Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த ‘மர்ம’ நபர் – சேரமான்

ஈழமுரசு – பத்திரிகையில் வெளியான இவ்வாக்கம் சங்கதி இணையத்தில் மறு பிரதியாக்கம் செய்யப்பட்டிருந்தது. சம்பவங்கள், அவற்றிற்கான ஆதரங்கள், அவற்றின் உண்மைத் தன்மை போன்ற புலனாய்வு ஊடக முறைமைக்கு அப்பால் இச்சம்பவத்தை மையப்படுத்தி கடந்த வாரம்  வெளியான பல கட்டுரைகளின் பின்னணியில் இழையோடும் அரசியலின் பொதுத் தன்மை கவனிக்கத்தக்கது. விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு உறுதியான அரசியல் எதுவுமற்ற வெற்று இராணுவக் குழுவாகவும்,  மர்மம் சூழந்த,  மக்களிலிருந்து அன்னியமான சாகசக் குழுவாகவுமே 30 வருடங்களைக் கடத்தியிருக்கிறது. பிரதான விடுதலை இயக்கங்கள் அனைத்துமே இந்த எல்லைக்குள்ளேயே தமது அரசியலை முன்னெடுத்தன. உலகெங்கும் மக்கள் திரள் அமைப்புக்கள் சார்ந்த அரசியல் வெற்றிபெறும் புதிய சகாப்த்தத்தில் பழமைவாத அரசியல் வரம்புகளுக்கு வெளியில் விஞ்ஞானபூர்வமான உலகப்பார்வையின் அவசியத்தை இச்சம்பவங்கள் வலியுறுத்துகின்றன.

 

வன்னிப் போரின் இறுதிக் கணங்களில் போராளிகளையும், மக்களையும் மீட்பதற்கு அமெரிக்கப் படைகள் வரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளை ‘நம்பவைத்துக் கழுத்தறுத்த’ மர்ம நபர் தொடர்பாக அண்மைய வாரங்களாக இணைய ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இந்த மர்ம நபர் என்றும், வழுதி என்ற பெயரில் புதினம் இணையத்தளத்தில் இவரே கட்டுரைகளை எழுதினார் என்றும் சில இணைய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் வழுதி எனப்படும் குறிப்பிட்ட கட்டுரையாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராக விளங்கியது உண்மையாக இருந்தாலும்கூட, தமிழீழ விடுதலைப் புலிகளை நம்பவைத்துக் கழுத்தறுக்கும் அளவிற்கு இயக்கத்தில் முக்கியமான பொறுப்புக்கள் எவற்றையும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நபர் வகித்ததில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்துடன் ஒட்டிஉறவாடியவர் போன்ற தோற்றப்பாட்டை தனது கட்டுரைகள் ஊடாக இவர் வெளிப்படுத்தியிருந்தாலும்கூட, தமிழீழ விடுதலைப் புலிகளின் நான்கு தசாப்தகால வரலாற்றை எழுதுவதற்கும், விமர்சிப்பதற்கும் தகுதியுடையவராக இவர் விளங்கியதில்லை.

ஏறத்தாள ஐந்து ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ இதழான ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையின் துணை ஆசிரியராக விளங்கிய இந்த நபர், கள அனுபவமேதும் அற்றவர். 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜெயசுக்குறு எதிர்ச்சமரில் அரசியல்துறைப் போராளிகள் அனைவரும் களமிறக்கப்பட்ட பொழுது முதலும் இறுதியுமாக சண்டைக்கள அனுபவத்தைப் பெற்றவர் இவர். ஜெயசுக்குறு எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்த இவர், பாரிசவாதத்திற்கு ஆளாகிய நிலையில் இயக்கத்தை விட்டு விலகி அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தார்.

அங்கு இயங்கிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கருணாகரன், சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் ஆகியோருடன் தொடர்புகளைப் பேணி வந்த இவர், இறுதிப் போரின் பொழுது கே.பியின வழிநடத்தலில் உருத்திரகுமாரனின் உதவியாளராக செயற்பட்டு வந்தார். சில இணைய ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போன்று அமெரிக்காவில் உள்ள கல்விமான்களுடனோ, அன்றி கொள்கை வகுப்பாளர்களுடனோ இவருக்கு நேரடித் தொடர்புகள் எதுவும் இருந்ததில்லை.

உருத்திரகுமாரனின் உதவியாளர் என்ற வகையிலும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், விடுதலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியர் ரவி ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புகளைப் பேணி வந்தவர் என்ற வகையில் அமெரிக்காவில் உள்ள தமிழ்க் கல்விமான்கள் சிலர் இவருடன் இணைந்து பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சாதாரண நபரைப் பெரிதுபடுத்துவது, இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு துரோகமிழைத்துக் கழுத்தறுத்த உண்மையான குற்றவாளி தப்பித்துக் கொள்வதற்கே வழிவகுக்கும் என்பதால், இந்த நபர் தொடர்பான மேலதிக தகவல்களை இப்பத்தியில் எழுதுவதை தவிர்த்துக் கொள்கின்றேன்.

அப்படியென்றால், இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கழுத்;தறுத்து ஏமாற்றிய உண்மையான நபர் யார் என நீங்கள் வினவக்கூடும். இந்த நபர் யார் என்பதை வெளிப்படுத்துவதற்கு முன்னர் இறுதிப் போரில் புலம்பெயர் தேசங்களில் நிகழ்ந்தேறிய சில சம்பவங்களை நினைவூட்டுவதும், அதில் முன்னணிப் பாத்திரம் வகித்தோரை அடையாளம் காட்டுவதும் பொருத்தமாக இருக்கும்.

2008 டிசம்பர் மாதத்தின் இறுதிவாரம்: வன்னி மக்கள் மீதான யுத்தத்தை சிங்களப் படைகள் உக்கிரப்படுத்திய காலகட்டம் அது. போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி நாடகமாடி, உணவுப் பொதிகளையும், உடைகளையும் வன்னிக்கு அனுப்பி ஓய்ந்து போக, கிளிநொச்சியை ஆக்கிரமிப்பதற்கான தாக்குதல்களை சிங்களப் படைகள் உக்கிரப்படுத்தியிருந்தன.

இச்சந்தர்ப்பத்தில்தான், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் அவர்களை நியமிப்பதற்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் நீண்ட தயக்கத்திற்குப் பின்னர் இணங்கியிருந்தார். இது தொடர்பான கடிதம் நோர்வே அனுசரணையாளர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் அனுப்பப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து புலம்பெயர் தேசங்களில் உள்ள தனது விசுவாசிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திய கே.பி, அனைத்துலக தொடர்பகத்தின் பரப்புரைப் பிரிவிற்கு சமாந்தரமாகத் தனது விசுவாசிகளைக் கொண்ட பரப்புரைக் குழு ஒன்றை அமைத்திருந்தார். இக் குழுவின் முதன்மை அங்கத்தவர்களாக சட்டத்தரணி உருத்திரகுமாரன், கலாநிதி ஜோய் மகேஸ்வரன், வேலும்மயிலும் மனோகரன், சர்வே தர்மா, செல்வின் ஆகியோர் அங்கம் வகித்தனர்.

இவர்களோடு பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கி வரும் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றின் நிறைவேற்றுப் பணிப்பாளரின் சகோதரரான அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மருத்துவர் ஒருவரும் இணைந்து செயற்பட்டு வந்தார். இவர்களை விட, 2003ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தால் அனைத்துலக செயலகம் கலைக்கப்பட்டு, அனைத்துலக தொடர்பகத்தின் ஆளுகையின் கீழ் வெளிநாட்டுக் கிளைகள் கொண்டு வரப்பட்ட பொழுது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட கணிசமான நபர்களும் கே.பியின் அணியில் இணைந்து கொண்டனர்.

இவ் அணியின் பொறுப்பாளராக கே.பி விளங்கினாலும்கூட, கே.பியின் இரு கண்களாக உருத்திரகுமாரனும், ஜோய் மகேஸ்வரனும் செயற்பட, அவரது இரு கரங்களாக சர்வே தர்மாவும், வேலும்மயிலும் மனோகரனும் இயங்கத் தொடங்கினர். இதில் குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவின் நண்பரும், 2006ஆம், 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியவருமான இலண்டனில் வசிக்கும் நபர் ஒருவரை கே.பியிடம் மனோகரன் அறிமுகம் செய்து வைத்திருந்தார். குறிப்பிட்ட நபரும், மத்திய கிழக்கில் தொழில்புரியும் அவரது சகோதரரான கலாநிதி ஒருவரும் கே.பியின் வேண்டுதலுக்கு இணங்க ராஜபக்ச சகோதரர்களுடனும், டக்ளஸ் தேவானந்தாவுடனும் தொடர்புகளைப் பேணி வந்தனர்.

நிரந்தர போர்நிறுத்தத்தின் ஊடாக வன்னி மக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பு மட்டுமே கே.பியிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தால் வழங்கப்பட்டிருந்த பொழுதும், தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு அப்பாற்சென்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு தொடர்பாக கே.பியும், உருத்திரகுமாரனும் வெளிநாட்டு இராசதந்திரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.

2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் கே.பியின் அழைப்பை ஏற்று மலேசியாவிற்கு பயணம் செய்த உருத்திரகுமாரனும், கலாநிதி ஜோய் மகேஸ்வரனும், அங்கு கொழும்புக்கான அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த மூத்த இராஜதந்திரி ஒருவரை, கே.பியுடன் இணைந்து சந்தித்திருந்தனர். தற்பொழுது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சில் முக்கிய பதவியை வகிக்கும் இந்த இராஜதந்திரியுடனான சந்திப்பில், போர்நிறுத்தத்தை விட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு தொடர்பாகவே கே.பி, உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் ஆகியோர் கலந்துரையாடியிருந்தனர்.

இதில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்து, அவற்றை கொள்கலன்களின் பூட்டிவைப்பது தொடர்பாகவும், பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிங்கள அரசிடன் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவது தொடர்பாகவும் இவர்கள் கலந்துரையாடியிருந்தனர். இது சாத்தியமாகும் பட்சத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளினதும், சிங்கள அரசினதும் இணக்கத்துடன், வன்னிக்குள் அமெரிக்க அமைதிப் படைகளை களமிறக்க முடியும் என்றும் குறிப்பிட்ட இராஜதந்திரி தெரிவித்திருந்தார்.

“இத்திட்டத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்குவார்களா?” என்று குறிப்பிட்ட அமெரிக்க இராஜதந்திரி வினவிய பொழுது, இதில் தமக்கு கொள்கையளவில் மாற்றுக் கருத்துக்கள் ஏதுமில்லை என்றும், எனினும் “இந்த யதார்த்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் புரிந்து கொள்வாரா?” என்பது தமக்கு தெரியாது என்றும், கே.பியும், உருத்திரகுமாரனும் பதிலளித்திருந்தனர்.

இந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைவை மையப்படுத்திய திட்டம் ஒன்று இணைத்தலைமை நாடுகளால் கே.பியிடம் கையளிக்கப்பட்டதோடு, இதற்கு முன்னோடியாக இணைத்தலைமை நாடுகளால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தை வன்னிக்கு கே.பி அனுப்பி வைத்த பொழுது அதனை அடியோடு நிராகரித்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுமாறு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடாக கே.பியிற்கு தகவல் அனுப்பியிருந்தார்.

இதன் பின்னரும் கே.பி அணியினரின் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை மையப்படுத்தி அமைந்திருந்த நிலையில், 2009 ஏப்ரல் மாதத்தின் முதல்வாரத்தில் அனைத்துலக தொடர்பகத்தில் இருந்து வெளியாகிய அவசர செய்தியின் அடிப்படையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பரப்புரைப் பணிகளில் நேரடியாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைகள் களமிறங்கியிருந்தன.

ஒருபுறம் வன்னி மக்களை வகைதொகையின்றி கொன்றுகுவிக்கும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவிற்கான ஏதுநிலைகள் தொடர்பாகவே வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கே.பியும், உருத்திரகுமாரனும் உரையாடிக் கொண்டிருந்தனர். இதில் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் ஆற்றலை கே.பி கொண்டிருக்காததால், அவரது சார்பில் பெரும்பாலான தொடர்பாடல்களை உருத்திரகுமாரனே பேணி வந்திருந்தார். அமெரிக்க இராதந்திரிகளுடன் மட்டுமன்றி, நோர்வே இராதந்திரிகளுடனும் கே.பியின் சார்பில் உருத்திரகுமாரனே தொடர்பாடல்களைப் பேணிவந்திருந்தார்.

மே 14, 2009: முள்ளிவாய்க்கால் போர் இறுதிக் கணங்களை நெருங்கிக் கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளையும், சிங்கள அரசையும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி அன்றைய நாளில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. வழமையாக தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் இலக்கு வைத்து அறிக்கைகளை வெளியிடும் அமெரிக்க அரசு, இம்முறை இரு தரப்பையும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டமை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நம்பிக்கையை அளித்திருந்தது. அதிலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களால் நேரடியாக வெளியிடப்பட்ட அறிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஒரு சாதகமான சமிக்ஞையாகவே பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக உருத்திரகுமாரனிடம் முள்ளிவாய்க்காலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவர் வினவிய பொழுது, வன்னி மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்க அரசு இணங்கியிருப்பதாகவும், கடந்த ஐந்து மாதங்களாக தாம் எடுத்த முயற்சி பயனளித்திருப்பதாகவும் பதிலளித்திருந்தார். அத்துடன் விரைவில் தென்பசுபிக் கட்டளைப் பீடத்தில் இருந்து வன்னிக்கு கப்பல் ஒன்றை அனுப்புவதற்கு அமெரிக்கா இணங்கியிருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடவோ அன்றி சரணடையவோ தேவையில்லை என்றும், ஒருதலைப்பட்சமான முறையில் நிபந்தனையற்ற மோதல் தவிர்ப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தால் மட்டும் போதும் என்றும், குறிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரிடம் உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.

“இதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை அங்கீகாரம் வழங்குமா?” என்று உருத்திரகுமாரனிடம் குறிப்பிட்ட மூத்த உறுப்பினர் வினவிய பொழுது, இதுபற்றி ஏற்கனவே பாதுகாப்புப் பேரவையின் மூத்த இராஜதந்திரிகளுடன் தாம் கதைத்ததாவும், இதுவிடயத்தில் சீனாவும், ரசியாவும் எதிர்ப்புத் தெரிவித்தாலும், இவர்களின் எதிர்ப்பையும் மீறிப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்றும் உருத்திரகுமாரன் பதிலளித்திருந்தார்.

இதுபற்றி கே.பியிடம் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் வினவிய பொழுது, உருத்திரகுமாரன் கூறிய அதே பதிலையே கே.பியும் வழங்கியிருந்தார்.

இதனையடுத்து பராக் ஒபாமாவின் அறிக்கையை வரவேற்று உடனடியாகவே தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களால் வன்னியில் இருந்து அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. எனினும், மறுநாள் 15ஆம் நாளன்று முள்ளிவாய்க்கால் மீதான தாக்குதல்களை சிங்களப் படைகள் உக்கிரப்படுத்திய பொழுது, கே.பி-உருத்திரகுமாரன் தரப்பினரின் கூற்றின் நம்பகத்தன்மை தொடர்பாக வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளிடையே ஐயம் எழுந்திருந்தது.

இதனை நோர்வே ஊடாக உறுதிசெய்வதற்கு வன்னியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் முற்பட்ட பொழுது, இதுவிடயத்தில் சாதகமான பதில்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை.

இந்நிலையில் மக்களை மீட்டெடுப்பதற்கு குறைந்தபட்சம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல்களையாவது உடனடியாக முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பி வைப்பதற்கு அமெரிக்காவிடம் வலியுறுத்துமாறு, கே.பி-உருத்திரகுமாரன் தரப்பினரிடம் வன்னியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கோரப்பட்டது.

எனினும் இது உடனடியாக சாத்தியமில்லை என்று 15ஆம் நாள் இரவு பதிலளித்த கே.பி, இருந்த பொழுதும் அமெரிக்க அமைதிப் படைகளை வன்னிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சுடன் உருத்திரகுமாரன் பேசிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதன்பின்னர் 16ஆம் நாள் அதிகாலை முள்ளிவாய்க்கால் கடற்கரையை சிங்களப் படைகள் கைப்பற்றிய நிலையில், அமெரிக்க அமைதிப் படைகளின் வருகை என்பது ஒரு வெற்றுப் பேச்சு என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் நன்கு புரிந்து கொண்டிருந்தார்கள்.

இதனை தொடர்ந்து 16ஆம் நாள் இரவும், 17ஆம் நாள் காலையும் இடம்பெற்ற உக்கிர மோதல்களைத் தொடர்ந்து மக்களைப் பாதுகாக்கும் நிமித்தம் சிங்களப் படைகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான முடிவை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் எடுத்திருந்தார்.

இதற்கு முன்னோடியாக மக்களினதும், போராளிகளினதும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் பெறுவதற்கு நோர்வே ஊடாக பா.நடேசன் அவர்களும், புலித்தேவன் அவர்களும் முற்பட்டிருந்தனர். எனினும் இதற்கு நோர்வே தரப்பில் இருந்து தெளிவான பதில்கள் வழங்கப்படாத நிலையில், தமது பாதுகாப்பிற்கு “பராக் ஒபாமா உத்தரவாதம் அளிப்பாரா?” என்று, அமெரிக்க-பிரித்தானிய அரச தரப்புடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வரும் பிரித்தானியாவில் உள்ள மூத்த ஆங்கில ஊடகவியலாளர் ஒருவரிடம் 17ஆம் இரவு பா.நடேசன் அவர்கள் வினவியிருந்தார். எனினும் அதற்கும் தெளிவான பதில் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் சிங்கள அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர் ஒருவருடன் தான் உரையாடியிருப்பதாகவும், வெள்ளைக் கொடிகளுடன் நிராயுதபாணிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எல்லையைக் கடக்கும் பட்சத்தில், அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதற்கு பசில் ராஜபக்ச இணங்கியிருப்பதாகவும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரிடம் கே.பி கூறியிருந்தார்.

இதனை உறுதி செய்வதற்கு அமெரிக்காவில் உள்ள உருத்திரகுமாரனின் உதவியாளருடன் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் தொடர்பு கொண்ட பொழுது, இந்தத் தகவல் நம்பகமானது என்றும், இதற்கான ஏற்பாடுகளை இறுதிசெய்யும் நிமித்தம் அவசரமாக வோசிங்டனுக்கு உருத்திரகுமாரனும், இன்னொரு தமிழ் மருத்துவரும் சென்றிருப்பதாகவும் உருத்திரகுமாரனின் உதவியாளர் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து 18ஆம் நாள் அதிகாலை வேளையில் வெள்ளைக் கொடியுடன் பேசச்சென்ற பொழுது தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அவரது துணைவியாரான திருமதி வனிதா நடேசன், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீ.புலித்தேவன் ஆகியோர் சிங்களப் படைகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அத்தோடு சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு யுத்தமும் நிறைவுக்கு வந்தது.

இதிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளை நம்பவைத்துக் கழுத்தறுத்த நபர் யார் என்பதை வாசகர்கள் நன்கு புரிந்திருப்பீர்கள். இதுபற்றி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் வி.உருத்திரகுமாரனுக்கு எழுதிய திறந்தமடலில் நான் நேரடியாகவே கேள்வியெழுப்பியிருந்தேன். எனினும் இதற்குப் பதிலளிப்பதைத் தவிர்த்துக் கொண்ட உருத்திரகுமாரன், கே.பியின் மீதும், தன்மீதும் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலேயே இவ்வாறான திறந்தமடலை நான் வரைந்ததாக கூறியிருந்தார்.

எனினும் இதற்குப் பின்னரான கடந்த பதினொரு மாத காலப்பகுதியில் உருத்திரகுமாரனின் சுயரூபம் மக்களிடையே பட்டவர்த்தனமாகி வருகின்றது. இதனையே அண்மையில் அவருக்கு எதிராக உருவாகியிருக்கும் நாடுகடந்த ஜனநாயக அணியின் தோற்றுவாய் தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.

ஏனென்றால் உண்மைகள் ஒருபொழுதும் உறங்குவதில்லை அல்லவா?

நன்றி: ஈழமுரசு (25.03.2011)

Exit mobile version