Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

திருமாவுக்கு ஒரு கடிதம்…வேந்தன்

 
அன்புள்ள அண்ணன் திருமாவளனுக்கு,
வணக்கம்,

“அடங்கமறுப்போம், அத்துமீறுவோம், திமிறியெழுவோம் திருப்பியடிப்போம்” என்கிற ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் நீங்கள் தமிழக அரசியல் வானில் பிரவேசித்த போது உண்மையிலேயே நாங்கள் எல்லாம் மகிழ்ந்தோம் இருக்கிற அரசியல்வாதிகளில் ஒரு உபயோகமானவராக அதுவும் தலித் தலைவராக நீங்கள் உயர்ந்து வரும் போது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பீர்கள் என்று நம்பினோம். ஆரம்பகாலத்தில் முன்வைத்த கோஷங்கள் இன்று உங்களிடம் மாறியிருக்கிறது. அடங்கி நடப்போம். திமிறமாட்டோம், திருப்பிஅடிக்க மாட்டோம் என்கிற அளவில் கொள்கை மாற்றத்தையும் பதவி அரசியலை நோக்கிய நகர்வையும் இன்று உங்களிடம் காண முடிகிறது. சிறுத்தைகளின் துவக்கம், கடந்து வந்த பாதை எனச் சென்றால் அது நீண்ட பிரதியாகிவிடும் என்பதால் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியின் போது கருணாநிதி உங்களை எப்படி நடத்தினார் என்பது நினைவிருக்கும் என நினைக்கிறேன். “சிறுத்தைகள் எங்களுடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது இன்னும் தெரியவில்லை. இருக்கவும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்” என்றார். உங்களுக்கோ ஜெயலலிதாவும் உங்களைச் சேர்ந்த்துக் கொள்ளவில்லை. தமிழ் குடிதாங்கி என்றூ நீங்கள் பட்டம் கொடுத்த மருத்துரய்யாவும் உங்கள் காலைவாரினார். கடைசியில் வேறு வழியில்லாமல் பேச்சின் வீச்சைக் குறைத்துக் கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டிக் கொண்டீர்கள். நீங்கள் காங்கிரஸ் காரர்களிடம் வருத்தம் தெரிவித்ததாக தங்கபாலு வெளிப்படையாகவே பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
நீங்கள் அதை மறுக்கவில்லை. சென்னையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சோனியாவுடன் ஒரே மேடையில் தோன்றினீர்கள். தோதாக, தந்திரமாக கூட்டணிக்கு பாதகமில்லாமல் பேசினீர்கள். தேர்தல் வரை பிரச்சனையில்லாமல் சிதமப்ரம் தொகுதியில் வெற்றியும் பெற்றீர்கள். உங்களின் பாராளுமன்றக் கன்னிப் பேச்சு ஈழம் பற்றியதாக இருந்தது உண்மையிலேயே மகிழ்ச்சியளித்தது. ஆனால் அந்தப் பேச்சைக் கேட்க பிரதமரோ, சோனியாவோ, சிதம்பரமோ எவர் ஒருவரும் அங்கு இல்லையே இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருந்தால் பாராளுமன்ற ஜனநாய்கத்தின் மூலம் தமிழ் மக்களுக்காக போராடலாம் என்ற ந்மபிக்கை உங்களுக்கு இருந்திருக்கும். ஆனால் இன்றைக்கு வரை உங்களால் பாராளும்னறத்தில் விருப்பத்தோடு பணி செய்ய முடிகிறதா? நினைத்ததைப் பேச முடிகிறதா?

இப்போது பாருங்கள் இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் அகப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நெடுமாறன், வைகோ, பெரியார் திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்தாலும் கூட ஈழம் என்று வந்தால் சமரமில்லாமல் போராடுகிறார்கள். ( நம்க்கு உடன்பாடில்லா விட்டாலும் கூட) தமிழக அரசின் கொடூர அடக்குமுறைகளைக் கண்டு கலங்காமல் போராடுகிறார்கள். ஆனால் ஈழம் குறித்து ஒரு விளம்பரப் பலகை கூட சென்னையில் உங்களால் வைக்க முடியவில்லை. பிரபாகரன் என்றோ புலிகள் என்றோ கூட அல்ல ஈழம் என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்று கருப்பு மை பூசி அளித்தார்கள் தமிழக காவல்துறையினர். சில இடங்களில் உங்கள் கட்சியினரே போலீசார் முன்னிலையில் தார்பூசி ஈழம் என்ற சொல்லை அழித்ததும் நடந்திருக்கிறது. நீங்களோ இப்போது என்ன சொல்கிறீர்கள். “சிறுத்தைகளைச் சீண்டிப் பார்க்கிறார்கள். நாம் அதற்கு பலியாகிவிடக் கூடாது ” என்கிறீர்கள். நீங்கள் உதிர்த்திருக்கும் இந்தச் சொற்கள் பதவி அரசியலில் சந்தர்ப்பவாத வரிகளா? அல்லது இதை விட்டால் வேறு வழியில்லை என்பதால் எடுத்துக் கொண்ட வரிகளா? உங்கள் அணியிலேயே கருணாநிதிக்கு வேண்டியவராக இருக்கும் பேராசிரியர் சு.பவீரபாண்டியனிடம் நீங்கள் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டு. அவர் ஈழம் என்பதையோ ஈழ விடுதலை என்பதையோ கருணாநிதியிலிருந்தே அணுகுவார். கருணாநிதி வேண்டாம் என்றால் இவரும் வேண்டாம் என்பார். அவர் வேண்டும் என்றால் இவரும் வேண்டும் என்பார். மற்றபடி ஈழம், புலி ஆதரவு இதெல்லாம் சுபவீக்கு இப்போது புளித்துப் போன விஷயங்கள். அவர் மௌனமாக கலைஞர் தொலைக்காட்சியில் தனக்கு வழங்கியிருக்கும் வாய்ப்பைப் பார்த்துக் கொண்டு கண்ணியமான அமைதியோடு இருக்கிறார். நீங்களும் ஏன் இப்படி பேசாமல் அமைதியாக இருக்க முடியாது. அல்லது ஈழ மக்களுக்காக உண்மையிலேயே நீங்கள் குரல் கொடுக்க நினைத்தால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஏன் நீங்கள் வெளியேறக் கூடாது? என்று கேட்டால் நான் எங்கே காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறேன். திமுக கூட்டணியில்தான் சிறுத்தைகள் உள்ளார்கள்.திமுகவிற்கும் எங்களுக்குமான உறவு கொள்கை ரீதியிலானது என்று பேசுகிறீர்கள் தந்திரமான பேச்சு. ஆனால் உங்களின் திமுக மீதான விசுவாசம்தான் முட்டாள்தனமானது.
உங்களின் கண்மூடித்தனமான விசுவாசத்தால் மட்டுமே உங்களுக்கு இந்த நாடாளுமன்ற இருக்கை கிடைத்துள்ளது ஆனால் அதனால் என்ன பயன்? எம்.பி என்கிற உரிமையில் ஐய்ரோப்பாவுக்கு விசா இல்லாமல் வருவதற்காகவா? இந்தப் பதவி?

இதோ பாருங்கள் மீண்டும் உங்களையும் சிறுத்தைகளையும் கடுமையாகத் தாக்கத் தொடங்கி விட்டார்கள் காங்கிரசார். நீங்கள் அவர்கள் குறீத்து எதுவுமே பேசவில்லை மத்திய அரசை விமர்சிக்கிறீர்கள் ஆனால் அவர்களோ சோனியாவை விமசிப்பதை நாட்டின் இறையாண்மை குறித்த பிரச்சனையாக மாற்றுகிறார்கள். இதோ காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்ன சொல்லியிருக்கிறார் என நீங்களும் கேட்டிருப்பீர்கள். “சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் தயவு இல்லாமல் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறி வருகிறார்கள். நமது தயவில் ஜெயித்து டெல்லியில் சல்யூட் அடித்து சலுகைகள் பெற்று வருபவர்கள்தான் இப்படிப் பேசுகிறார்கள்.” இதையும் கேட்டுக் கொண்டு அமைதியாக நீங்கள் செல்லலாம். ஏனென்றால் நாம் அரசியலில் இறங்கி விட்டோம். ரியல் எஸ்டேட் முதலாளிகளில் தொடங்கி கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் வரை கட்சிக்குள் வளர்ந்து விட்டார்கள். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ” என்று நீங்கள் செல்லலாம். ஆனால் தலித் மக்களுக்கான விடிவெள்ளி என்று உங்களை நம்பிவந்த ஒரு தலித்தோ, ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் இருக்கிற ஒரே நம்பிக்கை நட்சத்திரம் திருமாவளவன் என்று நம்புகிற ஈழத் தமிழனோ இவைகளைக் கேட்டால் இரண்டு விஷயம் நடக்கும் ஒன்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது கோபம் வரும் அல்லது தேய்ந்து வருகிற உங்களின் முதுகெலும்பிலிருந்து அவர்கள் நம்பிக்கை இழப்பார்கள். பதவி, கூட்டணி, சந்தர்ப்பவாத அரசியல் இதை எல்லாம் கடந்த ஒரு அரசியல்வாதியாக உங்களால் இருக்க முடியாதா?

Exit mobile version