இந்திய சர்வதேச திரைப்படக் கழகம் ஜூன் மாதம் 3 முதல் 5ஆம் தேதிவரை நடத்தவுள்ள விருது வழங்கு விழாவை இலங்கைத் தலைநகர் கொழும்பல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகவல் தொழில்நுட்ப நெறிஞர்கள் அமைப்பான சேவ் தமிழ் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.
சென்னை பூங்கா நகரிலுள்ள நினைவரங்கம் முன்னால் நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் கலந்துகொள்கின்றனர்.
இது குறித்து தகவல் தொழில்நுட்ப நெறிஞர்களின் அமைப்பான சேவ் தமிழ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயத்தால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் குற்றம் செய்துள்ளது என்றும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்துள்ளது என்றும் குற்றம் சாற்றப்பட்டுள்ள சிறிலங்காவிற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வணிகத் தடைகளை விதித்துள்ள நிலையில், அந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும் உள் நோக்கத்துடன் இந்திய சர்வதேச திரைப்படக் கழகம் அங்கு தனது விருது வழங்கு விழாவை நடத்த முன்வந்துள்ளது என்று குற்றம் சாற்றியுள்ளது.