Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு : மன் மோகனுக்கு வெற்றி மக்களுக்குத் தோல்வி

இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் முழுமையான அன்னிய முதலீட்டை அனுமதிப்பதனை அனுமதிப்பதை எதிர்க்கும் தீர்மானம் மீது மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது. இனிமேல் எந்தத் தடையுமின்றி பல்தேசிய வணிக நிறுவனங்கள் இந்தியாவின் சில்லறை வியாபாரத்தையும் ஆக்கிரமித்துக்கொள்ளும்.
ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதன் ஆரம்பப் புள்ளி 60 களில் உருவான பெரு வர்த்தக நிறுவனங்களில் கட்டுக்கடங்காத பணக்கொள்ளை எனக் கணிப்பிடப்படுகிறது. டெஸ்கோ, வால்மார்ட், கார்பூர் போன்ற பல பில்லியன் பெறுமானமுள்ள நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் இக்காலப்படுகுதியில் பல சிறிய மற்றும் மத்தியதர விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட வரலாறு உண்டு.
சமூக நலத்திட்டங்கள் படிப்படியாக நீக்கப்பட்டு மூழ்கிக்கொண்டிருக்கும் இத்தாலியின் பாரம்பரிய உணவு உற்பத்தியாளர்களின் சில்லறைவியாபாரம் 95.8 பில்லியன் யூரோக்கள் என அறிந்துகொண்ட பல்தேசிய நிறுவனங்கள் இந்த தொழிலை 2005ம் ஆண்டிலிருந்து கையகப்படுத்த ஆரம்பித்தன. இதனால் பாதிக்கப்பட்ட நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கை அவல நிலைக்கு உள்ளாகியுள்ளது.
வாக்கெடுப்பின்போது முலாயம் சிங்கின் சமாஜவாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்ததால் இந்த வெற்றி சாத்தியமானது.
அவையில் இரு தினங்களாக நடந்த விவாதத்துக்குப் பின் கிடைத்த வெற்றியைப் பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். பிரதமர் கூறுகையில், “”நாங்கள் அமல்படுத்திய எஃப்.டி.ஐ. முடிவுக்கு இப்போது அவையின் (மக்களவை) ஒப்புதல் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தியாவை புதிய இருள் மேகங்கள் சூழ்ந்துகொள்கின்றன. ஒளியற்ற நாட்டில் கொள்ளைக்காரர்கள் சுதந்திரமாகக் தமது தொழிலை நடத்த மன்மோகன் அரசு காட்டிக்கொடுத்துள்ளது.

Exit mobile version