Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

உஷ்… ! இதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது : கவிதா லட்சுமி

– கருவறைக்கு வெளியே – நூலிலிருந்து-கவிதா லட்சுமி

இந்த கண்ணாடி முன் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன். தினமும் இப்படித்தான் பல நேரங்களில் நான் என்னைப் இப்படி நின்று நிதானமாக எந்த சலனமுமற்றுப் பார்ப்பதுண்டு. கண்ணாடியுள் விரியும் பெருவெளியின் வாடை, விறைத்த காற்று, மௌனத்தின் அலறல் என அனைத்தும் என்னால் மட்டுமே உணரக்கூடியது. வேண்டாம்! கண்ணாடியில் முகங்களை மட்டும் பார்க்கின்றவர்களுக்கான விம்பம் இல்லை இங்கு நான் காண்பது.

அறையின் சாளரக் கண்ணாடி வழியே சூரியகதிர்கள் முகக்கண்ணாடியில் தெறித்து விழுந்துடைகின்றன. இந்தக் கண்ணாடி இருக்கும் அறையில் ஒரு கட்டிலும் பக்கத்தில் ஒரு மேசையும் இருக்கின்றது. அவை தவிர இந்தக்கண்ணாடி மட்டும் தான் இந்த அறைச்சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் பொருள். இந்த அறைச்சுவரின் நிறம் பொருட்கள் எல்லாமே வெளிர் நிறத்தில் இருப்பது எனக்கு முக்கியமானது. வெள்ளை தூய்மையின் நிறமென்றும், அமைதியின் நிறமென்றும், வெளிச்சத்தின் குணம் என்றும் எல்லா இடங்களிலும் வெண்மை பூசி வைத்திருக்கிறேன். பெரிய ஜன்னல்களில் இரவு நேரங்களிலும் வெளிச்சம் பரவ மின்விளக்குகள் எரிந்தபடியே இருக்கும். இரவுகள் பயங்கரமானவை. தூக்கத்தில் இருந்து திடுக்கிடெழுந்து கண்விழித்துப் பார்த்தால் எங்கும் இருட்டு. வானம், பூமி, அறை என் கண்ணாடி அதில் என் முகம் எல்லாம் இருட்டு. சில பகல் நேரங்களும் வெளிச்சம் விழுங்கிய பயங்கர இரவை ஒத்தவையாகவே பிறக்கிறது.

வேலைகளின் இடையிடையே எனது முகத்தைப் பார்ப்பது எனக்குத் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டிருக்கும். எனது முகம் ஒன்றும் அத்தனை அழகில்லை என்பது எனக்குத் தெரியும். ஏனோ ஒரு நாட்கூட இந்த கண்ணாடியைப் பார்க்கும் போது நான் சிரித்ததில்லை. முப்பது வயதை எட்டக்கூடிய சின்னச் சின்னச் சுருக்கங்கள் சில இடங்களிற் தென்படுகின்றன. புன்னகையைச் செதுக்க மறுக்கப்பட்ட ஒரு சிதைந்த சிலையின் முகத்தைத்தான் இந்தக் கண்ணாடி பார்க்கிறது. இந்தக் கண்ணாடி உயிருள்ளது போல நான் பேசும் போது, என்னுடன் பேசுகிறது, அழும் போது என்னுடன் அழுகிறது. அதனாற்தான் இந்த முகக்கண்ணாடியில் எனக்கான விடை, இந்த உலகத்தில் நான் நடமாடுவதற்கான விடை வருமென்று நான் நினைத்துக்கொண்டிருக்கலாம்.

அது கண்ணாடிக்குத் தெரியுமா? இந்தக் கண்ணாடி முன் மட்டும்தான் நான் இப்படி ஒரு விசித்திரமானவளாய், கொஞ்சம் பைத்தியக்கராத்தனமானவளாய் எதையோ தேடுபவளாய் நிற்கிறேன். சூனியமாய், எதுமற்றதாய், வெறும் இருண்ட பிரபஞ்சமாய் தோன்றும் உலகத்தை சற்றே ஒதுக்கி வைத்தபின், மற்ற நேரங்களில் உங்களைப் போல ஒருத்தியாய் என்னை நான் காட்டிக்கொள்ளவும், நடமாடவும் கற்று வைத்திருக்கின்றேன்.

நான் அழகாய் இருப்பதாய்தான் இப்போதும் பலர் சொல்கிறார்கள். அந்த அழகை ஏனோ இந்தக்கண்ணாடி என்னிடம் இருந்து ஒளித்துவிடுகிறது. நானும் எனது புருவத்தை, கண்களிற் தீட்டப்படாத மைப்பகுதியை, காய்ந்த உதடுகளை ஈரப்படுத்தி, எனது மார்புகளின் இறுக்கத்தை, எனது பருமனில்லாத உடல் வாகுவை ஒவ்வொன்றாக கவனிக்கின்றேன். என்னால் ஒருபோதும் என்னை இரசிக்க முடிந்ததில்லை. ஏதோ பல குறைகள் எல்லா அங்கங்களிலும் தெரிகின்றது.

இப்போது சாயங்காலம்.

என்னை யாரும் விரும்புவதற்குரிய அறிகுறியை இன்றும் என் கண்ணாடியில்த் தேடுகின்றேன். என்னை யாரும் காதலிக்க மாட்டார்கள். யாராலும் காதலிக்கப்படுவதர்கோ, அன்புகாட்டப்படுவதற்கோ தகுதியற்றவளின் முகம் எப்படி இருக்கமோ அப்படித்தான் எனது முகம் இருக்கின்றது. யாரும் என்னோடு வாழச் சமத்திக்கமாட்டார்கள். அதற்குரிய தகுதியை நான் அடைந்தவளாக நான் பிறக்கவில்லை என்றும், என்னிடம் வாழ்வதற்கான தகுதி எப்போதும் இருந்ததில்லை என்று எனக்குள் யாரோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சூரியனை அடித்து விரட்டிய இருளின் நிசப்தம் பரவும் வெளிபோல எனது தனிமை என்னைச் சுற்றிப் பரந்துகிடக்கின்றது. இருளை தின்று செமிக்கும் முயற்சியில் எனது வாழ்வு அனலை மென்று முழுங்கிக் கொண்டிருந்தது.

இந்த முகக்கண்ணாடியில் என்னைத் தவிர இன்னும் சில உருவங்கள் வந்து போகின்றன. அவர்கள் என்னுடன் பேசுவதுண்டு பழகுவதுண்டு. இவர்கள் எனக்கு மிக நெருக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும் இவர்களில் எனக்குப் பிடிப்பில்லை. இவர்கள் முர்க்கமானவர்கள். என்னுடைய இந்த முப்பது வயது முகத்தை, அனுபவத்தை எனது வளர்ச்சியை அதன் சந்தோசத்தை அவர்கள் பிடுங்கிவிட்டிருக்கின்றார்கள். இவர்கள் வரும் போதெல்லாம் இந்தக் கண்ணாடியை உடைத்துவிடும் பலம் என் உடம்பில் ஏறும். கைகள் நடுங்கும். ஆனாலும் செய்கையிழந்து நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். சிறு வயதிலிருந்தே பிரியமுடியாத ஒரு பிணைப்பு இந்தக் கண்ணாடியில்த் தோன்றும் மனிதர்களோடு இருக்கின்றது.

இங்கே பாருங்கள் இதில் பருமனாக இருப்பவள்தான் அம்மா. பக்கத்தில் உள்ள முலையில் தலை வாறுப்படதா முகத்துடனுடம், எவ்வித சலனமுமற்று துடிப்பற்று இருப்பதுதான் நான்.

வெளிச்சம் விழுங்கிய பிந்திய அந்தி நேரம். எனக்கு இப்போது ஐந்து வயது.

நீளமான தலைமுடி காற்றில் பறந்து கொண்டிருக்கின்றது. எனது தோல் அதிக மண்ணிறத்தன்மையுடையதாக மாறிக்கொண்டிருக்கிறது. முழங்கால்களில் புண்ணும், சிவப்பேறிய சோகைபடிந்த கண்களும், சோர்ந்த உடற்கட்டும் உள்ள என்னை பார்த்து அதிக நேரம் குளித்திருக்கிறாய் அதுதான் இப்படி இருக்கிறது என்கிறாள் அம்மா. பாடசாலையில் யாரும் எனக்கு என்ன ஆயிற்று என்று விசாரிக்கும் போது நான் சொல்ல வேண்டிய பதில்களை அம்மா எனக்கு இப்படித்தான் ஏதோ ஒரு விதத்தில் சொல்லித் தருவாள். ஆனால் எனக்கு அது அப்படியில்லை அது பொய் என்று தெரியும் என்றாலும் நானும் அம்மா சொல்வதையே சொல்லிப் பழகினேன். நான் பயந்து போயிருக்கிறேன். இந்தப் பயத்திற்கு ஒரு வாடை இருக்கிறது. இந்த வாடையின் நிறம் கறுப்பு, படபடவென்று கேட்கும் ஒலி நிறைந்த இடங்களில் என்னால் இந்த வாடையை உணரமுடியும். வயது முதிந்தவர்களின் முச்சுக்காற்றில் இந்த வாடை வீசத்தொடங்குகிறது. பின் அவை இந்த இடம், அறை, சனம் நிறைந்த இடம், காற்று, வெளி என்று பரவி அசிங்மாய் மணக்கிறது இந்த உலகம். முக்கியமாக எனது முகக்கண்ணாடியில் இந்த வாடை வீசிக்கொண்டிருக்கும். அதை உங்களால் அறியமுடியாது.

எப்போதும் போல எனது சிறுபிராயத்து வீடு கலைந்து கிடக்கிறது.

என் அம்மா என்னைப் பார்த்து நான் குண்டாக இருப்பதாகவும், அசிங்கமாகவும், எனது தலைமுடி மிகக்கேவலமாக இருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறாள். நான் எதற்கும் உதவாதவள் என்று எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டிருப்பதும், என்னை எதுக்குமாகாத ஒரு பிறவியாக மனதில் பதியவைத்த காலங்களும் கடந்து விட்டிருக்கின்றது. அம்மா சொல்வதெல்லாம் இப்போது எனக்குப் பழகிவிட்டது. பாதுகாப்பற்ற இந்த வீட்டின் அமுக்கமும், வாடையும், மனதை முழுதாக அடைத்துவிட்டிருக்கின்றது. என்னைப் பற்றிய அக்கறை யாருக்கும் இல்லை என்பதை நான் அப்போதே உணர்ந்திருந்தாலும் அதை பற்றி நான் பெரிதாகத் அலட்டிக்கொள்வதில்லை. எனது அம்மா தூங்கிவிட்ட பிறகு எழப்போகும் பயங்கரக் கனவின் நினைவில் அதிர்ந்து போயிருப்பதில் மற்ற விடயங்கள் பெரிதாகத் தெரியாமல் போயிருக்கும்.

அந்தக் கனவு வரும் போதெல்லாம் அழுகை பலமாக வரும். அழும் சத்தம் வராமல் ஒரு சுட்டுவிரல் என் வாயை இறுகப் பொதியிருக்கும். அது ஒரு தனியான அறையோ, கழிப்பறையோ போன்ற இடம். சுற்றிலும் இருட்டு. என்னை எழுப்பி அழைத்து வந்த உருவம் என்னை மல்லாக்கப்படுத்தியோ அல்லது சுவரோடு சாத்தியோ வைத்து தனது முழு பலத்தையும் என்மீது வீழ்த்தும். அப்போது அந்தக் கண்கள் இரவில் ஒளிரும் காட்டு மிருகத்தின் கண்களை ஒத்து அகோரமாய் தெரியும். வயிற்றில் பயத்தையும் பசியையும் உண்டுபண்ணும். அந்தரங்க உருப்புகளில் எரிவு உண்டாகி, சிறுநீர்கழிக்க வேண்டும் போன்ற உணர்வு வரும். ஒரு முனகல் சத்தம் கூட வராமல் இந்தக் கனவை கடக்க வேண்டியது எனது கடமை என எனக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க, இந்தக் கனவு முடிந்து நான் எழும் போது என் உடம்பின் பல பாகங்களில் நீலம் பூத்திருக்கும். கண்டிய காயங்களும், சிவந்த ரத்தக்கன்றல்களும், தூக்கமிழந்த இரவுகளின் தாக்கமாக கண்கள் சோகையும் படிந்திக்கும். உடல் அடித்துப்போட்டாற் போல வலி எடுக்கும். பாடசாலை போகவே பிடிப்பில்லாத மனநிலை உண்டுபண்ணியிருந்த காலமது.

நான் காணும் இந்தக் கனவு பற்றி யாருக்கும் சொல்ல எனக்கு அனுமதியில்லை. சொல்லும் தைரியமும் எனக்கு இல்லை. ஆனாலும் இந்த அகோரக்கனவு பற்றி எனது அம்மாவும், அப்பாவும், பாடசாலை ஆசிரியர்களும் மற்றும் அயல்வீட்டுக்காரர்களும் அறிந்தே இருந்தனர் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் யாரும் எனது வீட்டிற்கு வருவதில்லை. அந்தக் கனவு அவர்களையும் தொத்திவிடுமோ என்று அவர்கள் அஞ்சியிருக்கலாம். என் வயதுச்சினேகிதிகள் யாரும் என் வீட்டிற்கு வந்து நான் அறிந்ததில்லை. என்னையும் எங்கேயும் வெளியே அனுப்ப வீட்டில் அனுமதியில்லை. எல்லாம் இரவில் வரும் அகோரக் கனவுகளால் வந்த வினை.

என்னுடன் எப்போதும் இருக்கும் எனது கைப்பொம்மை என்னைப் போலவே கொஞ்சம் அழுக்காய்தான் இருக்கும். இருந்தாலும் தோட்டத்து மூலைகளிலும் கட்டிலின் அடியிலும், மேசையின் இடுக்கிலும் நாங்கள் அமர்ந்து பேசுவது அதிகம். எனது இரத்தக் காயங்களும், முக்குச்சலியும் வேர்வையும் ஒட்டிய இந்தபொம்மை எனக்கு முக்கியமானது. அதனுடன் தான் இப்போதும் நான் படுத்திருக்கிறேன். தூக்கம் என் இமையைப் பாரமாக்குகின்றது. நானும் ஒவ்வொரு இரவும் தூங்காமல் இருந்துவிடுவதென்று அசுரபலத்துடன் இமையை எதிர்த்துப் வழமைபோல போராடுகின்றேன். இந்த கனமான இருட்டும், உடற்சோர்வும் என்னை வழக்கம் போல உறக்கத்தில் ஆழ்த்தி விடுகிறது.

பல காலம் மாற்றப்படாத போர்வையின் நாற்றத்துடன் எனது கட்டிலில் நான் உறங்கிக்கொண்டிருக்கின்றேன்.

ஆழ்ந்த நித்திரையில் அந்த அகோரமான கை என்னை தட்டி உசுப்புகிறது. அரைத்தூக்கத்தில் எழுந்து அந்தக் கனவுக் கையோடு இழுபட்டுப்போகின்றேன். மனது வேகமாகத் துடிக்கத் தொடங்குகிறது. கால்களின் நடுக்கம் உடல் முழுதும் குளிரச்செய்கிறது. அதே கழிவறைக்கருகில் என்னை சுவரோடு சாத்திவைக்கும் அந்த பேயுருவத்தின் உடலில் இருந்து அருவருப்பான வாடை அடிக்கிறது. தடிமனான மீசையும், மது அருந்திய நெடியும் அருவருப்பை உண்டாக்கி வாந்தி வரும் போல வயிறெங்கும் குமட்டல் எடுக்கிறது.

“கனவா இது”

“ம்”

“எப்ப முடியும் கனவு. எனக்கு ஏலாது. ”

“கொஞ்ச நேரத்தில முடியும், சத்தம் போடகூடாது என்ன”

“ம்”

“இதெல்லாம் யாருக்கும் சொல்ல கூடாது என்ன? எல்லாரும் இப்படிதான் அவங்க வீட்டில செய்றது.. ம்”

ஒரு பெரிய விரல் எனது உதடுகளை இறுக்க மூடுகிறது. உதடுகள் வலிக்கின்றன. உடல்முழுதும் ஆயிரம் ஊசிகள் துளைத்தது போல பெருவலி கிளம்புகிறது. மயக்கம் கனவை மூடிக்கொள்கிறது. ஒரே இருட்டு. எங்கும் வெறும் கறுப்பு. அதே அசிங்க வாடை.

“விடுங்கப்பா… வலிக்குதப்பா… காணும்ப்பா”

Exit mobile version