Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரன் வாழ்கிறார், அகதிகள் மரணிக்கின்றனர்

தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு தடுப்பு முகாமில் இருந்து தங்களை வெளியேற்றுமாறு அங்குள்ள முகாம் வாசிகள் கடந்த ஒருவார காலமாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எட்டு பேர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழம் பெற்றுக்கொடுப்போம் என்ற முழக்கத்தின் கீழ் அரசியல் இலாபம் ஈட்டும் தமிழ் நாட்டின் தமிழ் இனவாதக் கட்சிகள் முகாம்களில் வதைக்கப்படும் ஈழத் தமிழர்கள் குறித்துக் கண்டுகொள்வதில்லை. இன வெறுப்புணர்வைத் துண்டும் வகையில் நாம் தமிழர் கட்சி ஆவணம் ஒன்றை வெளியிட்டுருந்தது. ஈழத் தமிழர்களின் இரட்சகர்களாகத் தம்மைப் புனைந்துகொள்ளும் இவர்கள் தமிழகம் எங்கும் உள்ள முகாம்களில் வாழும் அகதிகளின் அவலம் குறித்து வாய்திறப்பதில்லை.

புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களின் பணக் கொடுப்பனவு மீதும், தமிழகத்தில் இனவெறியைத் தூண்டி வாக்குக்களைப் பெற்றுக்கொளும் செயற்பாட்டின் மீதும் மட்டுமே அக்கறை கொண்ட சந்தர்ப்ப வாத அரசியல் தலைமைகள் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் அகதிகளுக்காக மேற்கொண்டதில்லை. செங்கல்பட்டிலிருந்து பாண்டிச்சேரி வரைக்கும் ஈழத் தமிழ் அகதிகள் வேண்டப்படாத மிருகங்கள் போல நடத்தப்படுகிறார்கள்.

பிரபாகரன் வாழ்கிறார், ஈழப் போர் ஆரம்பமாகிறது, ராஜபக்ச தூக்கில் தொங்கப்போகிறார் போன்ற கோமாளித் தனமான உணர்ச்சியூட்டும் அரசியல் நடத்தும் இந்தச் சந்தர்ப்பவாத கோமாளிகளின் அருவருப்பான அரசியல் அகதிகளை 20 வருடங்களுக்கு மேலாக முகாம்களுக்குள் முடக்கி வைத்திருக்கவும் உதவியிருக்கிறது.
மரணத்தின் விழிம்பில் மனித உரிமைக்காகப் போராடும் அகதிகளின் போராட்டத்தை மனிதாபிமானமுள்ள ஒவ்வோர் மனிதனும் ஆதரிக்க வேண்டும்.

Exit mobile version