Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கனடாவில் போராடத் தடை : பாசிச மயமாகும் மேற்கு

மேற்கு நாடுகளில் பொலிசாரின் அனுமதியின்றி ஒரு போராட்டம் நடந்தால் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது நிறுவனமயமான நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்ட சட்டங்களைப் பிரயோகித்து அவர்களை வாழ் நாள் முழுவதும் கடனாளிகளாக்கி அரசுகள் அழித்துவிடும். இறுதியில் போராட்டம் நடத்தியதற்காக அன்றி கடன் தொகையைச் செலுத்தாமையினாலேயே கைதானதாக சிறைவாசம் அனுபவிப்போரும் உண்டு. கனடாவில் கடந்தவாரம் – கனடாவில் மொன்ரியால் பகுதியில் அரசிற்கு எதிராக ஊர்வலம் நடத்துவதற்கு அரசு அனுமதி மறுத்தது. ஆனால் போராட்டம் திட்டமிட்டபடி நடபெற்றது. இந்தப் போராட்டம் கனேடிய வரலாற்றிலேயே அதிக அளவிலான மக்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய போராட்டமாகக் கருதப்படுகின்றது. இளையோர் மற்றும் தொழிலாளர்கள் என நான்கு லட்சம் பேர் வரையில் கலந்து கொண்ட இந்தப் போராட்டம் கனேடிய வரலாற்றில் பதியப்படும்.

போராட்டம் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக மாணவர்களின் போராட்டமாகவே அமைந்திருந்தது. ஆனால் இப்போது பெருமளவிலான தொழிலாளர்கள் இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.மாணவர்களின் பல்கலைக் கழகக் கற்கைக்கான கட்டணத்தை 75 வீதமாக உயர்த்திய கனேடிய அரசு பொருளாதார நெருக்கடியை அதற்குக் காரணமாக முன்வைத்தது. கல்வி அமைச்சர் லீன் போஷாம் மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து பதவி துறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கடந்த 17ம் திகதி கியூபெக் பாராளுமன்றம் இரவோரு இரவாக ஒன்று கூடி கிபெக்கில் ஆர்ப்பட்டங்கள் நடத்துவதற்கான உரிமையை ரத்துச் செய்தது. 8 மணித்தியாலங்களின் முன்னர் போலீஸ் அனுமதியின்றி நடத்தப்படும் ஒன்று கூடல்கள் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது.
அனுமதி இன்றிய வேலை நிறுத்தத்திற்கு $5000 மற்றும் தலைவர்களுக்கு $35000 வரையும் தண்டப்பணம் அறிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வோர் $125000 வரை தண்டப்பணம் கட்டவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

மீண்டு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதிய வகையிலான போராட்டம் ஒன்றை 24 மே மாதம் வெள்ளியன்று மாணவர்களும் பெற்றோரு ஏனைய உழைக்கும் மக்களும் இணைந்து நடத்தினர். வீடுகளிலிருந்த பானைகள் மற்றும் சமயலறையில் ஒலி எழுப்பக் கூடியவற்றை எடுத்து தெருக்களில் அடித்து இந்தப் போராட்டத்தை நடத்தினர். 200 பேர் வரை இந்தப்போராட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பலர் பொலீசாரின் தாக்குதல்களுக்கு உள்ளாகினர்.

தமது போராடும் உரிமையக் கோரி ஒரு சமூகம் நடத்திய போராட்டமே இது, மேற்கு நாடுகள் ஏனைய நாடுகளை அடிமைகளாக்கினாலும் உள் நாடுகளில் குறைந்தபட்ச ஜனநாயகத்தை வழங்கியிருந்தன. இப்போது இந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள அமைப்பியல் பொருளாதார நெருக்கடி அரசுகளைகளை பாசிச மயமாக்கி வருகின்றன. கிரேக்கம், இஸ்பானியா, இத்தாலி போன்ற நாடுகளில் மக்களுக்கு எதிரான பாரிய தாக்குதல்கள் நடைபெற்றாலும் அது கியுபெக்கிலேயே முதல் தடவையாக சட்டமாக்கப்பட்டுள்ளது.

Exit mobile version