Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோடியின் வருகையை எதிர்த்து லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம்: நிர்வாணமான இந்திய ஜனநாயகம்

modi32002 ஆம் ஆண்டு குஜராத்தில் இனப்படுகொலையத் திட்டமிட்டு தலைமை தாங்கி நடத்திய நரேந்திர மோடி இன்று 12.11.2015- பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தினர். பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரனின் அலுவலகம் அமைந்துள்ள டவுணிங் வீதியில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழர்கள், சீக்கியர்கள், குஜராத்தியர்கள், நேபாளிகள், ஆங்கிலேயர்கள் என்ற பல்வேறு மொழி மற்றும் மத அடையாளங்களைக் கொண்டவர்கள் கலந்துகொண்டனர்.

பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டன. மோடி, திரும்பிப் போ என்ற முழக்கம் இன்று லண்டனின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துகொண்டது.

முசோலீனி, ஹிட்லர் போன்றவர்களின் வழியில் இந்து இந்தியாவைக் கட்டியெழுப்புவோம் என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஆர்.ஏஸ்.எஸ் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரான மோடி குஜராத்தில் இனப்படுகொலையைத் திட்டமிட்டு தலைமை தாங்கி நடத்தினார். ஆர்.எஸ்.எஸ் இன் தோழமை அமைப்பான பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளாரக் மோடி தெரிவு செய்யப்பட்ட போது, உலகம் முழுவதிலும் பல்தேசிய நிறுவனங்கள் மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி வழங்கின.

ஈழப் போராட்டத்தை ஆதரிப்பதாகக் கூறும் புலம் பெயர் தேசியக் கோமாளிகள் மோடியை ஆதரித்தனர்.

காலனியத்திற்குப் பின்னான இந்திய அதிகாரவர்க்கம் இஸ்லாமிய எதிர்ப்பு இழையோடும் இந்து பாசிசத்தைத் தனது கோட்பாட்டு ஆயுதமாகப் பயன்படுத்திக்கொண்டது. ஈழப் போராட்டத்தில் இந்தியத் தலையீட்டின் பின்னான காலம் முழுவதும் இஸ்லாமிய எதிர்ப்பு அதன் அனைத்துத் தளத்திலும் வேரூன்ற ஆரம்பித்திருந்தது. மோடியுடன் தம்மை அடையாளப்படுத்திய புலம்பெயர் தமிழ் அடிப்படை வாதிகள் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களாகவும் காணப்பட்டனர்.

மேடியின் அரசியல் எதிரணியாகக் கருதப்பட்ட காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே குஜராத் இனப்படுகொலைக் குற்றங்களிலிருந்து மோடி விடுவிக்கப்பட்டார்.

இந்து பாசிச அதிகாரவர்க்க அரசியல் மோடியைக் குற்றமற்றவராக்கிற்று. குஜராத் இனப்படுகொலைக் குற்றங்களிலிருந்து மோடியை விடுவித்த அதிகாரவர்க்கம் அவரைப் பிரதமராக்கியதன் ஊடாக தன்னை நிர்வாணமாக வெளிப்படுத்திற்று.

2012 ஆம் ஆண்டு தேர்தலில் கொடிய இனகொலையாளியின் கரங்களில் ‘இந்திய ஜனநாயகத்தின்’ கடிவாளம் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அதே இந்திய அதிராகவர்க்கத்தை நிர்வகிக்க ஏற்கனவே கொலைகளின் அனுபவங்களால் புடம்போடப்பட்ட மோடி பிரதமாரன பின்னர், இந்தியா அன்னிய நாடுகளின் கொள்ளைக்கு முன்னெபோதும் இல்லாத அளவிற்குத் திறந்துவிடப்பட்டது.

ஆங்காங்கே சிறிய ஒளிக்கீற்றுகளாகத் தெரிந்த ஜனநாயக இடைவெளி முழுவதுமாக மூடப்படுவதற்கான நடவடிக்கைகளை இனக்கொலையாளி மோடியின் அரசு ஆரம்பித்து.

எது எவ்வாறாயினும் இந்திய ஜனநாயகத்தின் முகத்திரையைக் கிழித்து அதன் கோரத்தை உலகமக்களுக்கு அறிமுகப்படுத்தி, இந்தியாவை அவமானப்படுத்திய ‘பெருமை’ மோடியையே சாரும். இன்று உலகின் அனைத்துப் பல்தேசியக் கொள்ளைக்காரர்களதும், விருப்பத்திற்குரிய மனிதர்களில் மோடி முக்கியமானவர்.

இனவாதம், நிறவாதம், மதவாதம் போன்ற குறுகிய அடையாளங்களை ஆழப்படுத்தி வயிற்றுப்பிழைப்பு நடத்தும் அடிப்படைவாதிகளைத் தவிர மோடியின் பாசிசத்தை மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர். இந்தியப் பிரதமர் ஒருவருக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களுள் இன்றைய போராட்டம் பிரதானமானது, பல்வேறு அமைப்புக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புடன் நடைபெற்ற இந்தப் போராட்டம் ஒடுக்கப்படும் புலம் பெயர் தமிழர்களுக்கு முன்னுதாரணம்.

மோடி போன்ற தீவிர வலதுசாரிகளோடு மட்டுமே அடையாளப்படுத்தப்பட்ட ஈழப் போராட்டம் அதன் திசை வழியை மாற்றிக்கொள்வதற்கான ஆரம்பமாக இன்றைய ஆர்பாட்டம் அமைய வேண்டும்.

Exit mobile version