Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கூடங்குளம் போராட்டத்துடன் இணைந்துகொள்வோம் : புதிய திசைகள்

கூடங்குளம் அணு உலை ஒப்பந்தம் ஆரம்பிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டில் இருந்தே இதற்கு எதிராக கூடங்குள மக்களும், தமிழ்நாட்டு மக்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். கட்டுமான வேலைகள்தொடங்குவதும் மக்கள் போராட்டம் நடப்பதும் என 24 வருடங்களாக இப்போராட்டம் தொடர்கிறது. இடிந்தகரை மக்களின் இப்போராட்டத்திற்கு எமது ஒருமித்த ஆதரவை வழங்குவோம்.

தமிழ் நாட்டில் மின்சார பற்றாக்குறை நிலவுகிறது என்பது உண்மைதான், ஆனால் அதை தீர்ப்பதற்கு அணுமின் நிலையம் தான் தீர்வா என்பதே இன்று அப்பகுதி மக்களின் கேள்வியாக இருக்கிறது.உலகெங்கிலும் அணு உலைகளுக்கெதிரான மக்களின் கருதுக்களும், போராட்டங்களும் வலுப்பெற்று வருகின்றன. உக்ரேனில் ஏற்பட்ட மிக அழிவுமிக்க விபத்து தொடக்கம் சமீபத்தைய ஜப்பானிய விபத்து வரை என்னதான் வளர்ச்சியடைந்த நாடாகவோ அல்லது நிறுவனமயப்பட்ட நாடாகவோ இருந்தாலும்கூட, அணுஉலை விபத்தென்பது கட்டுப்படுத்த முடியாததும் ஆபத்து நிறைந்ததும் என்பதை உலகம் கண்டிருக்கிறது.

உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயகநாடு, மிகவேகமாக வளர்ந்து வரும் வல்லரசு நாடுகளில் ஒன்று என்று பீத்திக்கொள்ளும் இந்திய அரசு
; தனது சொந்த பழங்குடிமக்களின் வாழ்வுரிமையை வெளிநாட்டு நிறுவனங்களின் நலன்களுக்காக பறிப்பதும், உரிமைக்காக போராடும் தேசிய இனங்களை இரும்பு கரங்கொண்டு ஒடுக்குவதும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவதை ஒருபொருட்டாகூட எடுத்துகொள்ளாமல் இருப்பதென்பதும், அடிப்படையில் ஜனநாயமற்ற ஒரு மக்கள் விரோத அரசு என்பதை தெளிவாக காட்டி நிற்கிறது.

போபாலில் ஜுனியன் காபைட் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் நிகழ்ந்த நச்சு வாயு விபத்தில்16 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டு, 5.6 இலட்சம் மக்கள் காயமுற்றார்கள். மக்களை கடவுளின் பிள்ளைகளாக மதிக்கும் இந்திய அரசு செய்தது என்ன? தொழிற்சாலை நிர்வாகத்தையும், வெளிநாட்டவர்களையும் முழுக்கவனதுடன் காப்பாற்றியது. பல ஆண்டுகால போராட்டத்தின் பின் மக்களுக்கு சிறு மானியங்களை வழங்கியது, விபத்தில் தொடர்புள்ள நிர்வாகிகள் சிலர் இயற்கையாக இறந்தபின் அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட்டது.

மக்களின் நலனில் சிறிதும் அக்கறையற்ற, ஊழலை நிர்வாகத்தின் அடிப்படையாக கொண்ட இந்திய அரசு கூடங்குளம் அணுநிலயத்தை மட்டும் விதிவிலக்காக நடத்திவிடப்போவதில்லை. இடிந்தகரை மக்கள் இதை நன்றாக புரிந்துதான் இத்தனை வருடங்களாக போராடுகிறார்கள். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் அக்கறை காட்டும் கனவான்கள், இந்த மக்களின் உறுதியான போராட்டத்தின் நியாயத்தை விளங்கிக்கொள்ளவேண்டும். இப்போராட்டத்தின் தலைமை அமரிக்க சார்பு கொண்டதென்னும் பனிப்போர் கால பிரிவினை பேசி, இப்போராட்டத்தை காயடிக்கமுனைவது மக்கள் விரோதச்செயல்.

இன்று இடிந்தகரை மக்கள் நடத்தும் போராட்டம் இலங்கை மக்களையும் காப்பற்றுவதற்கான போராட்டம் என்பதை எம்மில் எத்தனைபேர் உண்ர்ந்துள்ளோம் என்பது ஒரு கேள்விக்குரிய விடயந்தான். கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கும் கூடங்குளத்திற்கும் மிககிட்டியதூரத்தில் இலங்கையின் வடக்கு மற்றும் மேற்கு மக்கள் வாழ்கிறார்கள். இரு மின்நிலையங்களில் ஏற்படும் எந்த விபத்தும் எம்மையும் எமது கடலையும் பாதிக்கக் கூடியவை. தனது சொந்த எல்லைக்குள்ளேயே சிறுபான்மை தேசிய இனங்களையும், தனது சொந்த மக்களையும் ஒடுக்கியழிக்கும் இலங்கை அரசிற்கு இது ஒரு பொருட்டான விடயமல்ல. இதற்கெதிரான போராட்டத்தை நாம் எடுக்காவிட்டாலும் போராடும் தமிழக மக்களுடன் எம்மை இணைத்துக்கொள்வோம்.

இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் இலங்கை தமிழரின் உரிமை பற்றி பேசும் அமைப்புகள், இலங்கை தமிழருக்காக தமிழ் நாட்டு தமிழர் உயிர் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் அமைப்புகள், இக்கால கட்டத்தில் வாய்மூடி மவுனமாக இருப்பது பச்சைசந்தர்பவாதமாகும்.
தமிழகத்தின் ஆளும் கும்பல்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் ஒத்துழைப்பு டனேயே இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மாற்று தலைமை என்று தங்களை கூறிக்கொள்ளும், வைகோ, திருமாவளவன்,சீமான்,ராமதாஸ்,பாண்டியன் போன்றோர், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை உள்வாங்கி, தமது கட்சிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதுடன் அவற்றை நீறுபூர்க்க செய்வதும், இதைவிட மிகமோசமாக இம்மக்கள் போராட்டங்களை திருப்பிச்சென்று இந்திய அரசிடமோ அல்லது மாநில அரசிடமோ சரணடயவைக்கும் நயவஞ்சக அரசியலையும் செய்கின்றனர். இவ்வகை அரசியல்வாதிகள் தவிர வேறு தெரிவின்றி தவிக்கும் தமிழக மக்கள் மத்தியில் மக்கள் நலனில் அக்கறையுள்ள தலைமைகள் உருவாக வேண்டும். இதை நோக்கிய தமிழக மக்களின் போராட்ட கரங்களை இலங்கை தமிழர்களாகிய நாம் வலுப்படுத்தவேண்டும்.

Exit mobile version