
டெல்லியில் ஓடும் பேருந்தில் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கும்பலை கைது செய்துவிட்டார்களா என்று மருத்துவ படிப்பு மாணவி கேட்டுள்ளார். டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மருத்துவ படிப்பு படிக்கும் மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் 5 முறை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அவரின் குடல் பகுதி பெரும் சேதமடைந்த நிலையில் அறுவை சிகி்ச்சை செய்து குடலில் 15 இன்ச் அளவுக்கு வெட்டி எடுத்தனர். அவரது நிலைமை தொடர்ந்து மோசமாகத் தான் உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கண் திறந்து பார்த்த அவர் தன்னை சீரழித்தவர்களை கைது செய்துவிட்டார்களா என்று கேட்டுள்ளார். அவரால் பேச முடியவில்லை என்பதால் பேப்பரில் எழுதிக் காட்டுகிறார். முன்னதாக அவர் தான் வாழ விரும்புவதாக எழுதிக் காட்டியுள்ளார். இதற்கிடையே அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அச்சம் தரும் அவமானகரமான இந்த வன்முறை இந்தியப் பெண்ணின் அவல நிலையை உலகத்திற்குப் படம் போட்டுக்காட்டுகிறது.
ஆணாதிக்க வெறிகொண்ட இந்த ஆறு மிருகங்களும் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பாலியல் உறுப்புப் பகுதியில் இரும்புக் கம்பிகளால் தாக்கி தெருவில் வீசியிருக்கிறது. அடக்க ஒடுக்கமாக, குனிந்த தலை நிமிராமல் பெண் அடிமையாக வாழ வேண்டும் எனக் கற்றுக்கொடுத்த இந்துதுவ ஆணாதிக்க அடிமைத்தனமே இந்த மிடுகங்களையும் உருவாக்கி அவர்களது தத்துவதை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு இந்தியாவில் நாளாந்தம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் நூற்றுக்கணக்கானோர் அதற்கு எதிராகப் போராடவும் சட்டத்தின் முன் கொண்டுவரவும் தயக்கம் காட்டுகிறார்கள். சமூகதால் புறக்கணிக்கப்படுவோம் என்கிறார்கள். கலாச்சாரம் இதன் பின்னும் அவர்களைக் கட்டிப்போடுகிறது. இலங்கையில் பேரினவாதம் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய போது அதுபற்றிப் பேசக் கூடாது என்ற சமூக விரோதிகளும் கூட இதே கலாசார வரம்புகளை தாம் நேசிக்கும் இனப்படுகொலை அரசைப் பாதுகாக்கப் பயன்படுத்தினார்கள்.