Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கடத்தியவர்கள் அரசியல் வாழ்க்கை குறித்து விசாரித்தனர் : பிரேம்குமார்

பிரேம்குமார் குணரட்னத்தை கடத்திச் சென்ற ஆயுதக்குழுவினர் அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அருகில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இறக்கி விட்டுச் சென்றிருந்தனர். இதன் பின்னர் குணரட்னம், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டார். இதனையடுத்து காணாமல் போயிருந்த குணரட்னத்தை மீட்டுள்ளதாக, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அவுஸ்திரேலிய தூதுவர் மூடி ரொபினுக்கு அன்றைய தினம் இரவே அறிவித்தனர்.
இதனையடுத்து அன்றைய தினம் இரவே தூதுவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு சென்று குணரட்னத்தை சந்தித்தார். இதனையடுத்து குணரட்னத்திடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்ட குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த குணரட்னம் நேற்று அதிகாலை 7.40 அளவில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
‘என்னை கடத்திச் சென்ற ஆயுதக்குழு இரண்டு நாட்கள் தடுத்து வைத்து, எனது அரசியல் வாழ்க்கை குறித்து விசாரணை நடத்தினர். எனது எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றியே என்னிடம் விசாரித்தனர்’ என முன்னிலை சோசலிசக் கட்சியின் முன்னணி தலைவரான பிரேம்குமார் குணரட்னம்தெரிவித்துள்ளார்.

தான் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்களில் கை, கால்களில் விலங்கிடப்பட்டு உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பிரேம்குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னிலை சோஷலிஸக் கட்சியின் உறுப்பினரும் அவுஸ்திரேலிய பிரஜையுமான பிரேம்குமார் குணரட்ணம், இன்று (11) அவுஸ்திரேலிய சிட்னியில் உள்ள தனது வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

“என்னை இலங்கை அரச படையினரே கடத்தினர் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். கண்ணை கட்டிவிட்டு சித்திரவதை செய்தனர். பாலியல் ரீதியில் சித்திரவதை செய்தனர்.” என குமார் குணரத்ணம் கூறியதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இலங்கையில் பல ஊடகவியலாளகள்,மனித உரிமையாளர்கள்,ஜனநாயகவாதிகள் எனப் பலரும் காணாமல் போயுள்ளனர். கோதாபய ராஜபக்சவின் கட்ட்ளையின் கீழ் இயங்கும் ஒரு பிரிவே இவ்வாறான கடத்தல்களை மேற்கொள்கின்றது என்பதற்கான ஆதாரங்கள் முன்னதாக வெளியிடப்பட்டிருந்தது.

Exit mobile version