Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சடங்காகவும் சம்பிரதாயமாகவும் முடிந்துபோன இனப்படுகொலை நாள் நிகழ்வுகள்!

ராஜபக்ச அரசும் அதன் துணைக்குழுக்களதும் மக்கள் விரோத ஆட்சியின் மத்தியில் மக்கள் ஒன்றிணைவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பேசும் சுதந்திரம் கூட சவக்குழிக்குள் புதைக்கப்பட்ட ஒரு தேசத்தில் ஒன்றிணைவிற்கான உரிமையை எப்படி எதிர்பார்க்க முடியும்? பலவீனமான மக்கள் இணைப்புக்களாகவிருந்த சிறிய சிவில் சமூக அமைப்புக்கள் கூட சுயாதீனமாக இயங்க முடியாமல் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவக் காலத்தில் அழிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வன்னிப் படுகொலைகள் உணர்வலைகள் மக்கள் மத்தியில் நெருப்பாக எரிந்துகொண்டிருந்தாலும் அதனை எதிர்ப்புச் சக்தியாக உருமாற்றும் அரசியல் தலைமை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அற்றுப் போயியுள்ள நிலையில் வட கிழக்கில் மையான அமைதியே நிலவிற்று.

ஒடுக்கு முறையின் கோரம் மட்டுமல்ல அரசியல் தலைமையின் வெற்றிடமும் இங்கே அமைதியின் வெளிப்பாடாகத் தெரிந்தது.
மகிந்த ராஜபக்சவின் வசதிக்காக உருவக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பே தமது உயிரைத் துச்சமென எண்ணி மக்கள் சாட்சி கூறிய நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறோம். இவர்களை அரச எதிர்ப்புச் சக்திய ஒரு முகப்படுத்துகின்ற அரசியல் தலைமை உருவாகும் வரை வன்னிப் படுகொலைகளுக்கோ, இனச்சுத்திகரிப்பிற்கோ எதிரான குரல் மௌனமாகவே ஒலிக்கும்.

இனப்படுகொலைக் குற்றவாளிகளான ராஜபக்ச பாசிச அதிகாரத்திற்கு எதிரான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட அதே வேளை 17ம் 18ம் திகதிகள் வெசாக் கொண்டாட்டங்கள் தெற்கில் கோலாகமாக நடைபெற்றது. அதுவும் புத்தர் பிறந்த 2600 வது வருடம் என்பதால் சிங்கள மக்கல் மத்தியில் உற்சாகமான நிகழ்வுகள் நடைபெற்றன.

நந்திக்கடலைக் குருதிக்கடலாக்கிய அதே வாரத்தின் நினைவலைகள் ஒவ்வொரு மனிதனதும் இதயத்தை இரும்பாலறைந்த அதே வேளை டக்ளஸ் தேவாந்ததா யாழ்ப்பாண விகாரையில் வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்துவைத்து நிகழ்வுகளுக்குத் தலைமைதாங்கினார்.

வன்னியில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படவில்லை என்று அயோக்கியத் தனமாக கூறும் டக்ளஸ் தேவானத்தவின் இச்செயற்பாடுகளால் யாரும் அதிர்ச்சிய்டையவில்லை.

இலங்கையில் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்ற மக்கள் அரசிற்கு எதிரான ,இணைவதற்கான , குறைந்தபட்ச ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான உந்துசக்தியாக புலம்பெயர் நாடுகளில் மக்கள் போராட்டங்கள் அமையவில்லை.

கடந்த வாரம் பலஸ்தீன மக்கள் மீது, நக்பா நாளில் இஸ்ரேலிய அரசு நடத்திய தாக்குதலுக்கு எதிராக பிரித்தானியாவில் இஸ்ரேலியத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பலஸ்தீனியர்கள் மட்டுமல்ல ஒடுக்குமுறைக்கு எதிரான பல்வேறுபட்ட மக்களின் ஒன்றிணைவாக அமைந்திருந்தது.
மேற்கில் நாடுகடந்த தமிழீழம் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிவடந்தது.

பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) ரபல்கர் சதுக்கத்தில் ஏற்பாடு செய்திருந்த 18ம் திகதி நிகழ்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர். சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல் மக்களின் பங்களிப்பு அவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சொல்லப்பட்ட அதே செய்திகளையே மறுபடி மறுபடி ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டிருந்தனர். இஸ்ரேலியத் தூதரகத்தின் முன்னால் நடைபெற்ற நிகழ்வைப் போன்று அது காணப்படவில்லை. தமிழ் மக்களைத் தவிர அங்கு யாரும் காணப்படவில்லை.

ராஜபக்ச அரசிற்கு எதிரான முழக்கங்களை மந்திரம் போல உச்சாடனம் செய்து தமிழ் மக்களை ஒருமுகப்படுத்தி வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாகக் காணப்பட்டது. உணர்ச்சி பொங்கும் சுலோகங்கள், அழுகுரல்கள் போன்ற வழமையானவை மட்டுமே காணப்பட்டன.

ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ் மக்களின் நினைவலைகளை விரக்தியையும் சரண்டைவையும் நோக்கிச் செல்லாமல் தடுப்பதற்கு இவ்வாறான நிகழ்வுகள் பயன்படலாம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனல் இவையெல்லம் வெறும் சம்பிரதாயங்களாக நிகழ்த்தி முடிப்பதற்கு நாம் சமாதானம் நிலவும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கவில்லை. நாளாந்தம் சூறையாடப்படும் மக்கள் கூட்டத்தின் வெளியேறப்பட்ட அங்கங்கள். சடங்குகள் போல நிகழ்த்தப்பட்ட இந்த நிகழ்வுகள் எவ்வாறு கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்குப் பலமாக அமையுமுடியும்.

ஆக, இனப்படுகொலை நாள் நிகழ்வுகள் அனைத்துமே வெற்றுச் சுலோகங்களாக, மக்களைப் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரோபாயமாக, எந்த முன்னோக்குமின்றி முடிந்துபோனது.

தமிழர்களைத் தவிர இந்தப் போராட்டங்களில் யாரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது மட்டுமல்ல அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதன் உள்ளர்த்தம் என்ன?

பிரித்தானியத் தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழம் போன்றவற்றில் உள்வாங்கப்பட்டிருக்கும் சமூக உணர்வுள்ள மக்க்கள் பிரிவினர், வியாபார அரசியலைப் புரிந்துகொண்டு பேரினவாத அரசிற்கு எதிரான பொதுக்கருத்தை உருவாக்கும் போராட்டத்தை இனியாவது முன்னெடுப்பார்களா?

இனப்படுகொலைக்கும், பேரினவாதத்திற்கும் எதிரான உலகப் பொதுக் கருத்தை உருவாக்கவல்ல பல அமைப்புக்கள் ஏன் இணைத்துக்கொள்ளப்படவில்லை?

தமிழ் மக்களின் உணர்வுகள் உலக மக்களுடன் ஏன் பகிரப்படவில்லை?

உலகம் தழுவிய பொதுப்புத்தியாக மாற்றமடையாமல் தடுப்பதனூடாகவும், , ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணையவிடாமல் தடுப்பதனூடாக இவர்கள் தமது சொந்த நலன்களுக்காக மட்டும் இவ்வாறான போராட்டங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்களா?

இவர்களுக்கு வெளியில் எவ்வாறு புதிய போராட்ட வழிமுறையை முன்வைப்பது?

முப்பது வருடங்களாக நடைமுறையிலிருக்கும் தவறான வழிமுறைகளைக் கடந்து மக்களை அணுகுவது எவ்வாறு?

இவ்வாறான பல வினாக்களை இனப்ப்படுகொலை நினைவுநாள் நிகழ்வுகள் விட்டுச்சென்றுள்ளன.

Exit mobile version