Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலிகளுக்காக வை.கோ வாதாட அனுமதி மறுப்பு

விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வைகோ ஆஜராகி வாதாட முடியாது என்று கோர்ட் கூறியுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.

நீதிபதி விக்ரம்ஜித் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில், அதன் அனுதாபி என்ற முறையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார்.

வைகோ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் ஆஜராகவில்லை என்றும், அந்த இயக்கத்தின் உறுப்பினர் அல்ல என்பதால் இந்த வழக்கில் ஆஜராக முடியாது என்றும், மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் வக்கீல் ஒருவர் மூலம் வைகோ தனது வாதத்தை எடுத்துக்கூறலாம் என்று நீதிபதி அனுமதி அளித்தார்.

அதைத் தொடர்ந்து வாதாடிய வைகோ, விடுதலைப்புலிகளுக்கு தடையை நீடிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். இரு தரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதி விக்ரம்ஜித்சென், வைகோ ஆஜராகி வாதாட அனுமதி மறுத்து தீர்ப்பு கூறினார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவரோ, உறுப்பினரோ அல்லது அதன் நிர்வாகிகளில் ஒருவரோதான் சட்டப்படி இந்த வழக்கில் ஆஜராக முடியும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதி, வைகோவின் கோரிக்கையை நிராகரித்தார்.

Exit mobile version