Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடக்கு- கிழக்கு பிரிவு இல்லை, தமிழர் தாயகம் : கருணா.

தமிழர்களின் தாயகத்தைக் கூறுபோடுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை எனத்தெரிவித்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா அம்மான், வடக்கும் கிழக்கும் நிர்வாக ரீதியாக மாத்திரமே பிரிந்திருப்பதாகவும், அதனைக் கொண்டு அங்கு வாழும் மக்களும் பிரிந்துவிட்டார்கள் எனக்கருத முடியாது எனத் தெரிவித்துள்ளார்.  கொழும்பிலுள்ள சூரியன் எவ்.எம்  தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கிழக்கில் கொலைகளும், குடியேற்றத் திட்டங்களும் அதிகரித்துவருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் தங்களது பிரதிநிதிகளை தமிழ் மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கினதும், கிழக்கினதும் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து போட்டியிட்டு பாராளுமன்றத்தில் ஒரு பலமான கூட்டணியை அமைப்பதற்கான சாத்தியங்கள் எதிர்காலத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்குக் கிழக்கில் செயற்படுகின்ற சகல அரசியல் கட்சிகளுடனும் இணைந்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே தமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இயங்குகின்ற அரசியல் கட்சிகளின் ஜனநாயகபூர்வமான செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தடையாக இருக்கிறார்கள் எனும் கூற்றை மறுத்த கருணா, ஜனநாயக அரசியலை கிழக்கில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமது அவா எனவும், அதற்கு வேண்டிய ஒத்துழைப்புக்களை தமது கட்சி வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவிருந்தாலும், ஏனைய மாற்று அரசியல் சக்திகளாகவிருந்தாலும் அவர்களின் ஜனநாயகபூர்வமான செயற்பாடுகளுக்கு தாம் ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லை எனவும்; சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஸ்தாபகர்களை உள்ளடக்கிய ஒரு செயற்குழு மூலம் தமது கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் குழுவின் மூலம் தமது கட்சியின் வேலைத்திட்டங்கள் தமிழ் மக்கள் வாழுகின்ற பகுதிகள் அனைத்திற்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version