Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஊடக மாபியா விஜய் தொலைக்காட்சியை லண்டனில் தொடங்கிவைத்த நடிகர் விக்ரம்

starvijaytvஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேவையை லண்டனில் தொடங்குவதற்காக விக்ரம் என்ற தென்னிந்திய திரப்பட நடிகர் 20.04.2014 – ஞாயிறு லண்டனுக்கு வந்தார். ரியாலிட்டி ஷோ, தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் என்று மக்களைச் சமூகம் பற்றிச் சிந்திக்கவிடாமல் களியாட்டங்களுக்குள்ளேயே கட்டிப்போட்டு வைத்திருக்கும் தொலைக்காட்சிகளில் ஸ்டார் விஜய் முதலிடம் வகிக்கிறது. அன்றாடச் செய்திகள் கூட இவர்கள் ஒளிபரப்புவதில்லை. மக்களை களியாட்ட நிகழ்ச்சிகளில் உணர்ச்சியூட்டி அந்த உணர்ச்சியை மூலதனமாக்குவதே இவர்களின் வியாபார யுக்தி.

விஜய் தொலைக்காட்சி என்று பரவலாக அறியப்பட்ட ஸ்டார் விஜய் ஒரு பல்தேசிய வியாபார நிறுவனம். இன்று இலங்கையில் சிங்கள பௌத்ததின் பெயரால் நிலங்களைச் சூறையாடும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் உலகம் முழுவதையும் சுரண்டி தமது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றன. உணவு,உடை,இருப்பிடம், நீர் போன்ற அடிப்படைத் தேவைகளிலிருந்து ஊடகங்கள் வரை அவர்களின் சூறையாடலுக்கு உட்படாத எதையும் காணமுடியாது. இந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் பிரதான உரிமையாளர் உலகின் மீடியா மாபியா என வர்ணிக்கப்படும் ரூபெட் மடோக் என்பவர்.

யாரிந்த ரூபெட் மடோக்?

இவர் தமிழரோ அல்லது இந்தியரோ அல்ல. உலகின் ஊடகத்துறையின் அழுகிய பகுதிகளைக் கையில் வைத்திருக்கும் ஊடகக் கொள்ளைக்காரன். பிரித்தானியாவில் ஆட்சி மாற்றதை ஏற்படுத்துவதற்குக் கூட ரூபெட் மடோக் பங்கு வகிக்கிறார். பெரும்பாலும் பாலியல் கலந்த ஊடகங்களை மக்களின் உணர்வுகளை மாற்றும் வகையில் உட்செலுத்துவதிலும், வன்முறையை மக்கள் மயப்படுத்துவதிலும் இவரது ஊடகங்கள் பெரும் பங்குவகின்றன.

2011 ஆம் ஆண்டு பிரபலமானவர்களின் தொலைபேசியை ஊடறுத்து சட்டவிரோதமாகத் தகவல்களைப் பெற்றுக்கொண்டமைக்காக மடோக் பிரித்தானிய அரசாலும் எப்.பி.ஐ இனாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ‘end the Murdoch mafia’ என்ற தலையங்கத்தில் பிரித்தானியாவில் பல அமைப்புக்கள் மடோக்கிற்கு எதிராகப் போராடங்கள் நடத்தின.

The Times, The Sunday Times and The Sun ஆகிய வலதுசாரி மற்றும் நிறவாதப் நாழிதழ்களை பிரித்தானியாவில் மடோக் நடத்தி வருகிறார்.

முன்னதாக விஜய் தொலைக்காட்சி விஜய் மல்லையாவிற்கு சொந்தமானதாகவிருந்தது. இந்தியாவின் மிகப்பெரும் சாராய வியாபாரியான விஜய் மல்லையா. இவரின் கிங்பிஷர் பியர் இந்தியா பியர் சந்தையில் 50 வீதத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய சாராய ஆலையை நடத்தி வருகின்ற விஜய் மல்லையா, வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டவில்லை. அவரது விமான நிறுவனமான கிங் பிஷரில் வேலை செய்த ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளமும் தரவில்லை. ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அவனுக்குச் சொந்தமான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை வைத்து குத்தாட்டமும், சூதாட்டமும் நடத்தினார்,

கிங் பிஷர் ஏர்லைன்சில் பணி புரியும் 7,000 ஊழியர்களுக்கு ஒரு வருடத்திற்கு மேலாகச் சம்பளம் வழங்காமல் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் ஏற்கனவே லாக்அவுட் அறிவித்திருந்தது. கிங் பிஷர் நிறுவனத்துக்கு வங்கிகள் கடனாகக் கொடுத்த ரூ 7,500 கோடியையும் ஆட்டையைப் போட்டிருக்கிறார் விஜய் மல்லையா.
2001 ஆம் ஆண்டிலிருந்தே அமெரிக்காவில் வசிக்கும் அவுஸ்திரேலியரான ரூபெட் மடோக் விஜய் இன் நிறுவனம் விஜய் தொலைக்காட்சியை நடத்தி வருகிறது.

ஜோடி நம்பர் 1, நியா நானா, எயர்ரெல் சுப்பர் சிங்கர், அது இது எது, நீஙகளும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற உணர்ச்சிச் சுரண்டல் நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சி நடத்தி வருகிறது. தமிழ் நாட்டு மக்களின் வளங்களை மட்டுமல்ல உணர்ச்சியைக்கூடச் சுரண்டி அதனை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லும் விஜய் தொலைக்காட்சி, தமிழ் நாட்டுக்காரர்களுக்கு எதையும் விட்டுவைக்கவில்லை. கொச்சை ஆங்கிலத்திலும், கொச்சைத் தமிழிலும், இந்த இரண்டு மொழிகளையும் கொலைசெய்யும் நிகழ்ச்சிகளை நடத்தும் விஜய் இப்போது புலம்பெயர் தமிழர்களைச் சுரண்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊடக மாபியாவான விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கும் ஒவ்வொரு சல்லிக்காசும் ஈழத்தில் அவலத்தில் வாழும் மக்களுக்குச் சென்றடையவில்லை. அமெரிக்காவில் குடிகொண்டிருக்கும் பல்தேசிய மாபியாவின் வங்கிக் கணக்குகளை நிரப்புகிறது. பின்னர் அது ராஜபக்ச போன்ற ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கும் சேவை செய்யும்.

கலை கலாச்சாரம் என்பது விஜய் தொலைக்காட்சி போன்ற ஊடக மாபியாக்கள் நடத்தும் பாலியல் சுரண்டலோ, வன்முறையோ அல்ல. அது மனிதாபினாமத்தையும் மக்கள் பற்றையும் போதிக்க வேண்டும். சமூக உணர்வைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். ஈழத்துக் கலைஞர்கள் வாய்ப்புகளற்று வறுமையின் பிடியில் வாடும் போது, பல்தேசிய நிறுவனங்களுக்குப் பணத்தை வாரியிறைப்பது அவமானகரமானது, அதுவும் தேசியத்தின் பெயரால் நடைபெறுவது அருவருக்கத் தக்கது.
புலம்பெயர் சமூகதின் பெற்றோர் தமது குழந்தைகளுக்கு பணவெறியையும், பாலியல் வக்கிரத்தையும் தமிழ்க் கலாச்சாரம் எனப் போதிக்கப் போகிறார்களா? மனித் நேயமும் சமூகப்பற்றுமுடைய மனிதர்களாக அதற்கான கலாச்சாரத்தை நோக்கி தமது சந்ததியை இட்டுச்செல்லப் போகிறார்களா?

லண்டனில் ஸ்டார் விஜய் நைட் : தேச விரோதிகளின் பண்பாட்டு அழிப்பு : சுதர்சன்

Exit mobile version