Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வீல் சேரில் சென்று பாஜகவை தோற்கடித்த மம்தா பானர்ஜி!

ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் மூன்று மாநிலங்களில் ஆளும் கட்சியே மீண்டும் வெல்லும் சூழல் உருவாகி இருக்கிறது. கேரளம், மேற்குவங்கம். அஸ்ஸாம் இம்மூன்று மாநிலங்களிலும் ஆளும் கட்சிகளே வெல்ல இருக்கிறது.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் வேலை செய்த பிரசாந்த் கிஷோர் பாஜக நூறு தொகுதிகளில் வெல்லாது எனக் கூறி வந்தார். ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க கள நிலவரங்கள் மாறியது.
ராணுவத்தை தேர்தல் பணியில் ஈடுபடுத்திய தேர்தல் கமிஷன் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக செய்திகள் வெளியானது. பல இடங்களில் வாக்காளர்கள் மிரட்டப்பட்டார்கள். மோடி, அமித்ஷா உட்பட பாஜகவின் அனைத்து தலைவர்களுமே மாதக்கணக்கில் மேற்கு வங்கத்தில் முகாமிட்டார்கள். ஐந்து மாநில தேர்தல்களிலும் பெரும் கலவரங்கள் நடந்ததும் இந்த தேர்தலில்தான்.
மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களை கைப்பற்றிய பாஜக இம்முறை வென்றே விடலாம் என நினைத்தது. அனால் பாஜகவை மண்ணைக் கவ்வ வைத்துள்ளார் மம்தா பானர்ஜி. 218 தொகுதிகளில் வென்று பிரமாண்டமான வெற்றியை பதிவு செய்துள்ளார். பாஜக 85 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சி ஆகிறது.
திரிணாமூல் காங்கிரஸ் 218 தொகுதிகளில் வென்றாலும் நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி அவரை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியிடம் 1973 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். ஆனாலும் அவர் முதல்வராக பதவியேற்ற பின்னர் ஆறு மாதங்களுக்குள் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டும் என்ற நிலையில் மம்தா பானர்ஜியே முதல்வராவார் என்று தெரிகிறது.
இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக மேற்குவங்க மாநிலத்தை தன் கைக்குள் வைத்திருந்த இடது சாரிகளை காலி செய்து அந்த இடத்தில் பாஜக வந்து அமர்ந்து விட்டது.பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று கடினமாக உழைத்த மம்தா பானர்ஜி உடைந்த காலில் கட்டுப் போட்டுக் கொண்டு அதையே தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக மாற்றினார். ஊர் ஊராக வீல் சேரில் சென்று இந்த பிரமாண்ட வெற்றியை ஈட்டியுள்ளார் மம்தா பானர்ஜி.

Exit mobile version