இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கும் நிலையில் நேற்று கோவையில் செய்தியாளர்களிடையே பேசிய வைகோ அம்மா பல்லவி பாடினார். ’’கோவை தான் தமிழக அரசியலின் திருப்புமுனை தலமாக அமைந்துள்ளது. ஆளுங்கட்சியினரின் வீழ்ச்சி கோவை மாவட்டத்தில் ஆரம்பித்து விட்டது. அதிமுக மீது மக்கள் கொண்டுள்ள பாசமும், விசுவாசமும், நம்பிக்கையும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தெரிந்தது. அலைகடலென திரண்ட மக்கள் வெள்ளத்தில் எழுச்சியுடன் போர் பரணி கோவையில் தொடங்கி உள்ளது’’ என்று தெரிவித்தார். அவர் மேலும், ‘’தமிழர்களின் பாதுகாப்பு பற்றி அதாவது பேசினால் அரசு பாதுகாப்பு சட்டம் என மிரட்டுகிறது. சீமான் பேசியதில் தவறு இல்லை. அவரை விடுதலை செய்ய வேண்டும்.கடந்த காலத்தில் கூட சிலர் எரிமலை வெடிக்கும் பூகம்பம் நிகழும் என மேடையில் பேசி உள்ளனர்’’என்று தெரிவித்தார்.