Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

செம்மொழி மாநாட்டிற்கு ஆதரவாகப் புலிகளின் அறிக்கை – கருணாநிதியின் புதிய நாடகம் : திரு

இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே பல தடவை தனது நேர்காணல்களில் தமிழ் நாட்டைத் தமக்குச் சாதகமாக எப்படி மாற்றிக்கொண்டோம் என குறிப்பிடுகிறார். எந்த ஜனநாயக வரம்புகளுக்கும் உட்படாத ராஜபக்சே குடும்பத்தோடு கருணாநிதியின் குடும்பத்தின் அரசியல் உறவு வெளிப்படையானது. கனிமொழி ஈறான தி.மு.க உறுப்பினர்கள் இலங்கை சென்ற வேளையில் அதன் ஆழம் ஒளிவு மறைவின்றி வெளிப்பட்டது.

கருணாநிதியும் சிதம்பரமும் இலங்கை அரசும் இணைந்து நடத்திய நாடகம் தான் கருணாநிதி போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தது என்று கோதாபய ராஜபக்சே எத்தனை ஊடகங்களுக்குச் சொல்லியிருப்பார்? கருணாநிதி குடும்பத்திடமிருந்து எந்த மறுப்பும் இதுவரை வந்ததில்லை. நாடகத்தின் கதாசியர் மட்டுமல்ல அதன் கதாநாயகனும் தானே என ஒத்துக்கொள்கிறார் கருணாநிதி.

கர்பிணிப் பெண்கள், பச்சிழம் பாலகர்கள், முதியவர்கள் என்று ஐம்பதாயிரம் அப்பாவித் தமிழர்கள் வன்னி மண்ணில் அனாதைகளாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த அதே நாளில் டெல்லியில் தனது பேரப்பிள்ளைகளின் பதவிக்காக பேரம் பேசிக்கொண்ட்ருந்தார் ஒரு முதியவர். அவர் தான் முத்துவேல் கருணாநிதி என்பவர். கருணாநிதியும் அவரின் பரிவாரங்களும், ஈழத் தமிழர்கள் கொசுக்கள் போலக் கொல்லப்பட்டுக்கொண்ட்ருந்த போது அதனைக் கண்டித்து அமைதி வழியில் போராடிய தமிழ் நாட்டுத் தமிழர்களைச் தெருத் தெருவாக வேட்டையாடிச் சிறையில் அடைத்தவர்.

முத்துக்குமார் தமிழ் மக்களுக்காகச் செத்துப் போனபோது அமைதி வழியில் இலங்கை அரசைக் கண்டித்த ஆயிரமாயிரம் தமிழர்களை மிரட்டிப் பணியவைக்க முற்பட்டவர்.

இவ்வாறு நாடகமாடும் அரசியல் துரோகத்தின் கதாசிரியன் கருணாநிதி தனது இரத்ததின் இரத்தங்களுக்காக கடைசியாக ஆடிய நாடகம் தான் விழுப்புரம் ரயில் தண்டவாளத் தகர்ப்பு. அனைத்தையும் கேள்வியெழுப்பும் புதிய சந்ததி ஒன்று உருவாகியிருப்பது கலைஞர் கருணாநிதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த சந்ததி விழிப்பாக இருக்கிறது. விழுப்புரம் ரயில் நாடகம் பிசுபிசுத்துப் போன போதே அதை அவரும் அவரின் பின்னால் இருக்கும் கூட்டமும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். தவறிவிட்டார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் ரஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வேளையில் திணிக்கப்பட்ட அடக்கு முறைகளைக் கடந்து வந்திருக்கும் உரம் மிக்க இந்தச் சந்ததி யாரையும் நம்பப் போவதில்லை.

பார்வதியம்மாள் தனக்குக் கடிதம் எழுதியதாக இன்னொரு நாடகத்தை அரங்கேற்றிய போது யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. நம்பகமான தகவல்களின் அடிப்படையில் அவ்வாறான கடிதம் எதுவும் பார்வதியம்மாளால் முத்துவேல் கருணாநிதிக்கு எழுதப்படவில்லை என்பதே உண்மை எனத் தெரிய வருகிறது.

புலிகளின் பெயரில் கருணாநிதிக்கு பாராட்டு- உளவு நிறுவனங்களின் விளையாட்டு.

தமிழுக்காக உரிமை கோரிய வழக்குரைஞர்களை எல்லாம் சிறைக்குள் பூட்டிவைத்துவிட்டு செம்மொழி மாநாடு நடத்துவதற்காக கோவைக்கு செல்லும் கருணாநிதியின் நவீன நாடகம் தான் புலிகள் இன்று அவருக்கு எழுதிய கடிதம்.

செம்மொழி மாநாட்டைப் புலிகள் பாராட்டியதாக அவருக்கு ஒரு மடல் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறதாம்.

இந்த முறை அறிக்கை ரூபன் என்பவர் பெயரில் வந்திருக்கிறது. தமிழ் செம்மொழி மாநாட்டை ஆதரிப்பதற்காக எழுதப்பட்டுள்ள அந்த அறிக்கையில் தமிழக அரசியலையும் மொழியையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கு நன்றி தெரிவித்து தமிழனத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் விரோதியான முத்துவேல் கருணாநிதி இன்னொரு அறிக்கையை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார். எங்கோ கேட்ட சினிமாக் கதை போல் இல்லை?

இன்று புலிகளின் பிரசன்னம் எங்கும் இல்லை. ஆங்காங்கே சிதறிக்கிடப்பவர்கள், தம்மைப் பாதுக்காத்துக்கொள்ளவே வசதியற்றுத் தவிக்கிறார்கள். இலங்கையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும், படுகொலைகளும் என்று வடகிழக்கில் திறந்தவெளி வதை முகாமை நடத்தி வருகிறது பேரினவாத ராஜகபக்சே குடும்பம்.

வசதியாக வாழ்ந்த வன்னிக் குடும்பங்கள் உணவின்றி செத்துக்கொண்டிருப்பது எமது இதயத்தை முள்ளால் துளைக்கிறது. உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க தமிழினத்தினதும் தமிழினதும் வேர்கள் அறுக்கப்பட்டு வெட்டிச் சாய்க்கப்படுகிறது. அந்த நசிவுகளில் கொல்லப்படும் அப்பாவித் தமிழர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு செம்மொழி மாநாடு நடத்துகிறாரம் தமிழுக்காக. அதற்காக புலிகளின் பேரில் தானே அறிக்கை தயாரித்து, அதற்குப் பதிலையும் தானே தயாரித்து ஊடகங்களை ஏமாற்றியுள்ளனர் கருணாநிதியும் அவர் சார்ந்த கும்பலும்.

தவிறவும் தமிழர்கள் எல்லாம் உலகம் முழுக்க இருண்ட காலத்திற்குள் தள்ளப்பட்டு விட்ட இந்தச் சூழலில் தமிழ் மொழியைக் காப்பாற்றுவது போல நாடகமாடுகிறார் இந்த சந்தர்ப்பாவாதி. ஆனால் தமிழக நீதிமன்றங்களிலேயே தமிழுக்கு இடமில்லை என்பதால் வழக்கறிஞர்கள் கைதாகி சிறை சென்று அங்கேயும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று சிறைக்குச் சென்றிருக்கும் வழக்கறிஞர்கள்தான் அன்று பொர் நிறுத்தம் கேட்டுப் போராடினார்கள். அப்படிப் போராடிய வழக்கறிஞர்களை நீதிமன்றத்திற்குள் நுழைந்து அடித்து உதைத்த கருணாநிதி இன்று தமிழுக்காக மாநாடு நடத்துவதாகச் சொல்கிறார். ஆனால் அன்று ஈழத்தில் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய வழக்கறிஞர்களோ இன்று தமிழுக்கு அங்கீகாரம் கேட்டுப் போராடி சிறை செல்கிறார்கள்.

உண்மையான ஈழத் தமிழர்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?

உண்மையான ஈழத் தமிழர்களும் ஈழ விடுதலை ஆதரவாளர்களும் இந்திய, தமிழக சந்தர்ப்பவாத தலைமைகளுக்கு எதிராக போராடும் சக்திகளையும் ஏனைய போராடும் சக்திகளையும்தான் ஆதரிக்க வேண்டுமே தவிற திட்டமிட்டு நாடகம் ஆடும் கருணாநிதியை அல்ல! மக்களைக் காட்டுக் கொடுத்து போருக்கு துணை நின்ற கருணாநிதியை ஆதரிப்பது ஈழ மக்களுக்குச் செய்யும் வரலாற்றுத் தூரோகம். முத்துக்குமார் தொடங்கி 19 தமிழகத் தோழர்கள் உயிர்த்தியாகம் செய்தும் இன்று வரை அந்தத் தோழர்களின் நினைவைப் போற்றும் விதமாக ஒரு சிலை கூட வைக்க கருணாநிதி அனுமதித்த தில்லை.

நிலமை இப்படி இருக்கும் போது செம்மொழி மாநாட்டை ஆதரித்து அறிக்கை விடுத்திருப்பதோடு செம்மொழி மாநாட்டிற்குப் பிறகு ஏதோ கருணாநிதி தமிழினத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழக, இந்திய உளவு நிறுவனங்களின் இன்னொரு விளையாட்டு இது போல இன்னும் பல அறிக்கைகள் வெளிவரும். நாளை கனிமொழி, மு.க. அழகிரி ஏன். காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவைப் பாராட்டிக் கூட புலிகளின் பெயரில் அறிக்கை வரலாம். ஈழ மக்களே, உண்மையான தமிழக ஆதரவாளர்களே இந்த துரோகிகளின் உண்மை முகத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.

Exit mobile version