Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பதுமனின் தலைமையில் உயிர்ப்பிக்கப்படும் புலிகள்

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கும் சதித்திட்டத்தை பாசிஸ்ட் கோத்தாபய ராஜபகசவே முன்னின்று நடத்துகிறார் என்று லங்கா நியூஸ்வெப் என்ற இணையம் தெரிவிக்கின்றது. அதன் மொழியாக்கம் வருமாறு:

‘உலக அளவிலும் உள்நாட்டிலும் செயலிழந்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உயிர்கொடுக்கும் இரகசியத்திட்டத்தை நாம் இங்கே வெளிப்படுத்துகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் யுத்தம் செய்யும் திறனையும் உயிர்ப்பித்து உலக சமூகத்தைத் தவறாக வழிநடத்துவதற்கு அரசு முயற்சிக்கிறது. இது முழுமையாக இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலரான கோத்தாபய நந்தசேன ராஜபக்சவினால் திட்டமிடப்பட்ட சதி முயற்சியாகும். மூன்று ஆயுதப்படைத் தளபதிகளுக்கும், உயர்மட்ட அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் இச் சதிமுயற்சி இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோத்தாபயவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அவருக்கு மிகவும் விசுவாசமான இராணுவ அதிகாரிகளின் துணையுடன் இச் சதித்திட்டம் தீட்டப்படுகின்றது.

இதன் முதல் பகுதி கேணல் பதுமன் என்று அழைக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவு தலைவர்களில் ஒருவரான சிவசுப்ரமணியம் வரதானந்தன் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளை உயிர்ப்பித்தலாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யூ.என்.பி அரச அதிகாரம் சமாதான ஒப்பந்ததை 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கைச்சாத்திட்ட அதே நாளில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட இரண்டு தலைவர்களில் பதுமனும் ஒருவர். மற்றவர் கருணா அம்மான் என்று அழைக்கப்பட்ட புலிகளின் கிழக்கு மாகாணத்தின் தலைவர். புலிகளின் உள் நடந்த அதிகாரப் போட்டியின் விளைவாக பதுமன் சிறைப்பிடிக்கப்பட, கருணா இயக்கத்திலிருந்து பிரிந்து செல்கிறார். ஏறக்குறைய 2 ஆண்டுகள் சிறையிலிருந்த பதுமன் இறுதிக்கட்டப் போரின் போது சிறையிலிருந்து தப்பிச் சென்று இலங்கை அரச படைகளிடம் சரணடைகிறார். பதுமனை அணுகும் நோக்கில் கோத்தாபாய முதலில் கருணாவை வேலைக்கு அமர்த்திக்கொண்டார். இலங்கை அரசாங்கத்தின் பிரதி அமைச்சராகவிருக்கும் கருணாவும் பதுமனும் இந்த ஆண்டு நடுப்பகுதியில் சிறையில் சந்தித்துக் கொண்டனர்.

இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப்போராட்டத்தை தாம் முன்னெடுக்க வேண்டும் என பதுமன் நேரடியாகவே கருணாவிற்குக் கூறினார். பின்னர் பதுமனை கோத்தாபயவின் நிகழ்ச்சித் திட்டத்திற்குள் இணைக்க முடியவில்லை என கருணா கோத்தாபயவிடம் சொல்கிகிறார்.

தானே நேரடியாகத் தலையிட்ட கோத்தாபாய பதுமனை இரகசிய இடம் ஒன்றில் சந்திக்கிறார். இதன் பலனாக பதுமன் அனைத்துக் குற்றங்களிலிருந்தும் நீக்கப்பட்டு திருகோணமலை நீதிபதி அமால் ரனராஜவினால் அவருக்கெதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் செப்டெம்பர் மாதம் விடுதலை செய்யப்படுகிறார்.

பதுமன் இப்போது திருகோணமலையில் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார். வெளியுலகிற்கு இவர், அனைத்திலிருந்தும் ஒதுங்கிய அமைதியான பக்தி நிறைந்த மனிதனாக வாழ்கிறார். உண்மை என்னவென்றால் தனது கட்டுப்பாட்டில் புலிகளில் இராணுவத்திலிருந்த 40 உறுப்பினர்களை இவர் கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் பனாகொட இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள இரகசிய இடமொன்றில் இராணுவப் பயிற்சியைப் பெறுகின்றார்கள். பயிற்சியளிக்கப்படும் இவர்கள் காடுகளிலிருந்து தாக்குதல்களை நடத்துவார்கள். அவர்களுக்கு கோதாபய ராஜபக்ச தேவையான உதவிகளைச் செய்துவருவார். பதுமனின் பாவனைக்காக முப்படைத் தளபதிகள் வசிக்கும் உயர் பாதுகாப்பு வலையத்தில் அமைந்துள்ள பகுதியில் விலையுயர் வீடு ஒன்று கோத்தாபயவினால் வழங்க்கப்பட்டுள்ளது.’

இத் தகவலை வெளியிட்டுள்ள லங்கா நியூஸ் வெப் இணையம் தம்மிடம் மேலதிக தகவல்களும் இருப்பதாகக் கூறுகின்றது. வடமாகாண அரசியல் வாதிகளைக் கொலைசெய்வதற்காகவும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிராகவும் புதிதாக உருவாக்கப்படும் புலிகள் பயன்படுத்தப்படலாம் என்கின்றனர்.

இத் தரவுகளின் உண்மைத் தன்மை தொடர்பான கேள்விகள் ஒருபுறமிருக்க மறுபுறத்தில் இதற்கான சாத்தியங்களை யாரும் மறுக்க முடியாது.
எந்த சமூகப்பார்வையும் வர்க்க அடிப்படையும் இன்றி குறியீடுகளையும் அடையாளங்களையும் மட்டுமே முன்வைத்து முன்னெடுக்கப்படும் அரசியலை ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திகொள்வதைப் போன்றே உள்ளூர் இனக்கொலையாளிகளும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

தமிழ் நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும் பிரபாகரன், புலிகள் என்ற அடையாளங்களுக்கு ஊடாக மட்டுமே மக்களை ஒருங்கிணைக்கிறார்கள். அவ்வாறு அரசியலற்று இணைக்கப்பட்ட மக்களை தமது வர்த்தக நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலுள்ள கால்பந்தாட்ட சங்கங்களைப் போல, இந்தியாவிலுள்ள துடுப்பாட்ட சங்கங்களைப் போன்று ஒரு குறித்த அடையாளத்தை உருவக்கி அதனை பணம் சேர்க்கும் கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கால்பந்தாட்ட சங்களில் விற்பனையாகும் கொடிகள், ஆடைகள் போன்றன பல ஆயிரக்கணக்கில் பணம் திரட்டிக் கொடுக்கின்றன. அதற்கு எந்த வகையிலும் குறைவின்றி புலிகள் அமைப்புச் சார்ந்த நினைவு நிகழ்வுகளிலும், ஏகாதிபத்தியங்களை இரைஞ்சும் போராட்டங்களிலும் விற்பனையாகும் குறியிட்ட்டுப் பொருட்கள் பணத்தை ஈட்டிக்கொடுக்கின்றன.

தவிர, இந்த அரசியலற்ற இணைப்பு கலாச்சார நிகழ்வுகள் என்ற பெயரில் தென்னிந்திய சினிமாக் குப்பைகளை இறக்குமதி செய்வதற்கும் அதனை தமது கலாச்சாரம் என்று பறைசாற்றி பணம் சம்பாதிக்கவும் உதவிசெய்கின்றது.

இந்த அழிவிற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கோரும் ஜனநாயக முற்போக்கு சக்த்திகளை அழிப்பதற்கு இதே வியாபாரிகளால் நடத்தப்படும் இணைய ஊடகங்கள், தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள் போன்றன பயன்படுகின்றன.

எந்தத் தீய சக்தியாலும் கையாளப்படத்தக்க இக்குறியீடுகளும் அடையாளங்களும் போராட்டம் குறித்த நியாயமான விமர்சனங்களை நிராகரிப்பதற்கும் அழிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

புலிகளும் ஏனைய இயக்கங்களும் முன்வைத்த அரசியலை நிராகரித்து ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் ஒன்றிற்கான அரசியல் திட்டம் உழைக்கும் மக்களின் தலைமையில் முன்வைக்கப்படும் வரைக்கும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் அழிவுப் பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்கும்.

http://lankanewsweb.com/exclusive/5974-arms-funding-from-gota-to-revive-ltte

ராஜபக்சவின் தமிழ் நண்பர்கள்

Exit mobile version