Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வேசங்கள் கிழிந்து தொங்குகின்றன!:தேவா (ஜேர்மனி)

 

அரச அதிகாரத்தோடு சேர்ந்து கொண்டு தங்கள் உயிரை காப்பாற்றிகொண்டு, எங்களால் தான் எதிரி பலமிழந்தான் என்று அறிக்கை விடுகிறதை வாசிக்கும்போது இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே என தோணுவது மட்டுமல்ல இவர்கள் வேசங்கள் கிழிந்து தொங்குகின்றன.
 
ஒரு உத்தரவாதம்: கொலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
 
பெண், ஆண், சிறுவர்கள்,குழந்தைகள் என  நிர்வாணமாக்கி ஈவிரக்கமில்லாமல் கொல்லுதல், வெடித்து சிதறிய உடல்களை சாகடித்த பின்னரும் பெண்ணுறுப்பை சிதறடிக்கப்படுத்தல் என்ற  இவ்வாறான  கொடுரங்களை நடாத்திக் கொண்டே வாய்மொழி மூலமான வன்முறையையும் சேர்த்து இணையங்களில் பார்க்க நேர்கையில் ஒவ்வொரு இதயத்தையும் ஆழமாக வலிக்கப்பண்ணுகிறது.
 
இது உண்மையில் நடந்ததா? அல்லது வெட்டி ஒட்டப்பட்ட நாசகார வேலையா அல்லது இலங்கையிலோ அல்லது உலகின் வேறேதாவது நாடுகளில் நடைபெற்றதா? என்ற பூராய்ப்பு வேறு.
 
ஆனால் இந்தப்பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது. இன்னும்நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
ஒவ்வொருவருக்குமே. இவ்வாறான கோரங்கள் யுத்தங்களில், போராட்ட காலங்களில் நடைபெறுவதுதான் இயல்பு என்று ஒதுக்கிவிடுவது மனிதமா? போர் என்ற போர்வைக்குள் எதிரியை எதுவும் செய்யலாம் இது கோட்பாடா?
 
கொலையை நியாயப்படுத்த தான் செய்யும். அதிகாரத்தை உறுதிப்படுத்தும் நிலையை உருவாக்குகிறது. கொலை எந்த வடிவில் நிகழ்த்தப்பட்டிருந்தாலுமே கொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அது எந்த வடிவத்தில் வந்த கொலையாக இருந்தாலும்.சரி.
 
இணையங்களில்  நல்லூர்கந்தசாமி கோவில் தேருக்கு அரசு வானில் இருந்து விமானம் மூலம்  மலர்தூவி பக்தகர்களை  மெய்சிலிர்க்க வைத்ததாம்.  ஆனால் இதே அரசுதான் 4மாதங்களுக்கு முன்  விஷக் குண்டுகளை பொழிந்து மக்களை கொன்று குவித்து அவர்களின் வாழ்விடங்களை சுடுகாடாக்கியது. இது ஒரு கேலிக் கூத்தாக இல்லை
 
மதத்துக்காக, இனத்துக்காக, நாட்டுக்காக, மொழிக்காக, கொள்கைக்காக, நிலத்துக்காக போர்கள் நடைபெற்று,எத்தனையோ உயிர்கள் பலியெடுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை திரும்பி நோக்கினால் இந்தப்பலிகள் யாருக்காக நிகழ்த்தப்பட்டன என்ற உண்மை நன்றாகவே புரியும். மொத்தத்தில் சொல்லப்போனால், பலமானவன், தேர்ந்த ஆயுதம் கையில் வைத்திருப்பவன், அரசியல் தந்திரத்தோடு செயல்படுபவர்களின் கைகளிலேயே இந்த படுகொலைகள் செயற்பட்டுள்ளதை செயல்படுகிறதை யாராலுமே உணர்ந்து கொள்ள முடியும். 
 
நாட்டுக்காக, சொந்த இனத்துக்காக தாமாகவே முன்வந்து உயிர்கொடுத்து தம் வாழ்வை இழந்தவர்கள் பலர்  உலகில் வாழ்ந்துள்ளார்கள் வாழ்கிறார்கள் இது சரித்திரம் நமக்கு கூறும் கட்டியம்.  ததனி மனித உலகம் தாண்டி, குடும்பத்தையும் தாண்டி அதற்கப்பால் பொது உலகம் என்ற பரப்புக்குள் போய்விட்ட சமூகநலம் கொண்ட மனிதங்கள் அவை. இவர்களின் தொண்டினை‐தியாகங்களை பயன்படுத்திக் கொண்டவர்கள் அதன் தலைமைகளும்,அரசுகளும்தான்.
 
மனித நேயத்திற்காகவும், உரிமைக்காகவும், கொள்கைக்காகவும், மதத்துக்காகவும் போராடுவதும் அவரவரின் உரிமை. ஒவ்வொரு மனிதர்களுமே தன்குடும்பத்தின் ஒரு உயிரைக்கூட எந்த நிலையிலும்‐ எந்தக் கொள்கைக்காகவும், ஏன் எதற்காகவுமே இழக்கதயாரில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் இப்படி ஏதோ ஒன்றுக்காக என் குடும்பத்தில் ஒருத்தரை இழந்தேன் என்று மார்தட்டிக்கொள்பவர் எந்த நேரத்திலும் உன் உயிரைக்கொடு என்றால் கொடுப்பாரோ? உயிர்வாழ்தல் வாழ்பவனுக்கு பெறுமதியாயிருக்கிறது போல் உயிரை பறிகொடுத்தோருக்கும் மிகவும் பெறுமதியானது.
 
அரச அதிகாரத்தோடு சேர்ந்து கொண்டு தங்கள் உயிரை காப்பாற்றிகொண்டு, எங்களால் தான் எதிரி பலமிழந்தான் என்று அறிக்கை விடுகிறதை வாசிக்கும்போது இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே,என தோணுவது மட்டுமல்ல இவர்கள்; வேசங்கள் கிழிந்து தொங்குகின்றன. வேசங்களை களைந்து உண்மையானவைகளை உலகத்துக்கு காட்டியதற்காக ஊடகவியலாலருக்கு கிடைத்திருக்கிற (நீதியாம்?) 20வருடங்களும் அவரை கொலை பண்ணுவதற்கு ஏற்ற எத்தனமே. இப்படி கைதுகள் இன்னும் தொடருகின்றன. வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றன. வெளிவரப்படாமலே மூடிமறைக்கப்படுகின்றன. கடைசியில் எஞ்சுவது மரணங்களே.
 
இதற்கு யார் பொறுப்பு?
 
ஒவ்வொரு சித்திரவதை முகாம்களிலும், தடுப்பு முகாம்களிலும் இன்று வரைக்கும் கைதாகி அடைக்கப்பட்டிருக்கும் மக்களின் உயிர் இன்னும் கொலையை எதிர்பார்த்து  காத்திருக்கிறார்கள் என்ற நோக்கத்தை   நினைக்கும்போது, இவ் மனித உயிர்களுக்கான  கவலை, பொறுப்பு அவர்கள் மீதான எம்  கடமை வாழும் எம்  ஒவ்வொருத்தர் கைகளிலும் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  கொலைகள் உடனடியாக  நிறுத்தப்படவேண்டும். சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்து சிறைப்படுத்தி வைத்திருப்பவர்கைளை விடுதலை செய்யவேண்டும். அதே போல்  முகாம்களிலுள்ள மக்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவரவர் விரும்பிய இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
 
 இம் மக்களுக்காக புலத்திலும், தாயகத்திலும் பெரிய அளவில் அரசுக்கு மேலான அழுத்தங்களை பல்வேறு வடிவங்களில் நடத்தியாகவேண்டும். இது எம் இனத்தின், சமூகத்தின் இன்றைய அவசியமான கட்டாயமும் தேவையுமே…
 
தேவா ஜேர்மனி

 

 

 

Thanks: http://udaru.blogdrive.com/archive/1036.html

 

Exit mobile version