Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புலம்பெயர் நாடுகள் வரை நீட்சிபெறும் ராஜபக்சவின் இனவாதம்

இந்தியா சீனா போன்ற நாடுகளின் பின்பலத்துடனும், மேற்கின் ஆதரவுடனும் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனப்படுகொலையை கட்டவிழ்த்துவிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை முள்ளிவாய்க்காலில் மட்டும் கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச அரசு தேசிய இனப் பிரச்சனை நாட்டில் இல்லை எனச் மறுபடி கூறி வருகிறது. பேரினவாதத்தின் பிரதிநிதிகளான இரு பெரும் கட்சிகளும் தேர்தலுக்கான தமது இனவாதக் கருத்துக்களை விதைக்க ஆரம்பித்துவிட்டன. பேரினவாதம் புலம் பெயர் நாடுகள் வரை இப்போது நீட்சியடைகிறது. ராஜபக்சவின் இலங்கைத் தொலைக்காட்டி நேர்காணல் இதற்கான சிறந்த சாட்சியமாகும்.

“இன்று வெளிநாடுகளிலிருக்கும் ஒரு சிறிய பிரிவினர் இலங்கை ஒரு மோசமான நாடு என்று பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் அதை ஒரு தொழிலாகவே மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பலருக்கு தமிழ் மொழியோ, வடக்கிலிருக்கும் தமிழ் ஊர்களின் பெயர்களோகூடத் தெரியாது” என்றார் அவர்.

இலங்கையில் இருக்கும் சிலரே இவர்களுக்குத் தவறான தகவல்களைச் சொல்லிக்கொண்டிருப்பதாகவும், இவர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் எதுவும் தமக்குக் கிடையாது என்றும் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் தொலைக்காட்சி அலைவரிசைகள் வாயிலாக நடத்தப்பட்ட இந்த நேரடி பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்வில், நாடு முழுவதும் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் நேரடியாக ஜனாதிபதியிடம் தமது பிரச்சினைகள், பிரதேசத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பான கேள்விகளைக் கேட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயகார உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளும் கலந்துகொண்டு மக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version