சமாதான நடவடிக்கைகள் புலிகளின் ராணுவ தயார் நிலையை மோசமாகப் பாதித்திருப்பதாக புலிகளின் தளபதிகளில் ஒருவரான பானு உட்பட பலர் கருதினர். எந்த முடிவுகளையும் இறுதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனே எடுப்பார். எனினும் அவரின் முடிவுகளில் அதிக தாக்கம் செலுத்துவோராக கடும் போக்குடைய புலித்தலைவர்களே இருந்தனர். அத்தகைய கடும்போக்குடைய கருணா, பானு, கரிகாலன் போன்றோர் புலிகள் சமாதான நடவடிக்கைகளில் இருந்து பாலசிங்கத்தை ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறு அமெரிக்கத் தூதர் கேபிள் தகவல் அனுப்பியதை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் சமாதான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட இந்த தகவலை அமெரிக்க தூதரகத்தின் உயர் அதிகாரி லீவிஸ் எம்செலமுக்கு தெரிவித்துள்ளார்.
இதன்படி தாம் ஒட்டுக்கேட்ட தொடர்பாடல்களின் படி தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் மென்மைப்போக்கை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த உயர் தளபதி தரப்புகள் விரும்பவில்லை என்று மொரகொட குறிப்பிட்டர்.