மாலத்தீவில் விரைவில் அமைதி திரும்ப 2 மாதத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்னாள் அதிபர் நசீத் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வாதிகாரிகளின் ஆதரவு பெற்ற புதிய அரசு இதனை நிராகரித்துள்ளது. முகமது நஷீத் மற்றும் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை மாலத்தீவு குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆதம் காபூர் தெரிவித்தார். எனினும் இது குறித்து எந்த உத்தரவும் இது வரை கிடைக்கப்பெறவில்லை என மாலத்தீவு தலைமை போலீஸ் அதிகாரி அப்துல்லா ரியாஸ் தெரிவித்தார்.
நஷீத் பதவி விலகியதை தொடர்ந்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சியை கட்டுப்படுத்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் முகமது வாஹித் ஹசன், உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்களை நியமித்துள்ளார். தலைநகர் மாலேயில் ஆயிரத்திற்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறப்பட்டது. இதுவரை சுமார் 20 போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் தாக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் முகமது ஷமீல் தெரிவித்தார்.