Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

என்ன செய்யப்போகிறோம் ? : உலகமயமதலின் பின் ! : சபா நாவலன்

எதிர்காலம் நம்பிக்கையில்…….

– பகுதி 1

ஜனநாயக வாதிகளுக்கும், மனிதாபிமானிகளுக்கும், இடதுசாரிகளுக்கும், ஏதோ ஒரு வகையில் சமூகத்தின் ஒழுங்கமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டுமென்று விருப்பப்பட்டுக்கொள்பவர்களுக்கும் உலகின் இன்றைய சூழல் மேலோட்டமாக விரக்தி தருவதாய் அமைந்தாலும், எதிர்காலம் ஒடுக்கப்பட்டவர்களின் ஆளுமைக்குட்படும் காலம் வெகுதொலைவிலில்லை. 1970 களின் பின்னர் உலகம் மறுபடி வரலாறு காணாத புதிய நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உலகப்பொருளாதார நெருக்கடி அதன் உச்ச நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. இதுவரை உலகை அடக்கியாண்ட அதிகார சக்திகள் இந்த ஆபத்திலிருந்து மீள்வதற்காக தம்மாலான எல்லா வேலைத்திட்டங்களையும் முன்வைத்தாகிவிட்டது. எதுவுமே நெருக்கடியிலிருந்து மீட்சியடைய அதிகார சக்திகளுக்கு எந்த நம்பிக்கையையுமே வழங்கவில்லை.

ஏகாதிபத்தியங்களுக்கும் எதேச்சதிகார சக்திகளுக்குமெதிரான வெறுப்புணர்வு உலகமெங்கும் மக்கள் மனதில் ஆழ வேர்விடத் தொடங்கியுள்ளது. இருப்பிலுள்ள சமூக அமைப்பு முறையானது சிறுபான்மை ஏகபோக முதலாளிகளுக்கானது மட்டுமானதே என்பதை மறுபடி உலக மக்கள் உணரவாரம்பித்துள்ளனர். அமரிக்காவும் அதன் ஐரோப்பிய சகாக்களும் உலக ஜனநாயகத்தின் ரட்சகர்களாகக் கருதப்பட்ட காலம் மலையேறிவிட்டது. இதையெல்லாம் கண்டு மிரண்டுபோன ஏகாதிபத்தியங்களும் ஏகபோக அரசுகளும் உலகம் முழுவதும் தமது ராணுவத் தர்பாரை ஆரம்பித்துவிட்டனர்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையின் புதிய பரிமாணங்களும், ஈரக் ஆக்கிரமிப்பும், ஆப்கானிஸ்தான் அழிப்பும், இன்னும் உலகெங்கும் நாளாந்தம் நடைபெறும் மனித வேட்டைகளும் இதன் ஒரு பகுதியேயாகும்..

ஏகாதிபத்தியங்களும் அதன் அடிவருடிகளும் நம்பிக்கையிழந்து மிரட்சியடைந்து போக அதன் எதிரணியான ஒடுக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையோடு ஒன்றிணையும் காலம் வெகுதொலைவிலில்லை.

ஆனால், 1970 பொருளாதார நெருக்கடியோடெழுந்த பிரஞ்சுப்புரட்சி தோற்று போனது போல, ரஷ்யப் புரட்சியும் சீனப் புரட்சியும் காணாமல் போனது போல, இலங்கையின் தேசிய இனப்போராட்டம் ஏகாதிபத்தியங்களதும் அதிகார சக்திகளதும் அனுசரணையோடு புலிகளால் சீரழிக்கப்பட்டது போல, இந்தியாவில் நக்சல்பாரிப் போராட்டங்கள் திசைகெட்டோடுவது போல இன்னொரு சந்தர்ப்பம் தவிக்கப்பட வேண்டுமாயின் திறந்த விவாதங்களும், தத்துவார்த்தப் போராட்டங்களும் சமூக உணர்வுள்ள அனைத்து சக்திகள் மத்தியிலிருந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவை வெறும் வெற்றுப் புலம்பல்களாகவும், குறைகூறல்களாகவும், முறைப்பாடுகளாகவும் மட்டுமல்லாது அதற்கு அப்பாலான தத்துவார்த்தத் தளத்தை புதிய சமூக உருவாக்கத்திற்கான தேவையை நோக்கி வளர்த்தெடுக்கவேண்டும்.. இந்த நோக்கத்தில் எனது எண்ணங்களாக வரும் இக்கட்டுரைத் தொடரியை சமூகப் பிரக்ஞையுள்ள அனைத்துசக்திகளும் பங்கெடுத்து வளர்த்தெடுப்பார்களென நம்புகிறேன்.

வரலாற்றாய்வுமுறை..

அரசகுடும்பத்தினரதும், அறிஞர்களதும், உயர் பதவியுடையோரதும் மாண்டுபோன, பிறப்படைந்த, முக்கிய நிகழ்வுகள் போன்ற சம்பவங்களை மட்டுமே கோர்வையாக்கி

வரலாற்றை எழுதிக் கொண்டிருந்த நிலை மாறி குறித்த காலத்தில் குறித்த சம்பவங்கள் நிகழ்ந்ததற்கான காரணத்தைக்கூறும் விஞ்ஞானரீதியான விளக்கமுறையான வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற வரலாற்றை ஆராயும் முறை மார்க்சிய விஞ்ஞானத்தால் முன்வைக்கப்பட்ட போது வரலாற்றின் எதிர்கால நிலையை எதிர்வுகூறுவதற்கான ஆயுதத்தைச் சமூகவுணர்வுள்ள சக்திகள் மத்தியில் விட்டுச்சென்றது. இந்த மார்க்சிய அடிப்படையிலான ஆய்வுமுறைதான் முதலாளித்துவ சமூகவியலாளர்களால் கூடப் பயன்படுத்தப்படுகிறது என்பது வேறுவிடயம்.

இந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் இதனூடு உருவான கார்ல் மார்சின் மூலதனமும், எமது சமூகத்தின் புறச் சூழலிற்கேற்ப பிரயோகிப்பதனூடாகவே இன்றைய சமூகத்தின் அமைப்பு முறையை மட்டுமல்ல அதன் எதிர்காலத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

மார்க்சிய அடிப்படையில் வரலாற்றின் இயக்கத்தை ஆராய்தல் என்பதில் பொருள்முதல்வாதத்தினதும் பங்கும் மூலதனத்தின் பாத்திரமும் இன்றிய மையாதாகிவிட்டது.

1. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எ ன்பது,
அ) உற்பத்தி உறவுகளும் உற்பத்தி சக்திகளும். (Relation of production and productive forces)
ஆ) வர்க்கமும் வர்க்கப் போராட்டங்களும் ( Class and class struggle)
இ) அரசும் அதன் வடிவங்களும் ( State and it’s forms)
என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது.

2. மூலதனம் தொடர்பான கார்ல் மார்க்சின் ஆய்வு என்பது,
அ) மூலதனமும் பணமும் ( Money and finance)
ஆ) நெருக்கடிக்காலம் ( Crisis)
இ) வரலாற்றுப் போக்கு ( Historical tendencies)
ஆகியவற்றை ஒருங்கு சேர்த்தது.

இந்த ஆய்வுகளின் அடிப்படையிலிருந்து கார்ல் மார்க்சும் அவரின் பின்வந்த மார்க்சியர்களும் முதலாளித்துவ அமைப்புமுறையானது நிலைபெற முடியாதவொன்றென்றும் வரலாற்று போக்கில் அது அழிந்து சோசலிச அரசு உருவாகி பின்னர் கம்யுhனிச அரசாக வளர்ச்சி அடையும்மென்றும் நிறுவினர். ஆனால் முதலாளித்துவம் ஒவ்வொரு முறையும் அதன் அழிவின் விழிம்பிற்கு வரும் போதும், தன்னைச் சுதாகரித்துக்கொண்டு மீள வடிவமைத்துக்கொள்கிறது.

முதலாளித்துவத்தின் அதிகார சக்திகளால் மறு ஒழுங்கமைக்கப்படும் இந்த முதலாளித்துவமானது ஒவ்வொரு மறு சீரமைப்பின்போதும் ஒரு குறித்த கால எல்லைவரை உயிர்வாழ்கிறது.

கார்ல் மார்க்ஸ் மறைந்த பின்னர் உருவான இவ்வாறான மறுசீரமைபிற்குட்படுத்தும் போக்கானது, சோஷலிச உருவாக்கத்திலிருந்து முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் உலகளாவிய அமைப்பு முறைகளை உருவாக்கிற்று.

முதலாளித்துவத்தில் ஏற்படும் பெரியளவிலான நிலையற்ற தன்மைகளின் (Macro – Instability) போது இவ்வாறான புதிய சமூக ஒழுங்கமைபிற்கும் புதிய அதிகார ஒழுங்கமைபிற்கும் முதலாளித்துவத்தை உட்படுத்துவதனூடாக அதன் அதிகார சக்திகள் அதனை மறுபடி ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மேலும் பாதுகாத்துக் கொள்கின்றனர்.

1970 களிலும் பின்னர் 1980 களிலும் ஏற்பட்ட உலகப் அமைப்பியல் நெருக்கடி(Structural crisis) என்றழைக்கப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கால கட்டத்தின் பின்னதாக முதல்தடவையாக உலகம் ஏகாதிபத்தியங்களால் பெரியளவில் மறு-ஒழுங்கமைப்புக்குட்படுத்தப்பட்டது.

இதன் சராசரி வாழ்வுக்காலமான சற்றேறக்குறைய 20 வருடங்களின் பின்னர், 90 களின் ஆரம்பப்பகுதிகளில் உலகம் மீண்டும் மறு ஒழுங்கமைக்கப்பட்டதெனினும் அமரிக்க ஜனாதிபதியாகவிருந்த ரொனால்ட் ரீகனின் காலப்பகுதியிலேயே தற்போதைய உலகமயமாதலுக்கான ஆரம்ப கருத்துருவாக்கம் உருவாகிவிட்டதெனலாம்.

ஆக, மார்சிய விஞ்ஞானத்தையும் மார்க்சிய ஆய்வுமுறையையும் ஏற்றுக்கொள்பவர்களுக்கு இந்த முதலாளித்துவ ஒழுங்கமைப்புத் தொடர்பானதும் அது தற்காலிகமாக நிலைகொள்ளும் கால எல்லை (Periodic limit) தொடர்பான புரிதலும் அவசியமாகிறது.

இந்தக் கால அளவென்பது தொடர்பான அறிதலும், முதலாளித்துவம் இக்காலப்பகுதியில் தன்னை நிலைனிறுத்திக் கொள்வதற்கான அக, புறக்காரணிகள் தொடர்பானதுமான ஆய்வென்பது அந்தக்காரணிகளைப் புரட்சிகர சக்திகள் கையாள்வதற்கும் அவற்றை மக்கள் போராட்ட அமைப்புகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எதிர்ப்புரட்சியை எதிர்கொள்வதற்கும் அவசியமாதாகவமைகிறது.

இன்று மூன்றாவதுலக நாடுகளெங்கும் காளான்கள் போல முளைவிட்டிருக்கும் அரசு சாரா அமைப்புக்களது பிரசன்னமென்பதும், மனித உரிமை பேசுகின்ற ஏகாதிபத்திய சார்பு சக்திகளும், ஏகாதிபத்தியங்களால் ஊக்கமளிக்கப்படும் விடுதலை இயக்கங்களும் இந்த முதலாளித்துவ அமைப்பு முறையின் புதிய ஒழுங்கமைப்பான உலகமயமாதலின் கால எல்லையை தமக்கேற்ற வகையில் மேலும் நீடிப்பதற்கான நிகழ்ச்சினிரலின் ஒரு பகுதியே.

இந்ந்திலையில் இந்தக் கால அளவு (Periodisation) தொடர்பானதும் முதலாளித்துவத்தின் புதிய ஒழுங்கமைப்பு, மார்க்சியத் திரிபுகள் தொடர்பாகவும் இனி வரும் தொடர்களில் எண்ணங்களைத் தொடரலாம்.

(தொடரும்…..)

Exit mobile version