Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிணங்களின் மீதமர்ந்து பிறைச் சோறுண்பவனே…:எஸ்.ஹமீத்

பிணங்களின் மீதமர்ந்து பிறைச் சோறுண்பவனே…

***உனது ஆட்சிக்கான சாவுமணியை

நீயே அடிக்கிறாய்..
நாமென்ன செய்ய..?

***உன் அழிவுக்கான குழியினை
நீயே வெட்டுகிறாய்…
யார் என்ன செய்ய..?

***உனது அகங்காரங்கள்
உனக்கான பாடையை
அலங்காரம் செய்து கொண்டிருப்பதை நீ
அறிய மாட்டாய்…

***உனது கொடுங்கோலின் நுனி
உனக்கான கல்லறையைச் செதுக்கும்
உளியென்பதை நீ
உணர மாட்டாய்…

***மனிதத்தையும் மனிதர்களையும்
எரித்துக் குளிர் காய்பவனே…
பிணங்களின் மீதமர்ந்து
பிறைச் சோறுண்பவனே…

***உன் அரசாசனத்தை
அக்கினி சூழ
அதிக நாட்களில்லை…!

***ஆமாம்…

***உனது ஆணவ நடை
ஓயும்..
உன் அகம்பாவக் குடை
சாயும்…!

***உனது மாட மாளிகைகள்
மண்ணோடு புதையும்;
கூட கோபுரங்கள்
குப்பை மேடாகும்!

***எங்களின் தயவாலும்
நீ சூடிக் கொண்ட மகுடம்
இன்னும் சில மாதங்களில்
எரிந்து சாம்பலாகும்…

***உனது
கொற்றம் முடங்கும்…
அத்தோடுன்
கொட்டம் அடங்கும்…!

***அப்பாவிகளைக் கொன்று
பிணமலை சமைத்தவனே..உச்சியில்
கோரக் கொடியேற்றி
இரத்த கீதம் இசைத்தவனே…

***எட்டு நரகத்தின் வாயில்களும்
உன்னை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன…!

***உன் அதிகார வில்லிலிருந்து
நீ செலுத்தும்
பல சேனா அம்புகளை
அம்பறாத்தூணிக்குள்
அடக்கி வை…

***உறுமய வாள்களை
உறைக்குள் போட்டுக் கொள்…

***நீ மறந்துவிட்ட
புத்தனின் போதனைகளை
மறுபடியும் மறுபடியும்
ஞாபகம் கொள்…

***இன்றேல்..

***சிறுபான்மையென நீ கருதுவோரின்
சாபம்
உன்னைச் சிதைத்துச்
சீரழித்துச் சின்னாபின்னமாக்கிவிடும்..

***ஜாக்கிரதை!

Exit mobile version