Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் நாட்டில் சித்திரவதைக்கு உள்ளாகும் ஈழத் தமிழர்கள் விடுதலை கோரி ஆர்ப்பாட்டம்

rsyf-21தமிழ் நாட்டிற்கு அகதிகளாகச் சென்ற ஈழத் தமிழர்களை கியூ பிரிவு போலிசாரின் கண்காணிப்பின் அடிப்படை மனித உரிமைகளை மறுத்துத் தமிழ் நாட்டு அரசு சிறை வைத்துள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக விலங்குகள் போல நடத்தப்படும் இந்த மனிதர்களின் விடுதலை கோரி இதுவரைக்கும் குறிப்பான போராட்டங்கள் எதுவும் நடைபெற்றதில்லை. புலம் பெயர் பிழைப்புவாதிகளோடு கைகோர்த்துக்கொண்டிருக்கும் ‘தமிழ் உணர்வாளர்கள்’ என்று அழைக்கப்படும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் இதுவரை தமது எல்லைக்குள்ளேயே நடத்தப்படும் இக் கொடுமைக்கு எதிராகக் குரல்கொடுத்ததில்லை.

அடுத்த ஈழப்போர் தொடங்குகிறது என்றும் ஈழம் பெற்றுக்கொடுப்போம் என்றும் போலி நம்பிக்கைகளை வழங்கி முள்ளி வாய்க்கால் படுகொலைகள் வரை மக்களை ஏமாற்றிவந்த இந்த தமிழ் நாட்டு ‘உணர்ச்சி அரசியல் வாதிகள்’ தமிழ்ப் பேசும் மக்களின் சுயர நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைச் சீர்குலைப்பதில் கணிசமான பங்கு வகித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த பதினோரு நாட்களாக செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மூன்று ஈழத்தமிழ் அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே சிறப்பு முகாமில் நேற்று சசிதரன் என்கிற அகதி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். தற்போது அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இதை கண்டித்து இன்று காலை ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன. வரலாற்று முக்கியத்துவமுள்ள இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஊடக வியாபாரம் நடத்தும் புலம் பெயர் ஊடகங்கள் மூலையில் கூட செய்தி வெளியிடவில்லை.

ஈழத்தமிழ் அகதிகளில் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதி முகாம் எனும் பெயரில் அடைக்கப்பட்டுள்ளனர். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் எந்த நேரமும் போலீசு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அகதி முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் போலீசாரின் பொய் வழக்குகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் 29.04.2013 அன்று செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்த சசிகரன் என்ற ஈழத் தமிழர் கியூ பிரிவு போலீசின் சித்திரவதை காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சசிகரனை சித்திரவதை செய்து தற்கொலைக்குத் தூண்டிய கியூ பிரிவு போலீசாரை கைது செய்!
சிறப்பு அகதிமுகாம் எனும் சித்திரவதைக் கூடாரத்தை இழுத்து மூடு!
ஈழத் தமிழ் அகதிகள் அனைவரையும் விடுதலை செய்!
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 30.04.2013 அன்று சென்னை பனகல் மளிகை அருகில் காலை 11 மணிக்கு
செங்கல்பட்டு அகதிமுகாமில் ஈழத்தமிழர் சசிதரனை தற்கொலைக்குத் தூண்டிய கியூ பிரிவு போலீசாரை கைது செய்! சிறையிலடை!
செங்கல்பட்டு முகாம் என்பது சிறப்பு அகதிமுகாமல்ல! சித்திரவதை கூடாரமே !
இழுத்துமூடு ! இழுத்துமூடு !
ஈழத்தமிழ் அகதிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் சிறப்பு அகதிமுகாம் எனும் சித்திரவதை கூடாரங்களை
இழுத்து மூடு இழுத்துமூடு !
என்ற முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக் கிளை செயலர் தோழர் கார்த்திகேயன் “ஈழத்தமிழ் அகதிகள் கைதிகளாக அடைத்து சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே சசிதரன் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இக்குற்றத்துடன் தொடபுடைய கியூ பிரிவு போலீசை கைது செய்ய வேண்டும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அனைத்து ஈழத்தமிழ் அகதிகளையும் விடுதலை செய்ய வேண்டும். அதையொட்டி நாளை தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பேரணி முற்றுகை நடத்தவுள்ளோம் ” என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை போலீசு கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது.

அருகில் உள்ள வியாபாரிகள் பொதுமக்கள் இப்பிரச்சினைக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

மனித குலத்தை அவமதிக்கும் தமிழக அரசிற்கு எதிரான இப்போராட்டம் போலிகளையும் அம்பலப்படுத்தியுள்ளது.

Exit mobile version