Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரபாகரனும் புலிகளும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலமும் : இனியொரு

genocideஉலகின் வரலாறு காணாத மனிதப்படுகொலை ! 72 மணி நேரத்துள் வானைப் பிளக்கும் மரண ஓலம்!! 50 ஆயிரம் மனித உயிர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதற்காகவே நாகரீகமடைந்த எந்த மனிதனையும் அவமானப்படுத்தும் இந்த இனப்படுகொலையை கண்ணுற்ற ஒரே சாட்சியான நந்திக்கடலின் அலைகளே மிரண்டுபோன சில மணி நேரங்களுக்குள் சிறீ லங்கா தெருக்களில் சிங்கள் அப்பாவிகள் ஆனந்தக் கூத்தாடினர். குருதியுறையும் இந்த மனித அவமானத்தை பணப்பசியோடு கோரமாய்த் தெற்காசியத் தெருக்களில் அலையும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அங்கீகாரத்தோடும் பங்களிப்போடும் இலங்கைப் பேரினவாத பாசிச அரசு நடாத்தி முடித்திருக்கிறது. தமிழ்ப் பற்றாளராகத் தன்னை முன்னிறுத்தும் தமிழ் நாடு முதலமைச்சர் கருணாநிதியின் இறுதி நாட்கள் தமிழ் பேசும் 50 ஆயிரம் தமிழ் அப்பாவிகளின் அவல மரணத்தை நியாயப்படுத்துவதில் முடிவடையப் போகிறது.

முழு உலகமுமே மௌனமாய் கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்க, துடிக்கத்துடிக்க இரவோடிரவாய் கொன்று குவிக்கப்பட்ட நமது குழந்தைகள், முதியோர், தாய்மார் உடல்கள் இன்று சாட்சியின்றி அகற்றப்படுகின்றன. உடல்கள் இரசாயனத் திராவகங்களை ப்யன்படுத்தி இனப்படுகொலைக்கான சான்றுகளே இல்லாமல் உருக்கப்படுகின்றன என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சுதந்திரமான எந்த ஊடகங்களும் அனுமதிக்கப்படவில்லை. சாட்சிகளும் சான்றுகளும் இன்றி அழிக்கப்படுவதை மூடி மறைக்க இலங்கை அரசும், தன்னைப் பற்றி வெளியாகக் கூடிய தகவல்களை இந்திய அரசும் பயன்படுத்தும் ஆயுதம் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்ப்பிள்ளை பிரபாகரனின் மரணம்.

பிரபாகரன் இறந்து போனாரா அல்லது உயிருடன் உள்ளாரா என ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பொறுத்திருக்கத் தயார். ஆனால், ஐம்பாதாயிரம் அப்பாவிகளைக் கொன்று குவித்துவிட்டு, தெருக்களில் சுதந்திரமாக உலாவும் மனித வேட்டைக் காரர்களை ஐந்து நிமிடமும் நாகரீக மனிதர்களுக்கு மத்தியில் உலாவ நியாயமாகச் சிந்திக்கும் எந்த மனிதனும் அனுமதிக்கமாட்டான்.

இவர்களுக்கு அங்கீகாரம் வழங்கி மக்கள் மத்தியில் உலாவ விடுதல் என்பது மனித் குலத்திற்கு இழைக்கும் வரலாற்றுத் துரோகம் மட்டுமல்ல, இவர்கள் இதே அங்கீகாரத்தோடு இன்னும் இன்னும் ஆயிரக்கணக்கில் கொடிய மனிதக் கொலைகளை அரங்கேற்றுவர் என்பது மேலும் மேலும் வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று யுத்தம் நடைபெற்ற போது இடம்பெயர்க்கப்பட்ட அப்பாவி மக்களின் முகாம்களில் சிறுவர்களைக் கடத்திக் கொலைசெய்யும் உதவி இராணுவக் குழுக்கள் பற்றி அவசர அறிவிப்பொன்றை The Coalition to Stop the Use of Child Soldiers (CSUCS) விடுத்திருக்கிறது.

வழமை போல நடந்த படுகொலையை கண்டும் காணாதிருந்த ஐக்கிய நாடுகள் சபை விசாரனைக்கு உத்தரவிட்டிருக்கிறது. விசாரணை முடிபில் அங்கெல்லாம் குழந்தைகளே இல்லை என்ற நகைப்புக்கிடமான முடிபுகள் கூட வெளியாகலாம்.

ஐம்பதாயிரம் மக்களைக் கொன்று அடையாளமின்றி, சாட்சியின்றி அழித்துக் கொண்டிருக்கும் மகிந்த அரசு தண்டிக்கப்படாவிட்டால், உலகெங்கும்முள்ள மகிந்த போன்ற சர்வாதிகாரிகள், எந்தத் தயக்கமுமின்றி இலங்கையில் நடந்தது போன்ற மனிதப் படுகொலைகளை நிறைவேற்றுவர்.

இந்த சூழலில் இப்படுகொலைகளைச் சர்வதேச அரங்குக்குக் கொண்டுசெல்வதும், ராஜபக்ஷ குடும்பம் உட்பட அனைத்து யுத்தக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய சூழலை சர்வதேசத்திற்கு ஏற்படுத்துவதும் அவசரமாகச் செயலாற்ற வேண்டிய நிகழ்ச்சித்திட்டங்களாகும்.

இது மொத்த மனிதகுலத்திற்கும் நாம் செய்யும் சேவையாகும்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கிய சாட்சிகள் படுகொலையிலிருந்து உயிர் தப்பியவர்களாகும்.

இதுவரை இறுதிப் படுகொலை நாட்களின் போது உயிர் தப்பியிருக்கக் கூடிய யாரையும் கொலையாளிகள் விட்டுவைக்கவில்லை.

இந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனும் ஏனைய தலை மட்ட உறுப்பினர்களும் இன்னமும் உயிருடன் இருப்பதாக புலிகளின் ஆதரவளர்களும் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களும் கருத்து வெளியிடுகின்றனர்.

இது உண்மையானால், பிரபாகரன் தான் இருப்பதைத் ஆதாரபூர்வமாகத் மக்களுக்குத் தெரிவிக்கவேண்டும் இதனூடாக ஐம்பதாயிரம் மக்களின் படுகொலைக்குச் சாட்சியாவதுடன், அவர்களின் உடல்கள் உருக்கப்பட்டு படுகொலைக்கான அடையாளம் தெரியாமல் சிதைக்கப்படுவது உலகுக்குத் தெரியப்படுத்தப்படும்.

இந்திய, சீன,ஐரோப்பிய அரசுகளுக்கெதிரான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு ஒவ்வொரு தமிழ் மனிதனும் அழிந்து போவது தவிர்க்கப்பட வேண்டும். உயிருடன் இருந்தும் வெளிவராமல் இவர் தாமதித்தால் இலங்கை அரசு தனது சர்வதேச நாசகாரக் கூட்டாளிகளுன் இணைந்து அனைத்துத் தடயங்களையும் அழித்துவிட்டு, தனது இனப்படுகொலையை வேறுவடிவங்களில் மிக நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

தவிர புலிகள், விடுதலை இயக்கம் என்ற நிலைக்கும் அப்பால் பாசிச அமைப்பு என்ற நிலைக்கு வளர்ந்து விட்டதை அனைத்து ஜனநாயக மற்றும் முற்போக்குச் சக்திகளும் சுட்டிக்காட்டுகிறார்கள். இவ்வாறான தவறுகள் தான் நியாயமான ஒரு போராட்டத்தை சரணடைவிலும் தோல்வியிலும் முடித்து வைத்திருக்கிறது.

பிரபாகரன் வெளிவந்து தவறுகளைச் சுயவிமர்சனம் செய்துகொள்வதனூடாகவும் திருத்திக் கொள்வதனூடாகவும் இலங்கை அரச பாசிசத்திற்கெதிராகப் போராடும் அனைத்து சக்திகளுக்கும் உளவியல் வலிமையைக் வழங்க முடியும். இவற்றினூடாக மனிதப்படுகொலைகள் தற்காலிகமாகவேனும் நிறுத்தப்படும். ஆக, பிரபாகரன் உயிரோடிருந்தால், அவசரமக தன்னை வெளிப்படுத்திக்கொண்டு படுகொலைகளையும் கொலையாளிகளையும் அம்பலப்படுத்தும் வரலாற்று கடமையைச் செய்வதனூடாக தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திற்குப் புதிய பரிணாமத்தைக்கூட வழங்முடியும்.

மறு புறத்தில் பிரபாகரன் உயிரோடில்லாதிருந்தால் புலிகளின் எஞ்சியிருக்கும் பகுதியினரும் தலைமை அல்லது முடிவெடுகும் மட்டத்திலுள்ளோரும், பிரபாகரனின் இறப்பை உறுதிப்படுத்துவதனூடாக இது தொடர்பான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சிறீலங்கா அரசின் இனப்படுகொலையையும் யுத்தக் குற்றத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். புலிகளின் கடந்த காலத்தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு, புலிகளின் ஆதரவாளர்கள் புதிய போராட்டத்திற்கு பரந்துபட்ட ஜனநாயக சக்திகளோடு இணைந்து தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆரம்பத்திலிருந்தே புலம் பெயர் நாடுகளில் நடைபெற்ற மாபெரும் பேரணிகள் புலிகளைக் காப்பாற்றவன்றி மக்களைக் காப்பாற்ற, புலிகளின் கொடிகளும் கோசங்களுமின்றி நடாத்தப்பட்டிருந்தால், புலிகளின் தவறுகள் அனைத்தும் தமிழ் பேசும் மக்களின் தவறு என்ற அபிப்பிராயம் ஏற்பட்டிராது. இன்று தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திலிருந்து விலகி நிற்கும் ஆயிரக்கணக்கான மேற்குலக ஜனநாயக வாதிகள் எம்மோடு இணைந்து எமக்காகக் குரலெழுப்பியிருப்பர். ஈராக்கிய ஆக்கிரமிபின் போது அமரிக்காவிற்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பிய் பிரித்தானிய பிளேயரின் அரசையே அதிரவைத்த யாருமே புலம் பெயர் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்திலிருந்து அன்னியப்பட்டே நின்றனர்.

பிரபாகரன் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டு நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலையை மூடி மறைபதும் அதனை மேலும் வேறு வடிவங்களில் தொடர்வதும் என்பது இலங்கை அரசின் தந்திரோபாய வழிமுறை என்பதைப் புரிந்துகொண்டு, புதிய போராட்ட வழிமுறைகளை ஆராய்வதும் மக்களின் உடனடி மட்டும் மற்றும் நீண்ட காலத் தேவைகளை முன்நிறுத்தித் திட்டமிடலுமே அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களைத் தற்காலிகமாகவேனும் பாதுகாக்கும்.

இன்று மேற்கு நாடுகள் இனப்படுகொலைக்காகவும் போர்க்குற்றங்களுக்காகவும் முதலைக்கணீர் வடிக்கின்றன. இவையெல்லாம் மக்கள் மீதுள்ள பற்றினால் அல்ல. மனிதாபிமானமும் மக்கள் பற்றும் இருந்திருந்தால், நடாத்தி முடிக்கப்பட்ட மக்கள் படுகொலைகளைத் இந்த நாடுகள் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். தெற்காசியாவில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ளவே மேற்கு நாடுகள் இலங்கை அரசை மிரட்டுகின்றன. தாம் விரும்பியதை இந்நாடுகள் பெற்றுறுக் கொள்ளுமாயின் இலங்கை அரசை ஜனநாயக அரசாகயும் பயங்கர வாதத்திற்கெதிரான கதாநாயர்களாக ராஜபக்ஷ குடும்பத்தை மாற்றவும் இந்த நாடுகள் தயாராகவே இருக்கும். ஆக, மக்கள் மீதான நம்பிக்கையும், மக்களை அதிகாரத்திற்கெதிராக அமைப்பாக்கலும் உலக மக்களை அநீதிக்கெதிரான போராட்டத்தில் ஒருங்கிணைப்பதுமே போராட்டங்களின் வெற்றிக்கு வழிசமைக்கும்.

இந்திய அரசு இலங்கை அரசோடு இணைந்து எவ்வாறு இனப்படுகொலையை நடாத்தி முடித்திருக்கிறது என்றும், ஒரு காலத்தில் சோசலிசக் கட்டமைபில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த சீனா எவ்வாறு இனப்படுகொலைக்கு கொடிய ஆயுதங்களை வழங்கியும், இராஜதந்திர உதவிகளை வழங்கியும் ஆதரித்திருக்கிறது என்றும், உலகின் ஒரு மூலை இரத்தத்தால் குளிப்பாட்டப்படும் போது சில அறிக்கைகளோடு மௌனமாய் இருந்த மேற்குலகின் ஜனநாயகத்தையும், ஐக்கிய நாடுகள் சபையின் பச்சைத் துரோகத்தையும் நாம் கண்முன்னால் கண்ட சந்ததியைச் சார்ந்தவர்கள். இவர்களெல்லாம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் மக்கள்மீது மட்டும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்பது தான். இன்றைய இந்தப் புறச் சூழலைப் புரிந்துகொண்டு அரசிற்கெதிரான போராட்டத்தில் கடந்த காலத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட்ட புலி ஆதரவாளர்களும் ஏனைய ஜனநாயக முற்போக்கு சக்திகளும் புதிய பாதைக்குள் அடியெடுத்து வைப்போம்.

Exit mobile version