல்கள், கூறுவது என்ன?”, என்பது பற்றிய விளக்கத்தினை, கீழே எனக்கு கிடைத்த தகவல்களை பயன்படுத்தி எழுதியிருக்கின்றேன். உங்களது சந்தேகங்களை முன் வைப்பின், சித்தர்கள் அருளினால், அவற்றை தீர்த்து வைப்பதற்கான பதிலையும் என்னால் எழுத முடியும். சந்தேகங்களை தயவு செய்து முன்வைத்து தெளிவினை பெறவேண்டுமே தவிர, போலி பிரமணர்கள் பரப்பிய, போலி வேதத்தினை நம்பி, இறைவனை அடைய வழிகாட்டும், மெஞ்ஞான நெறியினை அறியாது, சித்தர்கள் கூறிய பூசை நெறிகளை தவறென விமர்சித்தல் ஆகாது.

இங்கு படத்தின் மைய பகுதியில் குறிப்பிட்டிருக்கும் பகுதியானது, எமது இரத்த ஓட்டத்தினை கட்டுபடுத்தும் மூளி அமைந்துள்ள பகுதியாகும். இந்த பகுதியிலேயே மனித உடலெங்கும் பரவி இருக்கும், நாடி, நாள, நரம்புகளின் இணைப்பு அமைந்திருக்கிறது என்பது சிறப்பாகும் என்பதுடன், இங்குள்ள ஒரு பகுதியில்தான், நம் உடல் இயங்க தேவையான உயிர்சக்தி இருக்கிறது; அதுவே ஓம் எனும் பிரணவ மந்திரத்தினை உச்சரிக்கும் போது, விழிப்புணர்வு பெறும். அஃதாவது, ஒரு இஞ்சி, மயிரினை, ஆயிரம் பங்காக வெட்டுவதனால் வரும் அளவு ஒளியே, நமது உடலை இயக்குகிறது. இருந்தும், நாம் புலால் சாப்பிடுவதனால், உயிர்களுக்கு செய்யும் கொடுமைகள், மற்றும் மனிதர்கள் செய்யும் பாவ செயல்களான, காமம் ( இது வெறுமனே பாலியல் குற்றத்தை மட்டும் அல்லாது, தமிழ் அகராதியில் குறிப்பிட்டுள்ள களவு, பொய், பொறாமை ஆகியவற்றையும் குறித்து நிற்கும். ), லோபம் ( அதாவது பொருள்களினால் மீதுள்ள மயக்கத்தினால் தவறான வழியில் சம்பாதித்து அதனை அடைய முயற்சி செய்வதனை குறித்து நிற்கும். ), மூடம், ( அதாவது மூட நம்பிக்கைகள் கொண்டு செய்யும் பாவ செயல்கள் ), தாபம் ( இது மக்களினை ஏமாற்றி தவறான கருத்துக்களை திணிப்பதனால் ஏற்படும் பாவ செயல் ), குரோதம் ( இது இறைவர்களை நிந்தனை செய்வதால் ஏற்படும் பாவ செயல்களாகும் ), பாபம் ( அதிக ஆசை கொண்டு உயிர்களை துன்புறுத்தி பொருள் சம்பாதிப்பதினால் ஏற்படும் பாவ செயல் ), வாமணம் ( இது உயிர்களை காக்க வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாதிருப்பதனால் ஏற்படும் பாவ செயல் ), வராகம் ( கடன் மற்றும் வழிப்பறி கொள்ளைகள் மற்றும் ஏமாற்றி சம்பாதிப்பதால் ஏற்படும் பாவ செயல்கள் ), பரவம் ( இது மக்களை தவறான வழியில் நடத்தும் இழிய ஆட்சி செய்வதனால் ஏற்படும் பாவச்செயல் ), பகரந்தம் ( உண்மையான இறை வழிபாட்டினை மக்களிற்கு போதிக்காது, போலி வழிபாட்டின் வழி தவறாக நடத்துவதனால் ஏற்படும் பாவ செயல் ), பலந்தம் ( மிருக வதை செய்வதனால் ஏற்படும் பாவ செயல் ), பரவியம் ( உயிர்களை பலி கொண்டு உண்பதால் ஏற்படும் பாவ செயல் ), தகரம் ( இது மனிதர்கள் சூழலை, இயற்கையை அழிப்பதனால் ஏற்படும் பாவ செயல் ), ஆகியவற்றை புரிவதினால் மூளி பகுதியில் உள்ள அவ் ஒளியாகிய உயிர்ச்சக்தி, தன் தன்மையை இழந்து மறையும் தருவாயில், மரணம் ஏற்படும். இவ் ஒளிச்சக்தியினை, சித்தர்கள் வழிபாட்டின் மூலம், நாம் அடைந்து, நாமும், தேகம் முழுவதும் ஒளியினை பரப்புவதற்கான, மேற் சொன்ன வணக்க முறையின் ஊடாக, சித்தர்களாக முடியும் என்பதே, மெஞ்ஞானம் கூறும் உண்மையாகும். ஆக, இம்மூளி அமைந்துள்ள இப்பகுதியே, மூன்றாவது கண் ஆகும் என்பதுடன், இதனை செயற்படுத்தும், புற உலக இச்சைகளிற்கு, இடம் கொடுக்காது, அக வழிபாட்டின் ஊடாக, அதனை கண்டுணர்ந்து நாமும் சித்தராவோம்.

மூன்று கண்களையும், மயக்கும் ஆயுதங்களாகிய மாய சக்திகள் ( அதாவது காம, கர்ம, வினைகளாகிய மாயை எனும் புற உலகின் மயக்கத்தினால் ஏற்படும் மயக்க சக்தி ), அடங்க தேவையான சக்தியை அடைய, உண்மையான இறை வழிபாடான, சித்தர்கள் வழிபாட்டினை மேற்கொண்டவாறு, மேற்கொள்ளவதே ஆயுத பூஜையின் சிறப்பாகும். இது தொடர்ந்து பத்து நாட்கள், புலால் உணவு மறுத்து, சித்தர்களின் வழிபாடாகிய, ஒளியினை வணங்கும் வழிபாட்டினை, தங்கு தடையின்றி, காலை மற்றும் மாலை என, ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதோடு மேற்கொண்டு, நாம் மேற்சொன்ன பாவச்செயல் நீங்குவதற்கு, தமிழ் சித்தர்கள் சொல்லி தந்த, ஏழை எளியவர்களின், உயிர்களின் பசியினை போக்கும், ஜீவ காருண்யம் எனும் மிக உயர்ந்த புண்ணியத்தினை செய்து வர, நாமும், சித்தர் ஒருவரை, சூக்குமமாக குருவாக பெற்று, ஞான வாழ்வினை பெற்று இறைவர்களாக முடியும். அஃதாவது உள் மனதினை கடந்து, மனதில் தோன்றும் ஆசைகளை தவிர்த்து, மனதினை கட்டுக்குள் கொணர்ந்து, மனம் வெளி ஆசைக்கு மயங்காதிருக்கும் தன்மையை பெற்று, ஒளி உடலினை பெற்று, கடவுள் ஆக முடியும்.

இதனை மேலும் விளக்குவதென்றால், நான் மேற்சொன்ன வகையில், உயிர் சக்தியை மறைத்துக் கொண்டுள்ள, மாயை சக்தியை அடக்கியதன் பின்னர், நமக்கு குருவாக கிடைக்கும் சித்தரானவர், நம்மை, மென்மேலும் ஞான வழியின் ஊடாக அழைத்து சென்று, மேலும், நாம் இப்பிறவியில் செய்தது போன்ற, முற்பிறவியில் செய்த பாவங்களினால் சிக்கியிருக்கும், நமது ஆன்மாவாகிய “உயிர் இயங்க தேவையான சக்தியை” மறைத்திருக்கும், கன்ம திரைகளை எரித்து, அதன் பின்னர் ஆணவ மலமாகிய, “நான்” எனும் ஆணவத்தினை உணர்த்தி, அதனையும் அகற்றி, நம்மை முழுமையான ஞானியாக்கி, சித்தத்தினை தெளிவடைய செய்து, இறைவனுடன் இரண்டற கலக்க ( அதாவது சூரிய சந்திர ஒளியுடன் நம் ஆன்ம சக்தியையும், உயிரினையும் கலக்க செய்தல் ) செய்வார். ஆக ஆயுத பூஜையின் உட்கருத்து இதுவே ஆகும். இன்னும் விரிவாக இது பற்றிய இன்னொரு கட்டுரையில் குறிப்பிடுகிறேன்.

பதிவினை எழுத உதவிய, தூண்டிய‌ கருத்துக்கள்
1. https://www.facebook.com/siddhaconference/photos/a.325678334153155.73260.321473124573676/392927240761597/?type=3&theater
2. https://www.facebook.com/permalink.php?story_fbid=1507979276181263&id=1414886448823880&fref=nf&pnref=story

தற்காலத்தில் வாழ்கின்ற சித்தர் ஆறுமுக அரங்கமகாதேசிகர் பற்றியும், அவர்களினால் நடத்தப்படும் சித்தர் ஆலயம் பற்றி அறிந்துகொள்வதற்கு – www.agathiar.org

 

(இக் கட்டுரை இனியொருவின் கருத்து அல்ல..)

Exit mobile version