Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் 4 : T .சௌந்தர்

கர்னாடக இசையை ஆதாரமாககக் கொண்டு ஜி.ராமநாதன் .எஸ்.எம். சுப்பையா நாயுடு ,எஸ்.வீ .வெங்கட்ராமன் போன்ற மூத்த தலைமுறை இசையமைப்பாளர்கள் 1950 களின் இறுதிவரை ராகங்களைஅடிப்படையாகக் கொண்ட ராகங்கள் வெளிப்படையாத் தெரிகின்ற பாடல்களைத் தந்தார்கள்.

1950 களிலேயே மெல்லிசைகளின் ஒளிக்கீற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிய ஆரம்பித்தது.சுப்பராமன் இசைவாரிசுகளாக ஏ.எம் .ராஜா, விஸ்வநாதன் ராமமூர்த்தி அந்த திசையில் பயணித்த முக்கியமானவர்களாக இருந்தனர்.பணம் [1953 ] படத்தின்மூலம் அவர்கள் அறிமுகமாகினாலும் சில வருடங்களின் பின்னர் தான் அவர்கள் பிரபலமாகிறார்கள்.

* கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே படம் : மகாதேவி [1957 ] A.M.ராஜா + P.சுசீலா

* துள்ளித் துள்ளி அலைகள் எல்லாம் என்ன சொல்லுது படம் : தலை கொடுத்தான் தம்பி [1957 ] A.M.ராஜா + P.சுசீலா

* தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் படம் : பெற்ற மகனை விற்ற அன்னை [1958 ] A.M.ராஜா + P.சுசீலா

* வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே படம் : பதிபக்தி [1959 ] T.M.சௌந்தரராஜன்

* கனிந்த காதல் இன்பம் என்றானே படம் : ராஜாமலையசிம்மன் [1959 ] P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா

* விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே படம் : புதையல் C.S.ஜெயராமன் + P.சுசீலா

* நானன்றி யார் வருவார் படம் : மாலையிட்ட மங்கை [1959 ] T.R.மகாலிங்கம் + A.B.கோமளா

* சின்னஞ் சிறு கண் மலர் செம்பவழ வாய் மலர் படம் : பதிபக்தி [1959 ] P.சுசீலா

போன்ற நல்ல பாடல்களை தந்த நேரத்தில் , மூத்த இசையமைப்பாளர்கள் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களுடன் போட்டி போடவும் நேர்ந்தது. எம்.ஜி.ஆர் , சிவாஜி போன்ற பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மூத்த இசையமைப்பாளர்கள் இசையமைத்துக் கொண்டிருந்தார்கள். இளையராஜா போல எடுத்த எடுப்பிலேயே புகழ் பெற முடியவில்லை.அதற்காக அவர்கள் நிறைய பாடுபட வேண்டியிருந்தது.கீழே உள்ள படங்களின் பட்டியலை கவனித்தாலே புரியும்.அவர்கள் அந்தக்கால ஜாம்பவான் இசையமைப்பாளர்களுடன் போட்டி போடும் நிலைமை தான் இருந்தது.

1. மிஸ்ஸியம்மா [1955 ] எஸ்.ராஜேஸ்வர ராவ்

2. கோடீஸ்வரன் [1955 ] எஸ்.வீ .வெங்கட்ராமன்

3. கோமதியின் காதலன் [1955 ] ஜி.ராமநாதன்

4. நல்ல தங்கள் [1955 ] ஜி.ராமநாதன்

5. அமரதீபம் [1956 ] டி .சலபதி ராவ்

6. சதாரம் [1956 ] ஜி.ராமநாதன்

7. கோகிலவாணி [1958 ] ஜி.ராமநாதன்

8. நான் பெற்ற செல்வம் [1958 ] ஜி.ராமநாதன்

9. தாய்க்குப் பின் தாரம் [1956 ] கே .வீ . மகாதேவன்

10. இரும்புத்திரை [1958 ] எஸ்.வீ .வெங்கட்ராமன்

11. ரம்பையின் காதல் [1956 ] டி.ஆர்.பாப்பா

12. மதுரை வீரன் [1956 ] ஜி.ராமநாதன்

13. காத்தவராயன் [1957 ] ஜி.ராமநாதன்

14.அம்பிகாபதி [1957 ] ஜி.ராமநாதன்

15 .சமயசஞ்சீவி [1957 ] ஜி.ராமநாதன்

16 .சக்கரவர்த்தித் திருமகள் [1957 ] ஜி.ராமநாதன்

17. நீல மலை திருடன் [1957 ] கே .வீ . மகாதேவன்

18. மக்களைப் பெற்ற மகராசி [1957 ] கே .வீ . மகாதேவன்

19. உத்தமபுத்திரன் [1958 ] ஜி.ராமநாதன்

20. தங்க மலை ரகசியம் [1957 ] டி.ஜி.லிங்கப்பா

21. கடன் வாங்கிக் கல்யாணம் [1958 ] S.ராஜேஸ்வர ராவ்

22. சபாஸ் மீனா [1958 ] டி.ஜி.லிங்கப்பா

23 சாரங்கதாரா [1958 ] ஜி.ராமநாதன்

24. சக்கரவர்த்தித் திருமகள் [1958 ] ஜி.ராமநாதன்

இவர்களுடன் முக்கியமாக கே.வீ .மகாதேவனும் சமதையாக இசையமைத்துக்கொண்டிருந்தார்எனபதும் குறிப்பிடத்தக்கது..எம்.ஜி.ஆர் ,சிவாஜி இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி என்ற படத்திற்கு இசையமைத்தவர்கே.வீ.மகாதேவன்.

பொதுவாக அன்றைய இசையமைப்பாளர்களின் பாடல்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டிருந்தன.எல்லோரும் அருமையான , நல்ல பாடல்களை மட்டும் தருவோம் ” என்று சபதம் செய்தது போல் பாடல்களை தந்து கொண்டிருந்தார்கள்.மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அழகாக சொல்வார் ” வீணான பாட்டே கிடையாது ” என்று.

மகாதேவி [1957 ] படத்தில் மெல்லிசை மன்னர்கள் இசையமைத்த பாடல்கள் மிகச் சிறப்பானவை. உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்கும் அற்ப்புதமான பாடல்கள் சிலவற்றை தந்தார்கள்.குறிப்பாக

1 . சிங்கார புன்னகை கண்ணார கண்டாலே [ பாடியவர்கள் : எம். எஸ்.ராஜேஸ்வரி + ஆர்.பாலசரஸ்வதிதேவி ]

இந்தப் பாடல் மூலம் தமிழ் திரை இசையில் தாலாட்டு பாடல் அமைப்பில் ஒரு புதிய போக்கு [ new trend ] ஏற்படுத்தியது என்றும் தாலாட்டுப் பாடல் என்றால் அந்த பாடல் அமைக்கப்பட்ட ராகத்தில் [ ஆபேரி ராகம் ] தான் அமைய வேண்டும் என்ற போக்கு பின்னாளில் அதன் விளைவால் ஏற்பட்டது என்பார் ” மெல்லிசை மன்னர் ” திரு.எம்.எஸ்.விஸ்வநாதன்.ஆனாலும் 1954 இல் வெளிவந்த இல்லற ஜோதி என்ற படத்தில் இசைமேதை ஜி. ராமநாதன்

கண்ணல்ல தூங்கம்மா செல்ல
கண்ணல்ல தூங்கம்மா”

என்ற பாடலை ஆபேரி ராகத்தில் அமைத்து ஒரு முன் மாதிரியாக திகழ்ந்தார்.இதைப் போலவே பராசக்தி [ 1952 ] படத்தில் வரும் ” கொஞ்சு மொழி பைங்கிளியே ” என்ற பாடலை தேஷ் ராகத்தில் ஆர். சுதர்சனம் இசையமைத்திருந்தார். தமிழ் செவ்வியல் இசையில் [ கர்னாடக இசை ] தாலாட்டு பாடல்கள் என்றால் இன்ன இன்ன ராகங்ககளில் தான் இருக்க வேண்டும் [ குறிப்பாக நீலாம்பரி , குறிஞ்சி ,ஆனந்தபைரவி போன்ற ராகங்களில் ] என்கிற நியதிகளை அன்றே மீறி இருக்கிறார்கள்.அந்த ராகங்களில் சில ஒலி அதிர்வுகள் இருப்பது உண்மையாக இருக்கலாம்.ஆனாலும் அவற்றை எல்லாம் மீறி ஆபேரி போன்ற ராகங்களிலும் தாலாட்டு பாடல்களைத் தந்தார்கள்.

2 . மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு [ பாடியவர் : டி.எஸ்.பகவதி ]

இந்த பாடல் உணர்ச்சி வெளிப்பாட்டில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட பாடல். கதையோட்டத்திற்கு பொருத்தமாக மனதை உருக வைக்கும் ராகங்களில் [ பைரவி , ஹிந்தோளம் , ஆபேரி ] அமைத்து மக்களை இசையால் கட்டி போட்டார்கள்.இந்த பாடல் காட்சியில் நடிகை சாவித்திரியின் முக பாவங்கள் மிக அற்ப்புதமாக இருக்கும்.இசை நாடகங்களுக்கு பயன் படத் தக்க வகையில் மிகச் சிறப்பாக இசையமைக்கப்பட்ட பாடல் இதுவாகும்.இந்த வகை இசை பாணியை நாடகங்களில் பயன் படுத்தி நாம் பயன் அடையலாம்.

இது போலவே கற்ப்புக்கரசி , காத்தவராயன் போன்ற படங்களில் , சில பாடல்களில் இசை மேதை ஜி.ராமநாதன் பாடல்களிலேயே கதை சொல்லும் முறையை கையாண்டு ஒரு சிறந்த முன்னோடியாக விளங்கினார்.

இந்த இசையின் உன்னதங்களை , வெற்றிகளை எல்லாம் நடிகர்களும் ,அவர்களை சார்ந்த அரசியல் இயங்கங்களும் [தி.மு.க ] தங்கள் உயர்வுக்கு பயன் படுத்தினார்கள்.உண்மையில் இந்த வெற்றிகள எல்லாம் இசையமைப்பாளர்கள் பெற்றிருக்க வேண்டியவையே!! எத்தனையோ நூற்றுக்கணக்கான இனிமையான பழைய பாடல்களை ரசிக்கும் நாம் ,அந்தப்பாடல்கள் இடம் பெற்ற படங்களை மிகுந்த சகிப்பு தன்மையுடன் தான் இன்று பார்க்க வேண்டிய நிலை உள்ளது.சில படங்களை பார்க்கும் போது கொடிய தண்டனை அனுபவிப்பது போலிருக்கும்! ஆனாலும் பாடல்களாலேயே அந்த படங்கள் ஞாபகப் படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால்அந்த பாடல்களை தந்த இசை மேதைகள் பத்தோடு பதினொன்றாக ஆக்கப்பட்டார்கள். நியாயமாக அவர்கள் பெற வேண்டிய அங்கீகாரங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்கள் கடினப்பட்டு உழைத்து உருவாக்கிய பாடல்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் பாட்டாகவும் , சிவாஜி பாட்டாகவும் அறியபட்டன.படங்கள் வெற்றி பெற்றால் பாடல்களும் வெற்றி பெறும்.அவர்களுக்கு எந்தவிதமான விருதுகளும் வழங்கப்படவில்லை.இசை மக்களைக் கவர்ந்தது என்றாலும் இசை பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலம் என்பதால் அவர்கள் சரியாக கவனிக்கப்படாமல் போயினர்.தங்களுக்கான தனித்துவத்தைப் பேணும் அதே நேரம் , மிகவும் சிறப்பான பாடல்களையும் தந்தார்கள்.பின்னாளைப் போல நடிகர்களின் குழு மனப்பான்மை இல்லாத காலத்தில் இவை நடந்தன எனலாம்.நடிகர்கள் தங்களுக்குள் போட்டி போட்டாலும் இசையமைப்பாளர்கள் பாகுபாடின்றி குழு நிலைக்குள் சிக்காமல் இருந்த காலமும் அதுவாகும் எனலாம்.

பாடகர்களிலும் பொதுவாக எல்லோரும் பாடிக்கொண்டிருந்தார்கள்.இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் என்றில்லாமல் இனிமையான குரலக்ளில் பாடல்களின் தன்மைகளுக்கு ஏற்றவாறு பொருத்தமானவர்கள் பாடியதால் பாடலகள் சுவையாகவும் இருந்தன.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ஜெமினி கணேஷன் போன்ற நடிகர்களுக்கு ஒரே படத்தில் வெவ்வேறு பாடகர்கள் ,வெவ்வேறு விதமான பாடல்களை பாடினார்கள்.ஒரே படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஏ .எம்.ராஜாவும் , டி .எம் சௌந்தரராஜனும் , பி.பி.ஸ்ரீநிவாசும் பாடிய படங்களும் உண்டு.அதனால் நல்ல பல பாடல்கள் தொந்தரவாகப் பாடப்படாமல் தப்பித்துக் கொண்டன.

பின்னாளில் துரதிஸ்டமான முறையில் தமிழ் சினிமா இசையில் இருந்து தானே ஒதுங்கி நின்ற, [அல்லது அவ்வாறான ஒரு நிலைக்கு அவரை கொண்டு செல்லப்பட்ட ] மாபெரும் இசைக்கலைஞன் A.M. ராஜா எழுபதுகளின் மத்தியில் ஒரு பேட்டியில் நல்ல பாடல்கள் பற்றி கேட்ட போது பின்வருமாறு கூறினார்.

” இன்னாருக்கு இன்னார் தான் பாட வேண்டும் , என்ற நிலை மாறவேண்டும். அந்நிலை மாறினால நல்ல பாடல்கள் வர வாய்ப்புக்கள் உண்டாகும்.”

பொதுவாக அந்தக்காலப் படங்கள் ராஜா ராணிக் கதைகளாகவே இருந்தன.அதனாலே விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றவர்களும் முன்னவர்களை போன்றே இசையமைக்க வேண்டி இருந்தது.எனினும் அவற்றிலும் கிடைக்கும் காட்சிகளுக்குப் பொருத்தமாக சில பாடல்களில் வெளிநாட்டு இசையை பயன்படுத்தி வந்தார்கள்.குறிப்பாக குலேபகாவலி படத்தில்

ஆசையும் என் நேசமும் இரத்த பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா என்று கே.ஜமுனாராணி பாடும் பாடலில் [ படத்தில் ஆதி வாசிகளுக்கு நடுவே பாடும் பாடல் ]

THE GREEN COCKATOO [ HITS OG 46 ] ROBERTO INGLEZ & HIS ORCHESTRA என்ற லத்தீன் அமெரிக்க பாடலின்ஒரு சிறிய பகுதி சேர்ந்து மறைந்து விடும்.

நல்ல மெட்டுள்ள ஹிந்தி திரைப்படப் பாடல்களை நகல் எடுப்பதும் நடந்தன.செந்தமிழ் தென் மொழியாள் என்ற பாடல் , நௌசாத் இசையமைத்துப் புகழ் பெற்ற பாடலின் நேரடியான தழுவலாகும்.இது கண்ணதாசன் தயாரித்த படமான மாலையிட்ட மங்கை [1959 ] என்ற படத்தில் இடம் பெற்றது.. கண்ணதாசன் ,தனக்கு பிடித்த அந்த ஹிந்தி பாடலின் மெட்டில் , தனது வரிகளை போட்டு மகிழ்ந்தார் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் , இதே பாடல் வேறு ஒரு படத்திலும் மோக முத்தம் தருமாம் மலர் கொடியாள் என்ற பாடலாக, மேலே சொன்ன ஹிந்திப் பாடலின் நேரடித் தழுவலாகவும் வெளி வந்தது.

1940 களின் மத்தியில் இந்தி திரை இசையில் இசையமைப்பாளர் சி .ராமச்சந்திரா சாக்ஸபோன் , கிடார் ,ஹார்மோனிகா, ஒபோ , ட்ரம்பெட் ,கிளாரினெட்,பொன்கொஸ் போன்ற மேலைத்தேய வாத்தியங்களை அறிமுகம் செய்தது போல தமிழ் திரை இசையில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மேல் குறிப்பிடபட்ட வாத்தியங்களுடன் ஹிந்துஸ்தானி இசைக்கருவிகளான செனாய், சித்தார் போன்ற புதிய வாத்தியகருவிகளை தமது இசையில் பயன்படுத்தினார்கள்.

 

Shehnai [1947 ] என்ற படத்தில் சி .ராமச்சந்திரா இசையமைத்து சித்தலக்ர் [ Chitalkar ] என்ற பெயரில் அவரே மீனாகபூருடன் பாடிய ” Aanna Mere Jaan Sunday Ke Sunday ” .என்ற நகைசுவை பாடலில் மேலைத்தேய இசையையும் ,வடஇந்திய நாட்டுப்புற இசையையும் இணைத்திருப்பார்.

இதே உத்தியை பதிபக்தி [1959 ] படத்தி மேலைத்தேய இசை வடிவமான் ROCK AND ROLL இசையை ,தமிழ் செவ்வியல் இசையுடன் இணைத்து மேலைத்தேய நடனமும் ,தமிழ் நடனமும் இணைந்த ஒரு நாட்டியப் பாடலை , நகைச்சுவை பாடலாக தந்தார்கள் மெல்லிசை மன்னர்கள்.அந்த பாடலை நடிகர் ச்நதிரபாபுவும், V.N.சுந்தரமும் பாடினார்கள்.அந்த பாடலின் பெயர் : ராக் .. ராக் .. ராக் … ராக் அண்ட் ரோல் .[ படம் : பதிபக்தி ]

பாடகர் பி.பி. ஸ்ரீநிவாஸ் சொல்வார் ” Westren Influence மெல்ல , மெல்ல வந்த போது K.V.மகாதேவன் சொல்வார் “கொஞ்சம் Western உடன் கலந்தால் அழகிருக்கு , அதில் தப்பில்லை, ..இசைக்கு எல்லை இல்லை ” என்று.

பதிபக்தி [1959 ] விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையருக்கு ” ” என்ற வரிசையில் அமைந்த முதல் படமாகும்.அவர்களின் இசையார்வத்திற்கு நல்ல ஆரம்பமாகவும் அமைந்திருந்தது. சமூகக் கதைகள் சினிமாவில் அதிகம் வெளிவர ஆரம்பித்த கால கட்டமாகவும் இருந்தது.சமூகக் கதைகளை மைய்யமாக கொண்ட கதைகளின் வருகையும் ,அதற்கேற்ற புதிய மெல்லிசை பாங்கான இசையின் தேவையும் ஒன்றுக்கொன்று இசைவாக்கம் பெற உதவியது எனலாம்.திரைக் கதையின் சூழ்நிலைக்கு, கதா பாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடிய இசையை மரபிலிருந்தும் , வெளியிலிருந்தும் இணைத்தும் அர்ப்புதங்களை செய்தார்கள். மேலைத்தேய இசை , ஹிந்தித் திரைப்பட இசை ,தமிழ் செவ்வியல் இசை ,ஹிந்துஸ்தானி இசை [ கவாலி , ஹசல் ] போன்ற பல் வகை இசையிலிருந்தும் இனிமையான பாடல்களைத் தரமுடியும் என இந்த இரட்டையர்கள் நிரூபித்தார்கள். குறிப்பாக 1960 களை இவர்களது பொற்காலம் அல்லது தமிழ் திரையிசையின் பொற்காலம் என வரையறுக்கலாம். பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களாக இருந்தாலும் அதில் இனிமையும் , வார்த்தை எளிமையும் இழைந்திருக்கும். பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்களாக இருந்தாலும் அதில் இனிமையும் , வார்த்தை எளிமையும் இழைந்திருக்கும்.இன்றைய இளைஞர்களும் அவர்களது பாடலகளைப் பாட விளைவது அந்தப் பாடலகளில் இருக்கும் இலகுவான தன்மையினாலேயே! பலவகை இசையிலிருந்து அவர்கள் பெற்ற உந்துதல் [ INSPIRATION ],அவற்றை அவர்கள் நமது இந்திய சூழ்நிலைக்கு பொருத்துமான வகையில் இசைவாக்கியது பெரு வெற்றியளித்தது எனலாம்.படத்திற்குப் படம் இனிமையான பாடல்களைத் தந்தார்கள்.

பாடல் மெட்டமைப்பில் மட்டுமல்ல , இடையே வரும் இசையிலும் [ interlute ] சீரிய பார்வை கொண்டவர்களாக விளங்கினார்கள்.எளிமையான மெட்டமைப்பை கொண்ட பாடலாக இருந்தாலும் , புதுமையான , உயர்ந்த தர வாத்திய இணைப்பின் சேர்க்கையோடு பாடலின் இனிமையும் இணையும் போது புது பரிமாணங்களை எட்டி, நம்மை புது நிலைக்கு கொண்டு செல்லும் வல்லமைமிக்கதாக பாடல்கள் அமைந்துவிடுகின்றன. தமது சக்திக்கு எட்டிய உலக இசையின் சாத்தியங்களை எல்லாம் நமக்கும் காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்.

குறிப்பாக 1950 களின் பின்னால் மேற்கில் வளரச்சியடைந்த பொப் இசை [ pop music ] என்னும் சொல்லாடல் ராக் அண்ட் ரோல் [ Rock and Roll ] இசையின் மூலம் கிடைக்கிறது.பல இசை வடிவங்களை [ Ballad , Gospel , Soul Music , Jazz , Country Music , Rythm of dance music ,Classical Music போன்ற இசை வடிவங்கள் ஒன்றிணைந்த இசை ] உள்வாங்கிய இசையாகவும் ,மின் கருவிகளை இணைத்த புது இசையாகவும் மலர்ந்தது.பொழுது போக்கு இசையில் புது பரிமாணங்களை எட்டிய இந்த வகை இசை மேற்கில் பரந்துபட்ட மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வளர்ந்தது.இந்த போக்குகளுக்கு முன்பே வளர்ந்திருந்த குறிப்பாக 1930,1940 களில் வளர்ச்சியடைந்த Nat King Cole போன்ற ஜாஸ் பியானோ இசைக்கலைஞர்களின் இசையில் மிக்க ஈடுபாடு காட்டியவர்கள் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தி. Nat King Cole என்ற அமெரிக்க கறுப்பினஇசைக்கலைஞர். மிகப்பெரிய இசைக்குழுவை நடாத்தியதுடன் , முதன் முதலில் டி ,வீ நிகழ்சிகளிலும் இசை நிகழ்சிகளை நடத்திய முன்னோடியாவார். இவருடைய இசையின் பாதிப்பு [ inspiration ] மெல்லிசைமன்னர்களின் இசையில் அதிகம் உண்டு.

இவருடைய[ Nat King Cole ] வாத்திய குழுவில் பயன்படுத்தப்பட்ட BONGOS என்ற தாள வாத்தியம் தாள லயத்தில் புது மெருகூட்டியது. ஆபிரிக்காவின் அடிமை மக்களால் கொண்டு வரப்பட்ட இந்த வாத்தியம் , 1800 களில் கியூபாவில் நிலை பெற்று , பின் ஆபிரிக்க ,ஸ்பானிய கலப்பு கலாச்சாரத்தின் அடையாளமாக மாறியது . Changui & Sone என்கிற ஸ்டைலில் வாசிக்கப்பட்டு புகழ் பெறுகிறது.சல்சா [ Salsa ] இசையின் வேர்கள இந்த இசையில் தான் உள்ளது என்பர்.1940 , 1950 களில் BONGOS முன்னணி வாத்தியமாக உயரவும் , வியாபாரா ரீதியில் புகழ் பெற உழைத்த கலைஞர் ” MR. BONGO ” என்று போற்றப்பட்ட Jack Contanzo என்பவராவார். இவர் Nat King Cole இன் வாத்தியக் குழுவில் மிக முக்கிய பங்காற்றினார்.இந்த இசை குழுவின் அமைப்பு முறையை தான் மெல்லிசைமன்ன்ர்கள் முன்மாதிரியாக [ INSPIRATION ] கொண்டு தமிழ் சினிமா இசையில் காட்சிகளுக்குப் பொருத்தமாக சில பாடலகளை தந்தார்கள்.சர்வர் சுந்தரம் படத்தில் அவளுக்கென்ன அழகிய முகம் என்ற பாடல் காட்சியில் தோன்றும் விஸ்வநாதனின் இசைக்குழுவும் Nat King Cole இன் வாத்தியக் குழுவினரை போலவே தோற்றமளிக்கும்.
BONGOS என்ற தாள வாத்தியக் கருவியை மிகச் சிறப்பாக மெல்லிசை மன்னர்கள் கையாண்டார்கள்.அதன் இனிய நாதம் தமிழ் திரை இசைக்கு புத்துணர்வுமிக்க புதிய சப்தத்தை வழங்கியது.இன்று ஏ.ஆர் ரகுமான் போல தாளத்தை சகட்டுமேனிக்கு போட்டு ” முழக்காமல் ” மிகவும் கச்சிதமாக திரையில் காட்சிகளுக்கு பொருத்தமாக பயன்படுத்தினார்கள்.

அதுமட்டுமல்ல கியுபாவில் தோன்றி பின் மெக்சிக்கோவில் நிலை பெற்ற நடன முறையில் பயன் பட்ட DENZONES என்ற இசை , ENRIQUE JORRIN என்பவரால உருவாக்கப்பட்டது.ஆங்கில இசையின் கலப்பும் ,கியூபா மற்றும் ஆபிரிக்க தாளத்தின் கலவைகளாக உருவான இந்த இசை பிரஞ்சு காலனித்துவ வாதிகளால் பரப்பபட்டது.இந்த இனிய கலவையின் விளைவாகத் தோன்றியதே CHA CHA CHA என்ற நடன இசை.இந்த இசை 1940 , 1950 களில் மிகவும் புகழ் பெற்றிருந்தது.இந்த CHA CHA CHA வை பயன்படுத்தி 1960 களில் வெளிவந்த பல படங்களில் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி பல வெற்றிப்பாடலகளைத் தந்தார்கள். அவற்றில் சில

1. அன்று வந்ததும் இதே நிலா [படம் : பெரிய இடத்து பெண் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P சுசீலா
இந்த பாடலில் நேரடியாக ”
CHA CHA ” என்ற சொல் பிரயோகம் நேரடியாக வரும்.

2. இது வேறுலகம் தனி உலகம் [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி
இந்த பாடலிலும் நேரடியாக ” CHA CHA ” என்ற சொல் பிரயோகம் நேரடியாக வரும்.

3. அவளுக்கென்ன அழகிய முகம் [படம் : சர்வர் சுந்தரம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி …..
இந்தப் பாடலில் நேரடியாக
CHA CHA ” வராது ஆனால் தொனிப்புகளில் மிக துல்லியமாகத் தெரியும்.

அது மட்டுமல்ல ஸ்பானிய , ஆபிரிக்க கலப்பு இசையான இன்னொரு வடிவம் RAMBA MUSIC. இது லத்தீன் அமெரிக்க நடனத்தில் பயன்படும் மென்மையான தாள அசைவுகளை கொண்ட இசையாகும். இதை நல்ல உந்துதலாகக் கொண்டு [ INSPIRATION ] கொண்டும் சில பாடல்களைத் தந்தார்கள்.

போனால் போகட்டும் போடா ” [படம் : பாலும் பழமும் ] பாடியவர்: T.M.:சௌந்தரராஜன் ,,, என்ற பாடலை மிக அழகாக RAMBA MUSIC பாணியில் இசையமைத்திருப்பாரகள் மெல்லிசை மன்னர்கள்.

மேல் சொன்ன BONGOS என்ற தாள வாத்தியக் கருவி , CHA CHA CHA , RAMBA MUSIC போன்ற இசைகளின் கலவைகளான லத்தீன் அமெரிக்க இசையை கொண்டு இனிய பல பாடல்களை தந்தார்கள் மெல்லிசை மன்னர்கள். சில உதாரணங்கள் …இந்தப்பாடல்களில் BONGOS வாத்தியக்கருவி முதுகெலும்பாக இருக்கும். BONGOS வாத்தியம் பயன்பட்ட சில பாடல்கள் இதோ :

1. அவளுக்கென்ன அழகிய முகம் [படம் : சர்வர் சுந்தரம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி

2. இது வேறுலகம் தனி உலகம் [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி

3. படைத்தானே படைத்தானே [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன்

4. போனால் போகட்டும் போடா [படம் : பாலும் பழமும் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன்

5. பாலும் பழமும் கைகளில் ஏந்தி [படம் : பாலும் பழமும் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன்

6. பெண் போனால் இந்த பெண் போனால் [படம் : எங்க வீட்டுப் பிள்ளை ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + .P.சுசீலா

7. ஒரு பெண்ணைப் பார்த்து நிலவை பார்த்தேன் [படம் : தெய்வத்தாய் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன்

8. பருவம் போன பாதையில் [படம் : தெய்வத்தாய் ] பாடியவர்: P.சுசீலா

9. இது வேறுலகம் தனி உலகம் [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + L.R ஈஸ்வரி

10.பருவம் எனது பாடல் [படம் : ஆயிரத்தில் ஒருவன் ]பாடியவர்: P.சுசீலா

11. குமரிப் பெண்ணின் உள்ளத்திலே [படம் : எங்க வீட்டுப் பிள்ளை ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + .P.சுசீலா

12 .வந்த நாள் முதல் இந்த நாள் வரை [படம் : பாவ மன்னிப்பு ] பாடியவர்: T.M.:சௌந்தரராஜன்

இந்த ” வந்த நாள் முதல் இந்த நாள் வரை “ பாடலின் அமைப்பு முறயில் மிகவும் புதுமையைக் கையாண்டார்கள மெல்லிசை மன்னர்கள்.பாடலின் ஆரம்பத்தில் விசில் சத்தத்தைத் தொடர்ந்து ஹம்மிங் பின்தொடர்ந்து முடிய, பாடல் ஆரம்பிக்கும்.தொடர்ந்து விசில் சத்தத்தை பின்ணணி இசை வாத்தியங்களில் ஒன்று போல பயன்படுத்தியிருப்பார்கள்.இதில் புதுமையின் உச்சம் என்னவென்றால் இந்தப் பாடல் அமைக்கப்பட்ட ராகம். தமிழ் செவ்வியலிசையில் மிக முக்கிய ராகங்களில் ஒன்றான மோகனம்.

மோகன ராகத்தில் இப்படியும் இசையமைக்க முடியுமா ? என்று எண்ண வைக்கும் வகையில் , முற்றிலும் புதிய , யாரும் எதிர் பார்க்காத கோணத்தில் அமைக்கப்பட்ட பாடல் இதுவாகும். ஹம்மிங் , விசில் போன்றவற்றோடு கமகங்கள் குறைக்கப்பட்ட மோகன ராகத்தின் வலிமையும் , கண்ணதாசனின் கவித்துவம் அழுத்தாத எளிமையான வரிகளாலும் அமைக்கப்பட்ட இந்தப் பாடல் இன்னும் ஒரு நூற்றாண்டைக் கடந்து செல்லும் வல்லமை கொண்ட புதுமையான பாடலாகும் , என்பது ஒவ்வொரு முறையும் கேட்கும் போதுஆனந்திக்கும் எனது அனுபவமாகும்.ஆச்சர்யமான முறையில் மோகன ராகத்தைக் கையாண்ட அவர்களது மேதமையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மெல்லிசை மன்னர்கள் பற்றி பின்னணிப்பாடகர் பி .பி. ஸ்ரீனிவாஸ் சொல்வார்.. ” இவர்களது வருகையால் இசை இனிய திசைக்குச் சென்றது.” என்று.

உலகெங்கும் உள்ள நல்ல இசையை தமிழ் சினிமாவில் கொண்டு வந்த பெருமை அவர்களைச் சாரும் என்பதை நாம் அவர்களது பாடல்களை இன்று கேட்கும் போதும் உணரக்கூடியதாக இருக்கின்றது.இன்று சர்வ சாதாரணமாகப் பயன் படுத்தப்படும் வெளி நாட்டு வாத்தியங்களை எல்லாம் இவர்களே அறிமுகம் செய்தார்கள்.ஒரு மெலோடி [Melody ] யுகத்தை உருவாக்கி அதில் வாத்திய இனிமையையும் ,நவீனத்தையும் , காலத்திற்கு ஏற்ப புதுமையையும் படைத்தார்கள்.பாடல் மட்டுமல்ல பாடலுக்கு வரும் முகப்பு இசை [Opening Music] இடையில் வரும் வாத்திய இசை [Interlute] போன்றவற்றைப் புதுமையாக அமைத்து பாடலின் எல்லா பக்கத்தையும் இனிமையாக்கினார்கள்.ஹம்மிங் , கோரஸ் , விசில் , பறவை இனங்களின் ஒலிகள் , இரவின் ஒலி போன்ற சப்தங்களை எல்லாம் மிக நுட்பமாக பயன்படுத்தினார்கள்.மனதை கரைய வைத்து நினைவில் இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் இந்த இரட்டையர்கள்.காட்சிக்கு பொருத்தமான இசையை பயன்படுத்தி வந்த இரட்டையர்கள் மரபை விட்டு வில்கியவர்களல்ல என்பதும் கவனத்திற்குரியது.வாத்திய சேர்க்கைகளில் புதுமை இருந்தாலும் ராக அடிப்படைகளில் நின்று மனதை வசியம் செய்கின்ற பல பாடல்களை தந்தார்கள்.ராகங்களை “மறைத்து வைக்கும் “அதே நேரத்தில் அதன் குணாம்சங்களை பாத்திரங்களின் உணர்வு நிலைக்கு ஏற்ப கொடுக்கும் வல்லமையைப் பெற்றிருந்தார்கள்.சில பாடல்களில் ராகங்கள் இன்னதென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு விதமான மயக்க நிலலையில் , ரகசியமாக ஒளித்து வைக்கும் கலையை கை வரப் பெற்றார்கள் எனலாம்.கனமான ராகங்களில் மெல்லிசை தன்மை ஓங்கி நிற்கும்.பாடல்களைத் தந்து சாதனை படைத்தார்கள். சில சாதனைப் பாடல்கள்…

1. கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே [படம் : கர்ணன் ] பாடியவர்: P.சுசீலா ராகம்: சுத்த தன்யாசி

2. நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே [படம் : பார் மகளே பார் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம்: தர்மவதி
3. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் [படம் :பாலும் பழமும் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம் : சிவரஞ்சனி
4. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் [படம் : பாக்கியலட்சுமி ] பாடியவர் : P.சுசீலாராகம் : சந்திர கெளன்ஸ்
5. மலர்ந்தும் மலராத பாதி மலர் போல [படம் : பாசமலர் ] பாடியவர்கள் : T.M.:சௌந்தரராஜன் + P.சுசீலா ராகம் : ஆபேரி
6. தங்கரதம் வந்தது [படம் : கலைக்கோயில் ] பாடியவர்:பாலமுரளி கிருஷ்ணா + P.சுசீலா ராகம் : ஆபோகி
7. மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா [படம் : கற்பகம் ] பாடியவர்: P.சுசீலா ராகம் : கீரவாணி
8. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் [படம் : போலீஸ்காரன் மகள் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் ராகம் : ஆபேரி

9. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா [படம் : நிச்சயதாம்பூலம் ] பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் ராகம் : கல்யாணி

10.ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை [படம் : பணத்தோட்டம் ]பாடியவர்: P.சுசீலா ராகம் : காபி

11. பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா [படம் : பணத்தோட்டம் ]பாடியவர்கள் T.M.:சௌந்தரராஜன் + .P.சுசீலா ராகம் : சாருகேசி

12 .பொன் என்பேன் சிறு பூ என்பேன் [படம் : போலீஸ்காரன் மகள் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + எஸ்.ஜானகி ராகம் : சாருகேசி

13 .தமிழுக்கும் அமுதென்று பேர் [படம் : பஞ்சவர்ணக்கிளி ] பாடியவர்: P.சுசீலா ராகம் : திலங்

14 .நான் உன்னை சேர்ந்த செல்வம் [படம் : கலைக்கோயில் ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா ராகம் : மோகனக்கல்யாணி

15 .நெஞ்சம் மறப்பதில்லை [படம் : நெஞ்சம் மறப்பதில்லை ] பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா ராகம் : மிஸ்ர மாண்டு

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இவ்விதம் ஏராளமான பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.


திரையின் கதையமைப்பி
ற்க்கு ஏற்ப எங்கெல்லாம் நல்லிசை இருக்கிறதோ அவற்றை எல்லாம் , நமது சூழலுக்கு பொருத்தமாக , அவற்றை அருவருப்பாக அல்லாமல் கண்ணியமான பாடல்களாகத் தந்தார்கள்.

தங்களது இசையமைப்பு பற்றி மெல்லிசை மன்னர் பின்வருமாறு கூறுகிறார்.

” நாவல்டி.. புதுமை ..அப்படி ஏதாவது செய்யணுமின்னு வெறி இருந்தது.ஆனால், பழமை மாறாத புதுமை பன்னனுமின்னு நினைச்சோம். எந்தப் பாடலை எடுத்தாலும் ஒரு ராகமிருக்கும்.அதை கொஞ்சம் மாடிபை [ MODIFY ] பண்ணி … கொஞ்சம் வெஸ்டர்ன்நைசா { westernise ] பண்ணி .. இப்படி ஒரு விதமா சேஞ் பண்ணினோம்.முழுக்க முழுக்க கிளாசிக்கலா இருந்ததை மாற்றி லைட் கிளாசிக்கலா பண்ணி ஜனரஞ்சகமா கொடுத்தோம் “

அவர்களின் இசையை பற்றி அவர்களது ரசிகன் இளையராஜா சொல்கிறார்.

” எனது இளவயது போனதே தெரியாமல் ,அவருடைய இசையிலேயே நான் கழித்தேன்.எத்தனையோ பாடல்கள் வார்த்தையால் வர்ணிக்க முடியாத அளவுக்கு உயிரோட்டமாகக் கொடுத்திருக்கிறார். அதில்

மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் என்ற பாடல் மிகவும் பிடிக்கும்.ஒரு பாடல் என்பது படத்துக்கு மட்டும் உதவினால் பிரயோசனமில்லை , படத்தைத் தாண்டி , பட சூழ் நிலையை தாண்டி ,படத்தில் வரும்கதாபாத்திர மன நிலையத் தாண்டி பாடலைக் கேட்ககூடிய ரசிகர்களை போய் தாக்க வேண்டும். பாலய விவாகம் செய்து கணவனை இழந்த பெண் பாடும் பாடல்.

அதில் எனக்குப் பிடித்த வரிகள் :

இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
நினைவும் அறியாமல் முடிவும் தெரியாமல்
மயங்குது எதிர் காலம் ” ………என்னுடைய எதிர்காலம் குறித்து யோசிக்க வைத்த அந்தப் பாடலைகண்ணாதாசன் அர்ப்புதமாக் எழுதினார்.விஸ்வநாதன் ,கண்ணதாசன் ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாது.இசையை விட்டு வார்த்தையையும் ,
வார்த்தையை விட்டு இசையையும் பிரிக்க முடியாது.அது தான் இசை. பாட்டு என்றால் பாடுகிற படி இருக்க வேண்டும். “

பின்னாளில் இந்ந்தப் பாடலை உந்துதலாகக் [Inspiration] கொண்டு இளையராஜா ஒரு சிறந்தபாடலை அமைத்தார்.மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற அந்தப்பாடல் அமைந்த சந்திரகௌன்ஸ் என்ற ராகத்திலேயே , இளம் விதவை பாடுவதாகத்தான் அமைக்கப்பட்டது அந்தப் பாடல் வைதேகி காத்திருந்தாள் [1985 ]படத்தில் வரும் ”

” அழகு மலராட அபிநயங்கள் சூட சிலம்பொலியும் புலம்புவது கேள் ”

என்ற பாடலாகும்.ஒரே ராகமாக இருப்பினும் இரண்டு அற்ப்புதமான இசைப் படைப்புக்களாகும். இரண்டு பாடலும் ஒரே விதமான் உணர்வு நிலையை வெளிப்படுத்தும் பாடலாக இருந்தாலும் ,அந்த ராகத்தின் ரசம் அந்த உணர்வு நிலையை தொட்ட போதும் ,ஒரு பாட்டைப்போல அடுத்த பாடல் இல்லை.
இசைஞானி இளையராஜா சொல்வார் ” ஹிந்தி திரை இசையமப்பாளர்களான மதன் மோகனும் , ரோஷனும் தங்கள் இசை மூலம் பேசிக்கொள்வார்கள்; ஒருவர் தன பாடல் மூலம் கேள்வி கேட்பார் , மற்றவர் அதற்குத் தன் பாடல் மூலம் பதில் சொல்வார் “ என்று.
அது போன்றே
இசைஞானி இளையராஜா , இசை பொது வெளியில் பல இசைமேதைகளால் விடப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லியிருப்பதை நாம் அவருடைய பல பாடல்களிலிருந்து உதாரணங்களை சொல்ல முடியும்.அந்த வகையில் மெல்லிசை மாமன்னர்எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்ட கேள்விக்கான பதிலே “அழகு மலர் ஆட ..” என்ற பாடாகும்.அகத்தூண்டுதல் [Inspiration] என்பதற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.

அதே போலவே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற

” காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்க வா ” என்ற பாடலுக்கான Inspiration இசை மேதை நௌசாத் இசையமைத்த அக்பர் படத்தில் வரும் ” கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே ” என்ற பாடலிலிருந்து பெற்றது என்று கூறியிருப்பது ஆச்சரியமிக்கதாகும்.

பலவிதமான இசைகளை கேட்டு அவற்றில் லயித்து [Inspire] தாம் பெற்ற இன்பத்தை நமக்கும் தந்த மெல்லிசைம்ன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இந்தஅகத்தூண்டுதல் [Inspiration] பற்றி என்ன சொல்கிறார் ?

” இந்த இசையமைப்பு ,பாட்டெழுதுவது என்கிற தொழிலிலே நமக்குப் பிடிச்ச விசயங்கள் எங்கோ நமக்கு அறியாமல் ,ஒளிஞ்சு நிற்கும். வேறுயாராவது கம்போசர்களைக் கேட்டாக் கூட அந்தச் சாயல் வந்திடும் , இல்லை அந்தச் சாயல் அறியாமல் வந்திடும். அதனாலே அதனைத் திருடினேன் என்று சொல்லக் கூடாது.பாக்கியுள்ளவர்கள் திருடினேன் என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு ஒழிச்சு வைக்க வேணும்.அதனை ஓபன் ஆகத் திருடினேன் என்றளவுக்கு வைச்சுக்கக் கூடாது. நானும் காப்பி அடிச்சிருக்கேன் .என்னைப் பார்த்து சிலர் காப்பி அடிக்கிறதா சொல்லிக்கிறாங்க! இருக்கலாம் , But அதை ஒழிச்சு வைக்கணும்.அது மாதிரி…
கல்லைத்தான் காய்ச்சித்தான்
மண்ணைத்தான் குடிக்கத்தான்
… என பெரிய Poet அந்தக் காலத்தில் எழுதின ஒரு வரியை வைத்து ” கவிஞர் ” விளையாடினார். “அத்தான் ..என்னத்தான் ” இப்படி எல்லாம் தான் ,தான் என்றே வரும்.இந்த மாதிரி ஒரு பாட்டை எழுதினார்.பாவமன்னிப்பு படத்தில் நல்ல சிட்டுவேசன் மாட்டியது. அப்ப என்கிட்டே சொன்னாரு ..” டேய் தம்பி இப்படி ஒரு பாட்டு வைச்சிருக்கேன்டா ,ரொம்ப ஆசையாய் எழுதி வைச்சிருக்கேன் , இதை யார்யாரோ மியூசிக் டைரைக்டர்களிட்டே கொடுத்துப் பார்த்தேன்.இதுக்கு மெட்டே வராதுன்னுட்டாங்க.. நீ போட்டேன்னா உனக்கும் நல்லது ,எனக்கும் நல்லது என்று கெஞ்சினார்.அதில் என்னென்னா .. கவிதை அவ்வளவு ரசிப்புத்தன்மையுள்ளது.ஒரு ரசிகன் தான் கலைஞாக முடியும்.நான் ஏன் சொல்கிறேன் என்றால் அவர் ரசித்ததை நாம் எல்லோரும் ரசிப்போம் என்கிற நம்பிக்கை அவருக்கு ! என்கிட்டே கொடுத்தாரு , ஏன் வரமாட்டேன் என்று சொன்னாங்க ..ரை பண்ணிப் பார்ப்போம் என்று ஆரம்பித்தேன் …
“அத்தான்..
என் …..அத்தான்
அவர் என்னைத்தான்
எப்படி சொல்வேனடி ” ….
மத்தியிலே நல்ல காப் [ இடைவெளி ] இருக்கும். AVM செட்டியாரு சொன்னார் ” என்ன பாட்டிது ? மத்தியிலே இவ்வளவு காப் [ gap]இருக்கே , வெத்திலை ,பாக்கு மடிச்சு போடுற நேரம் இருக்கு , இப்பிடி பண்ணிட்டாங்களே விஸ்வநாதனும் ,கண்ணதாசனும்!!
அந்த காப் [ இடைவெளி ]எப்படியாச்சின்னா , வெட்கத்தை குறிப்பிட்டிச்சு.அந்த காப் சொல்லமுடியாத விரகதாபத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திரிச்சு !அதற்குத் தகுந்த மாதிரி பி.சுசீலா பாடும் பொது எல்லோரும் தம்மை மறந்தாங்க.லதா மங்கேஸ்கர் பாராட்டிய பாடல் அது.அந்த வார்த்தை தான் என்னை இன்ஸ்பையர் [ INSPIRE ] ஆக்கியது. ” —எம்.எஸ்.விஸ்வநாதன்.

மனதோடு மனோ இசை நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதன் சொல்கிறார். “… இன்னுமொரு கஷ்டமான சூழ்நிலை ,சிவாஜி ஹீரோ , கஷ்டப்பட்டு ,நொந்து பொய் ,அவஸ்தைப்பட்டு பாடுகிற பாட்டு.மேட்டுப்போட்டோம் ,பாட்டு எழுதினோம்.கம்போஸ் பண்ணினோம் ..சிவாஜி வந்தாரு. நீங்க நடிச்சாவது காட்டுங்க ,ஏதாவது inspiration வருதான்னு பார்ப்போம் என்றோம்.உடனே சிவாஜி நடித்துக் காட்டும் போது ” எங்கே நிம்மதி .. எங்கே நிம்மதி ” என்று நடித்து காட்டுகிறார்.அந்த வார்த்தையை வைத்து பல்லவிஎழுதினார்.ஒரு கவிஞரும் ,இசையமைப்பாளரும் கணவன் மனைவி போல பழகணும்.அப்படி நட்பாக இருந்தால் நல்ல பிள்ளை [ பாடல் ] பிறக்கும்.


ஒரு விதமான ஜனரஞ்சக இசையை [வெகுஜன மக்களிசை ] உருவாக்கி வெற்றி கொடி நாட்டிய அவர்கள், பாமரர்களை ரசிக்க வைத்தது மட்டுமல்ல இசை அறிந்தவர்களும் பாராட்டும் வண்ணம் சாதனை படைத்தார்கள்.

மெல்லிசைமன்னர்கள் உந்துதல் [ INSPIRE ] பெற்ற சில பாடல்களை கீழே தருகிறேன்.

ஹிந்தி திரைப்படப்பாடல்களை [ Inspiration ]ஆகக் கொண்டு அமைக்கப்பட்ட பாடல்கள் பார்ப்போம்

01 . பாலும் பழமும் படத்தில் இடம் பெற்ற
” காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்க வா ” என்ற பாடலுக்கான Inspiration இசை மேதை நௌசாத் இசையமைத்த அக்பர் படத்தில் வரும் ” கனவு கண்ட காதல் கதை கண்ணீர் ஆச்சே ” என்ற பாடலிலிருந்து பெற்றது என்று விஸ்வநாதன்
கூறியது ஆச்சரியமிக்கதாகும்.

04 . Chale Aaj Tum Jahan Se [ படம்: Udan Khatola ] இசை : நௌசாத்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் ” [ படம்: பாவமன்னிப்பு ] – T.M.சௌந்தரராஜன்

05 . Dukh Bhare din beete re [ படம்: Mother India ] இசை : நௌசாத்

எங்களுக்கும் காலம் வரும் ” [ படம்: பாசமலர் ] T.M.சௌந்தரராஜன் + எல்.ஆர்.ஈஸ்வரி

06 . O..gadiWale [ படம்: Mother India ] இசை : நௌசாத்

மஞ்சள் முகம் நிறம் மாறி ” [ படம்: கர்ணன் ] P.சுசீலா + குழுவினர்

07 . அழகே வா அறிவே வா ” [ படம்: ஆலயமணி ] 1963 – P.சுசீலா
Ruk Ja Rat Theher Ja Re [ படம்: Dil ke Mandir ] 1963 இசை : மதன் மோகன் …இந்தப் பாடலில் அழகே வா பாடலின் அழகுகள் எல்லாம் காண்பிக்கப்படும்.

 

08 . Tum Muje Yun Bhula Na ” [ படம்: Pagla Kahin ka ] 1970 …
ஒரே பாடல் உன்னை அழைக்கும் படம்: எங்கிருந்தோ வந்தான் – T.M.சௌந்தரராஜன் ** இசை: எம்.எஸ். விஸ்வநாதன். இந்தப்பாடல் நேரடியாகத் துருத்திக்கொண்டு தெரியாது.அந்தப் ப்பாடலின் கடுமையான வாசம் இதில் வீசும்.இந்தப் பாடலில் மேலே உள்ள பாடலின் அழகுகள் எல்லாம் காண்பிக்கப்படும்.

09 . DIl ka Haal Sune Dilwala – -Shri420 – Mnnaadey + Lata music: Shanker Jaikishan

* சின்ன சின்ன இழை பின்னி பின்னி வரபடம்: புதையல் – P.சுசீலா இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. ** இந்தப் பாடலின் thaal ஒரே மாதிரி amஇருக்கும்.பாடலில் நிறைய சாயல்கள் தெரியும்.Strong Inspiration.

10 . Mera Pyar Bhi Tu Hai ” [ படம்: ] இசை :

தங்கத்தில் முகம் எடுத்து [ படம்: மீனவ நண்பன் ]

11 . SAWAN KE BADALO UNSE JA KAHO – RATTAN-1944 – ZOHRA BAI & KARAN DIWAN music::NAUSHAD

* உன்னைத்தான் நானறிவேன்படம்: வாழ்க்கைப்படகு – P.சுசீலா இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி. ** இந்த பாடலில் வரும் ” என் உள்ளம் என்னும் மாளிகையில உன்னையன்றி யார் வருவார் ” என்ற வரிகள் மட்டும்தான் எடுத்தாடபட்டிருக்கும்.வேறு எந்த இடங்களிலும் சம்பந்தம் கிடையாது.

12 . Main Aashinq Hoon Bacharonka – Film : Ashiq [1962] – Singer: Mugesh இந்த பாடலில் 01 :51 நிமிசத்தில் கீழே உள்ள பாடலின் சாயல் தெரயும்.

புன்னகையில் கோடி – படம் இதயக்கனி – T.M.சௌந்தரராஜன் மேலே உள்ள பாடலின் செயல் நன்றாக தெரியும்.

13 . Jag Dard E Ishq Jag – Anarkali – Lata Mangeshkar + Hemant Kumar Music: C .Ramachandra இசையமைத்த இந்தப் பாடல் , கீழ் கண்ட பாடல்களுக்கு முன்னுதாரணமாக அமைந்த
பாடலாகும்.
* மயக்கும் மலை பொழுதே நீ போ போபடம்: குலேபகாவலி – A.M.ராஜா + ஜிக்கி ** என்ற பாடலும்
* கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்படம்: மீண்டசொர்க்கம் – A.M.ராஜா + P.சுசீலா
* ஆசை பொங்கும் அழகு ரூபம் – – A.M.ராஜா + ஜிக்கி
* தூது செல்லாயோ இளம் ஜோடியாய் உலாவும் நிலவே
படம்: ராஜ சேவை – கண்டசாலா + ஜிக்கி ** போன்ற பல பாடல்களுக்கு மிகவும் முன்னுதாரணமிக்க
பாடலாகும்.மேற் சொன்ன அந்த பாடலின் கடுமையான பாதிப்புக்குள்ளான [ Inspiration ]பாடல்கள் இவை.

14 . Dil Dhal Jaye hai raat – singer : rafi music: S.D.Burman

மௌனமே பார்வையால் ஒரு – கொடி மலர் – பி.பி. ஸ்ரீநிவாஸ்

15 . Aat Socha To – film: Hindustan Ki Zakham – Music: Madan Mohan என்ற இந்த பாடலை அடியொற்றி கீழ் கண்ட பாடலை விஸ்வநாதனும் ,இளையராஜாவும் இணைந்து இசையமைத்தார்கள்.

தேடும் கண் பார்வை – மெல்லத்திறந்தது கதவு – எஸ்.பி.பாலசுரமணியம் + எஸ் ஜானகி

16 . Pekas Pekram Kijike – Film : mugal Eazam – lata Music : Nausad இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.

என் அன்னை செய்த பாவம் – சுமைதாங்கி – பி.பி. ஸ்ரீநிவாஸ்

17 . Tu Mera Chand mein tere chandni – Film : Dillagi – Music : Nausad என்ற பாடலில் வரும் ஒரு சிறிய புல்லாங்குழல் இசையை ஆதாரமாகக் கொண்டு

பூமாலையில் ஓர் மல்லிகை – ஊட்டி வரை உறவு – T.M.சௌந்தரராஜன் + P.சுசீலா என்ற பாடலை மெல்லிசைமன்னர் மிக அற்ப்புதமாக ,அகத்தூண்டுதல் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைத்திருப்பார். இந்த விஷயத்தை  இசை மேதை நௌசாத் திடம் மெல்லிசைமன்னர் கூறிய போது அவர் ஆச்சரியத்துடன் அப்படியா என்று வியந்ததுடன் , இரு பாடல்களும் வெவ்வேறானவை என்றாராம்.
18 . தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் – படம் : பெற்ற மகனை விற்ற அன்னை பாடியர்கள் : A.M.ராஜா + P.சுசீலா இந்தப் பாடல் கீழ் வருகின்ற இசைமேதை நௌசாத் இசையமைத்த பாடலின் அகத்தூண்டுதலாகும்.
song :tere sadke balam -FIlm :Amar singer : lata

மேற்கத்தேய இசையை [ Inspiration ]ஆகக் கொண்டு அமைக்கப்பட்ட பாடல்கள் பார்ப்போம்.
01 . Rhythm of the Rain ” The Cascades- ( Gomme ) 1963

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே [ படம்: எங்கமாமா ] T.M.சௌந்தரராஜன்

02 . Rock Around The clock ” bill Haley & The Comets 1956
விஸ்வநாதன் வேலை வேணும் [ படம்:காதலிக்க நேரமில்லை ]


03 . Lime Light Title Music ” [ படம்: Lime Light ] இசை : Charlie Chaplin

பந்தல் இருந்தால் கொடி படரும் [ படம்: பந்தபாசம் ] T.M.சௌந்தரராஜன் + எஸ் ஜானகி

04 . Stragers in the night Frank Sinatra
நல்லது கண்ணே கனவு கனிந்தது – ராமன் தேடிய சீதை – சௌந்தரராஜன் + சுசீலா

05 . Laura [ Hits of 1945 ] Woody Herman & HIs Orchestra இந்த பாடலில் வரும் ஹம்மிங் அப்படியே

படைத்தானே படைத்தானே ” என்ற பாடலில் [ படம்: நிச்சயதாம்பூலம் ] பயன்டுத்தியிருப்பார்கள்.

06 . Coolwater [ Hits of 1945 ] Vaughn Monroe & Sons of Poineer இந்த பாடலின் வாடை

யாருக்கு மாப்பிள்ளை யாரோ ” [ படம்: பார்த்தால் பசி தீரும் ] இந்தப் பாடலில் background இசையில் மெதுவாக வீசும்.

07 . Besame Mucho [ 1945 ] Jimmy Dorsey & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்

அனுபவம் புதுமை ” என்ற பாடலில் [ படம்: காதலிக்க நேரமில்லை ] என்ற பாடலில் வரும் அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே …என்ற வரிகளில் சுகமாக வந்து
போகும்.
08 . The Green Cockatoo [ 1946 ] Roberto Inglez & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்
தாபமும் வேகமும் தணித்திடும் பானமடா ” [ படம்: குலேபகாவலி ] இந்தப் பாடலில் அப்படியே வந்து போகும்.

09 . There ‘s No You[ 1945 ] Tommy Dorsey & HIs Orchestra இந்த பாடலின் சில பகுதிகள்
எங்கிருந்தோ ஆசைகள் எண்ணத்திலே ஓசைகள் ” [ படம்: சந்திரோதயம் ] என்ற பாடலில் வரும்.

 

09 . Across The Valley From the Alamo – [ 1947 ] The Mills Brothers இந்த பாடலின் மிகவும் பாதிப்பு கொஞ்சம் அதிகமான சாயல் , குறிப்பாக தாளமும் ,கோரசும்
வீடு நோக்கி ஒடுகின்ற நம்மையே ” [ படம்: பதிபக்தி ] என்ற பாடலில் வரும்
.
10 . Dance At the Gym – Mambo என்ற பாடலில் First Part [ படம்: West Side Story ] music: Leonard Bernstein இந்த பாடலின் மிகவும் பாதிப்பு கொஞ்சம் அதிகமான சாயல் இருக்கும்.
என்னைத் தெரியுமா ” [ படம்: குடியிருந்த கோயில் ] என்ற பாடலில் …ஆகா ரசிகன் …ஆகா ரசிகன் ..உங்கள் ரசிகன் என்ற வரிகளை பாடும் போது அந்தப் பாடலின் .

வேகம் அப்படியே வரும்

11 . Jezebel [ Million seller 1951 ] Frank Laine The Norman Luboff Choir இந்த பாடலை அடி ஒற்றி கீழே வரும் மூன்று பாடல்கள்

சம்போ சிவ சம்போ ” [ படம்: நினைத்தாலே இனிக்கும் ] இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை ” [ படம்: சிவந்த மண் ] இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்


12. Rock around the clock – Bill Haley
விஸ்வநாதன் வேலை வேண்டும் – காதலிக்க நேரமில்லை – P
.B.ஸ்ரீநிவாஸ்

13. Do You Wanna Dance – Bobby Freeman
மலர் என்ற முகம் – வெண்ணிற ஆடை – L.R.ஈஸ்வரி

14 . Standing on the corner – Four lads 1956
வீடு நோக்கு ஓடுகின்ற – பதி பக்தி – T.M.சௌந்தரராஜன்

15 . Good Golly Miss Golly – Little Richard 1956
என்ன வேகம் சொல்லு பாமா – குழந்தையும் தெய்வமும் – T.M.சௌந்தரராஜன்

16 . Estrella Morente – my songs and poems

பட்டத்து ராணி பார்க்கும் – சிவந்த மண் – L.R.ஈஸ்வரி

17 . javier solis [ ” payaso” ] இந்த பாடலில் கீழ் கண்ட பாடல்களின் சாயல்கள் தெரியும்.
தேவனே என்னை பாருங்கள் – ஞான ஒளி –
T.M.சௌந்தரராஜன்
அந்த நாள் ஞாபகம் – உயர்ந்த மனிதன் – T.M.சௌந்தரராஜன் இந்தபாடலில் வரும் சிரிப்பு பகுதி மேல் சொன்ன பாடலை ஒத்திருக்கும்.

18 . Teri Pyaari Pyaari surat இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.
கண் படுமே பிறர் கண் படுமே –
P.B.ஸ்ரீநிவாஸ்

19 . Damaso Perez Pradd – bailando maribo இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.

அவளுக்கென்ன அழகிய முகம் – சர்வர் சுந்தரம் – T.M.சௌந்தரராஜன் + L.R.ஈஸ்வரி

20 .
Jose Padilla இந்த பாடலில் கீழ் கண்ட பாடலின் சாயல் தெரியும்.
அதோ அந்த பறவை போல – ஆயிரத்தில் ஒருவன் –
T.M.சௌந்தரராஜன்

இன்னும் பல எடுத்துக்காட்டுக்களை சொல்லலாம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த சில அமானுஷ்யப் பாடல்கள்.இசையால் நம்மை புது உலகத்திற்கு கொண்டு செல்லுவது போன்ற உணர்வை தருகின்ற பாடல்கள்.வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வுகளை மனதில் கிளர்த்தக்கூடிய பாடல்கள்.

* அழகே வா அறிவே வா படம்: ஆண்டவன் கட்டளை – P.சுசீலா
* நெஞ்சம் மறப்பதில்லை படம்: நெஞ்சம் மறப்பதில்லை P.சுசீலா
* மன்னவனே அழலாமா படம்: கற்பகம் P.சுசீலா
* பூஜைக்கு வந்த மலரே வா
பாதகாணிக்கை ஸ்ரீனிவாஸ் + P.சுசீலா
* அம்மம்மா கேளடி தோழி படம்: கருப்புப்பணம் – ஈஸ்வரி
* பார்த்த ஞாபகம் இல்லையோ படம்: புதியபறவை P.சுசீலா
* கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா படம்: ஆலயமணி – T.M.சௌந்தரராஜன் ஈஸ்வரி
* நாம் ஒருவரை ஒருவர் குமரிக்கோட்டம் T.M.சௌந்தரராஜன் ஈஸ்வரி


1952 இல் இணைந்த மெல்லிசை மன்னர்கள் 1965 இல் பிரியும் வரை பல இனிமையான பாடல்களைத் தந்தார்கள்.பின்னர் தனித் தனியே சிறப்பாக இசையமைத்த போதும் முன்பிருந்த இருந்த இசையின் ஈர்ப்பு பின்னர் இருக்கவில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.அந்த இருவரின் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருந்தமையே மிகவும் நல்ல பாடல்கள் வரக் காரணமாயின எனலாம்.வேகமாக இசையமைக்கும் ஆற்றல பெற்ற எம்.எஸ்.விஸ்வநாதன் பின்னாளில் திரையிசையில் நிலை பெற்றார்.
அதன் காரணமாகவே முன்பு இரட்டையர்களாக இருந்து இசையமைத்த பாடல்களின் இனிமைக்கும் இவரையே தனி பொறுப்பாளர் என்று தவறுதலாக சொல்லப்படுவதுண்டு. விஸ்வநாதனின் சிற்ப்பான பாடல்களை பட்டியல் போடுபவர்கள் , அவர்கள் இரட்டையர்களாக இசையமைத்த பாடல்களை தான் பெரும்பாலும் சொல்வார்கள்.பதிலாக விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று தான் சொல்லப்படுவது நியாயம்.
மெல்லிசைமன்னர் எம்.எஸ். விஸ்வநாதனிடம் உள்ள சிறப்பு ,அவருடைய இசை ஆளுமை.அவர் தனது மெட்டுக்களை பாடகர்களுக்கு சொல்லி கொடுக்கும் போது ,அதை பாடகர்கள் உள்வாங்கிப் பாடும் போது அவருடைய பாதிப்பை பாடகர்களால் மறைக்க முடிவதில்லை.பாடகர்கள் பாடும் சில சமயங்களில் ” விஸ்வநாதன் குரலிலேயே ” பாடுவது போலவே அமைந்து விடுவதுண்டு. இந்த சிறப்பு வேறு இசையமைப்பாளர்களிடம் இல்லை என்று துணிந்து கூறலாம்.

பாடல்களை அமைப்பதிலும் ,அதிலுள்ள கமகங்களின் பிரயோகங்களையும் ,வாத்திய அமைப்பையும் வைத்து பல இசையமைப்பாளர்களின் பாடல்களை அடையாளம் கண்டு விடலாம். ஆனால் விஸ்வநாதன் போல ,தான் பாடுவது போலவே பாடகர்களைப் பாட வைக்கும் ஆற்றல் வேறு எந்த இசையமைப்பாளர்களிடமும் நான் காணவில்லை.தங்கள் குரலின் தனித்துவத்துடன் சிறப்பாகப் பாடல்களை பாடும் பாடகர்கள் கூட விஸ்வநாதன் போல பாடியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களை ISPIRE பண்ணிவிடுவார்.T.M.சௌந்தரராஜன் ,S.P. பாலசுரமணியம் போன்ற பாடகர்கள் பல பாடல்களை இவ்விதம் பாடி இருக்கிறார்கள். இதற்க்கு K.J.யேசுதாஸ் கூட ஆட்பட்டிருக்கிறார்.!!. ” ஆதி என்பது தொட்டிலிலே ” என்ற பாடலில் இது தெளிவாக தெரியும்.
அவர்களுடைய ஆரம்ப கால இசையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நல்ல பாடல்களை எழுதினார்.அவரைத்தொடர்ந்து கண்ணதாசன் கூட்டணியில் வெற்றிப் பாடல்கள வெளிவந்தன.

கண்ணதாசன் விஸ்வநாதன் பற்றி சொல்வார் : ” அவனுக்கு இசையை தவிர வேறு ஒன்றும் தெரியாது.அவன் அரசியல், உலக நடப்புக்கள் பற்றி கேட்டால் சிரிப்பாக இருக்கும். ஆனால் இசை என்று வந்தால் , உலகெங்கிலும் என்னென்ன இசை உண்டு என்பது அவனுக்கு தெரியும். Light Music இல் அவன் International.”

தங்களது இசையால் தமிழ் மக்களை மகிழ்வித்த மெல்லிசைமன்னர்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இசையை மிகச் சிறப்பாக , நமது மரபு இசையுடன் இணைத்து புது பாதையை அமைத்தார்கள்.தமிழ் சினிமாவின் FUSION MUSIC என்று சொல்லப்படுகின்ற கலப்பிசையின் முன்னோடியாக இருந்தனர். உலகின் பல பகுதிகளிலும் உள்ள இசையை தம்மால் முடிந்தளவு தமிழ் மக்களுக்கு இசைவாக பதப்படுத்தி கொடுத்தனர் எனலாம்.மேற்கத்திய பொழுது போக்கு இசையும் , ஹிந்தி திரை இசையும் அவர்களது இசைஉந்துதலுக்கு [MUSIC INSPIRATION ] ஆதாரமாக அமைந்தன எனலாம்.

இவர்களை போன்றே கே .வீ .மகாதேவன் , ஆதிநாராயண ராவ், , கண்டசாலா , ஏ.எம் ராஜா , டி .ஜி.லிங்கப்பா , சி .என் .பாண்டுரங்கன் ,மாஸ்டர் வேணு , டி.வீ.ராஜூ , எஸ்.தட்சிணாமூர்த்தி, ஆர்.கோவர்த்தனம். ஜி.தேவராஜன், வீ.தட்சிணாமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ் , வீ.குமார் ,எம்.பீ.ஸ்ரீநிவாசன் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் நல்லிசை தந்தார்கள்.தணியாத அவர்களது இசை ஆர்வத்தை அடியொற்றியே இசைஞானி இளையராஜா அறிமுகமாகிறார்.

தொடரும்…….

முன்னைய பதிவுகள் :

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் 3 : T .சௌந்தர்

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல்(2) : T .சௌந்தர்

தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் : T .சௌந்தர்

Exit mobile version