Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கர்நாடக இசையும் மக்களின் இசை மரபுகளும் : சி. சிவசேகரம்

ஒன்றின் மேன்மை அதன் தொன்மையில் தங்கியுள்ளது என்பதும் அது தனது தூய வடிவிலேயே அன்று தொட்டு இன்று வரை இருந்துவந்துள்ளது என்பதும் இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு துறைகளிலும் இருந்து வருகிற மயக்கமாகும். இசையைப் பொறுத்தவரை, குறிப்பாகக் கர்நாடக சங்கீதம் என அறியப்பட்டு வரும் இசை மரபைப் பொறுத்தவரை, இவ்வாறான மயக்கம் தொன்மை, தூய்மை என்பவற்றைக் கடந்து அதற்கு ஒரு தெய்வீகத் தன்மையும் கற்பிக்கப்பட்டுள்ளதை அறிவோம். அந்த இசையைப் பயிலவும் பயன்படுத்தவும் இறை அருள் தேவை என்பதும் வலியுறுத்தி வரப்படும் ஒரு விடயமாகும்.

மேற் கூறிய அணுகுமுறைகள் மூலம் இசையின் தோற்றமும் விருத்தியும் பற்றிய வரலாற்று உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கப் படுகின்றன. செம்மையான எல்லாமும் சமூக வழக்கில் இருந்து வந்த நடைமுறைகளின் சேர்க்கையாலும் செம்மைப் படுத்தலாலும் அமைந்தவை என்ற உண்மை மறுக்கப் படுகிறது. பல வேறு நாட்டார் இசை வடிவங்களிலும் சமூகச் சடங்குகள் வழிபாடுகள் போன்றவற்றிலும் தோன்றி விருத்தி பெற்ற இசை வடிவங்களே பண்ணிசை முதல் தமிழ் இசை என்று இன்று கூறப்படும் இசையினதும் கர்நாடக இசையினதும் மூலதாரங்கள் என்ற உண்மை மறுக்கப் படுகிறது.

மாறாகத் தெய்வங்கள் ஞானியருக்கும் சான்றோருக்கும் அருளியதான ஒரு தூய இசையிலிருந்து தான் அனைத்து இசைகளும் தோன்றின என்று நமக்குக் கூறப்பட்டு வந்துள்ளது. கர்நாடக இசை மரபிற்குள் எது முறையானது எது முறையற்றது என்று பத்தாம் பசலிகட்கும் நவீனத்துவவாதிகட்கும் நடுவிலான விவாதங்கள் இன்னமும் தொடர்வதற்கு இந்தத் தூய்மைக் கோட்பாடே காரணமாக உள்ளது. தூய்மை என்பது கலை வடிவத்தையும் தாண்டிக் கலைஞர்களையும் தொடுகிற போது ஏற்கெனவே கூறியபடி இறையருள் பெற்றோர் இயற்றியவை மட்டுமே ஏற்கத் தக்கவை எனவும் நிகழ்ச்சிகளில் அவை பாடப் படுவது அத்தியாவசியம் எனவும் மற்றவை சேர்க்கப்படுவது தவிர்க்கத் தக்கது எனவும் சேர்க்கப் படுமாயின் அவற்றை முதன்மைப்படுத்தக் கூடாது எனவும் இன்னமும் வாதிக்கப் படுகிறதை அறிவோம்.

இந்தப் பழமைவாதப் போக்கினுள் வர்ணாசிரமச் சாதியச் சிந்தனையும் பார்ப்பானிய ஆதிக்கம் வலுப்பெற்ற காலத்தையொட்டி உருவான தமிழ் மறுப்புக் கொள்கையும் உள்ளடங்குவன. பார்ப்பனரல்லாதார் கீர்த்தனங்களை இயற்றத் தகுதியற்றோர் என்ற கொள்கை சில நேரங்களில் அபத்தத்தின் உச்சத்தை தொட்டுமுள்ளது. உதாரணமாகக் கர்நாடக இசை மரபு கொண்டாடும் ‘சங்கீத மும்மூர்த்திகட்கு’ ஒரு நூற்றாண்டு முற்பட்டவரும் பக்தி மார்க்க மரபிற்குரியவரும் பிறப்பால் வணிகருமான கன்னட சாகித்தியக்காரரான புரந்தரதாசர் வணிகத்தில் ஈடுபட்ட பிரமாணர் என்றும் முற்பிறப்பில் பிராமணர் என்றும் கதைகள் சோடிக்கப் பட்டுள்ளதைக் கூறலாம். கர்நாடக இசை இவ்வாறு புனிதப்படுத்தப் பட்டுப் பிறப்பால் உயர்ந்தோராகிய பிராமணருக்கே உரியதாகக் காட்டப்பட்டதன் இன்னொரு விளைவாகத் திருவனந்தபுரத்தில் ஆட்சி செலுத்திய ஸ்வாதித் திருநாள் மகாராஜாவின் புகழ் பெற்ற சாகித்தியங்கள் எல்லாம் அவரது அரசவையிலிருந்த பார்ப்பனர்களால் ஆக்கப்பட்டவை என்று கதை பரப்பப்பட்டது.

எனவே பார்ப்பனரல்லாத பிறர் எத்தகைய புறக்கணிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருப்பர் என்று மதிப்பிடுவதில் சிரமமிராது.

அடுத்தபடியாகப் புறக்கணிப்பிற்கு உட்பட்டது தமிழ். தமிழ் கர்நாடக சங்கீத சாகித்தியங்கட்கு உகந்த மொழியல்ல என்ற புனைவு இன்னமும் பரப்பப்பட்டு வருகிறது. சங்கீத மும்மூர்த்திகள் எனப்படுவோரில் தியாகராஜரும் சியாமா சாஸ்த்திரியும் பிறப்பாற் தெலுங்கர். முத்துசுவாமித் தீட்சிதர் தமிழ்ப் பிராமணர். மூவரும் மிகக் குறைந்த அளவிலேயே தமிழ்ப் பாடல்களை இயற்றினர். முன்னைய இருவரும் தமது தாய் மொழியான தெலுங்கில் எழுதியது விளங்கிக்கொள்ள முடியுமானது.

தீட்சிதர் ஏன் பெரும்பாலான பாடல்களை சமஸ்கிருதத்தில் எழுத வேண்டும்? நிச்சயமாகத் தமிழை விட சமஸ்கிருதம் இசைக்குப் பொருத்தமான மொழியாகாதே! எனவே இந்தத் தமிழ் மறுப்பின் தாக்கம் மிகச் சிக்கலானதாகிறது தமிழ் ஷஷநீச பாiஷஷஷ என்றால் தெலுங்கும் ‘நீச பாiஷ’ தான். தெலுங்கு கீர்த்தனங்கட்கு ஏற்றதென்றால் தமிழும் அதே அளவுக்கு ஏற்றதாகி விடாதா? எனவே தமிழிலே சாகித்தியங்கள் உருவாவது சமஸ்கிருத ஆதிக்கத்துக்கல்லாமல் பார்ப்பன ஆதிக்கத்துக்குச் சவாலாக அமையும் என்பதே முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம்.

மேற்கூறிய மும்மூர்த்திகட்கும் முன்னரே தமிழில் சாகித்தியங்களைப் புனைந்தவர்கள் இருந்தார்கள். அவர்களது பாடல்களைப் பாடக்;;கூடிய வலிய சீடப்பரம்பரை இல்லாததாலும் பிற்காலத்தில் திட்டமிட்ட புறக்கணிப்பாலும் அவற்றில் ஒரு சிறு பகுதியே எஞ்சியுள்ளது. தமிழிசை இயக்கத்தினர் கர்நாடக இசை என்பது உண்மையில் தமிழிசையே என்றும் அதிலிருந்து தமிழ் விலக்கப்பட்டு அது கர்நாடக சங்கீதமாக்கப் பட்டது என்றும் சொல்லுவர். சிலர் அதற்குமப்பால் சென்று தமிழரின் இசையைக் ஷஷகளவாடியேஷஷ கர்நாடக இசை உருவாதென்று சாகித்தியகாரர் மீதும் குற்றஞ் சுமத்துவார்கள்.

தமிழிசையா, கர்நாடக சங்கீதமா என்பது பெருமளவும் பார்ப்பன ஆதிக்கமும் பார்ப்பனிய அடிப்படையிலான தமிழ் மொழிப் புறக்கணிப்பும் பற்றிய விவாதமாகவே விருத்தி பெற்றது. உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை கர்நாடக சங்கீத மரபு, ‘சங்கீத மும்மூர்த்திகள்’ எனப்பட்டோரை இறையருள் பெற்ற மூத்தோராக முதன்மைப்படுத்திப் பின்னர், அங்கீகரிக்கப் பட்டவர்கள் பலருக்கும் அவ்வாறான இறை அங்கீகாரம் வழங்க முற்பட்டதை நாம் அறிவோம். தமிழ் நாட்டில் கர்நாடக இசையின் பரவலாக்கத்திற்கும் அதனோடொட்டிய வருமானத்திற்குமான தேவையும் சினிமாவில் இசையின் முக்கியத்துவமும் தமிழில் கர்நாடக இசைக்கான பாடல்களைப் புனையும் வாய்ப்பை உருவாக்கின. அதை விடவும் கோபாலகிருஷ;ண பாரதியாரின் நந்தனார் நாடகப் பாடல்கள், பாரதி பாடல்கள் போன்றவையும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தின.

ஊத்துக்காடு வேங்கடசுப்பையர், பாபநாசம் சிவன் போன்றோரும் மக்களைச் சென்றடையக்கூடிய விதமான பாடல்களைப் புனைந்தனர்.

தமிழிசை இயக்கத்தின் வருகை கர்நாடக இசைக் கச்சேரிகளில் தமிழிலும் சிலவற்றை பாடலாம் என்ற சலுகைக்கு வழி செய்தது. எனினும் அதனால் கர்நாடக இசைத்துறையில் இன்னமும் ஆதிக்கச் செலுத்தும் பார்ப்பனியச் சிந்தனையை முறியடிக்க இயலவில்லை. இன்று தமிழிசை ஆர்வலர்கட்குரிய ஒரு செயற்பட்டுத் தளம் உள்ளது. அதன் சமூக நோக்கமும் வர்க்கக் கண்ணோட்டமும் கர்நாடக இசைத் துறையினதை விடச் சிறிய முற்போக்கானதாக இருப்பதற்கு அதன் பார்ப்பனிய விரோதத் தமிழ்த் தேசியவாத அனுகுமுறை காரணமாக உள்ளது.

எனினும் தமிழிசை பற்றிய வாரலாற்றுப் பார்வையும் தமிழிசை இயக்கத்தின் வர்க்க நிலைப்பாடும் தமிழிசையை நாட்டார் இசைக்கும் பரந்து பட்ட மக்களை முன்னோக்கிக்கொண்டு செல்லக்கூடிய மக்கள் இசை இயக்கத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவர உதவும் என்று எதிர்பார்க்க இயலாது.

கர்நாடக இசையின் தொன்மை, தூய்மை, தெய்வீகத்தன்மை என்பன பற்றிய மாயைகள் உடைக்கப்பட்டு அது மரபு வழி வந்த பல்வேறு இசை வடிவங்களின் செம்மைப்படுத்திய தொகுப்பு என்பது உறுதியாக நிலை நிறுத்தப்படவேண்டும். கர்நாடக இசை பற்றிய புனைவுகளும் அதன் நடைமுறைகளும் மக்களிடம் இருந்து இசையை அந்நியப்படுத்தும் நோக்கிலானவை என்பது பரவலாக விளக்கப்பட வேண்டும். இவை பற்றியும் தமிழிசை இயக்கத்தினர் கவனஞ் செலுத்த வேண்டும். தமிழிசை என்பது பார்ப்பனிய நீக்கம் பெற்ற தமிழ் மேட்டுக்குடி இசையாக இல்லாமல் தமிழ் மக்களின் பல்வேறு இசை மரபுகளையும் மக்கள் சார்ந்த இசை வடிவங்களையும் ஒருங்கிணைக்கும் பரந்துபட்ட இசை இயக்கமாக முன்னெடுக்கப் படுமாயின் அது தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்துக்கு வளஞ் சேர்க்கும்.

சினிமா, கூத்து இசை வடிவங்களைக் கர்நாடக இசை மரபு இழிவாகக் கருதி நிராகரித்து வந்தாலும் சினிமாவின் மூலம் கிட்டக்கூடிய வருமானம் சமரசங்கட்கு வழிசெய்துள்ளது. அதைவிட, அந்நிய இசை மரபுகளுடன் இணைந்து இசையமைக்கும் ஃபயூஷன் இசை வடிவங்கள் இன்றைய பூகோளமயமாக்கற் சூழலிற் செல்வாக்குப் பெற்று வருவதையும் நாம் கவனிக்க வேண்டும்.

பழமைவாதம் என்பது அந்நிய மேலாதிக்கத்துடன் சமரசம் செய்யத் தயங்குவதில்லை. அதன் தயக்கமெல்லாம் தனக்கு கீழ் நசுக்கப்படும் மக்களின் கலை, மொழிப் பண்பாட்டுக் கூறுகளினால் தனது ‘செவ்வியல்’ வடிவங்கள் மாசுடுவது பற்றியதே.

நன்றி :  புதியபூமி

http://ndpsl.org

Exit mobile version