Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இலங்கை விடயம் பற்றி ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆராய்வு.

இலங்கையின் மனிதநேய நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

“மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் சிக்குண்டிருக்கும் மக்கள் குறித்து பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் கவலையடைந்துள்ளோம்” என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கான மெக்சிக்கோத் தூதுவர் க்லூட் ஹெலர் கூறியுள்ளார்.

இலங்கை விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்றை நடத்திக் கலந்துரையாடியிருந்தாக அவர் கூறினார். இந்தச் சந்திப்பில் பொதுமக்களைப் பலவந்தமாகத் தடுத்துவைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கை கண்டிக்கப்பட்டதாக மெக்சிக்கோத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை விடயம் தொடர்பாக பாதுகாப்புச் சபையில் உத்தியோகபூர்வமாகக் கலந்துரையாடும் தீர்மானத்துக்கு உறுப்பு நாடுகளான சீனா, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அதேநேரம், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் அலுவலகத் தலைமை அதிகாரி விஜய் நம்பியாரின் இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையை பாதுகாப்புச் சபைக்கான பிரித்தானியத் தூதுவர் ஜோன் சவேர்ஸ் சுருக்கமாக விளக்கமளித்துள்ளார்.

“இலங்கையின் மனிதநேய நிலைமைகள் ஆபத்தாகவுள்ளன என்று விஜய் நம்பியார் விபரத்துள்ளார்” என சவேர்ஸ் பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளார்.

மோதல் நடைபெறும் வலயத்திலுள்ள மக்கள் அனைவரும் ஐ.நா.வின் உதவியுடன் வெளியேற விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்ற விடயத்தில் அனைத்து உறுப்பு நாடுகளும் இணங்கியிருப்பதாக பிரித்தானியத் தூதுவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு ஐ.நா. முகவர்கள் செல்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் எனவும், இதன்மூலம் இடம்பெயர்ந்த மக்களை சரியான முறையில் பராமரிக்க முடியும் எனவும் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் இணக்கம் கண்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் முழு உதவி வழங்கவில்லை: அமெரிக்கா

இது இவ்விதமிருக்க விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தப்பித்துவரும் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் பூரண உதவிகளைச் செய்யவில்லையென ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சுசன் ரைஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் சர்வதேசச் சட்டங்களை மதித்து நடக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

“பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறிய மக்கள் மீது இரண்டு தரப்பும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது என்பது சர்வதேசச் சட்டத்தை இருதரப்பும் மதிக்கவில்லையென்பதற்கான ஒரு உதாரணமாக அமைந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கையின் மோதல்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதற்கோ அல்லது பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பிவரும் மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் பகுதிகளுக்கோ ஐ.நா. முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் செல்வதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லையென ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான பிரதித் தலைவர் கத்தரின் ப்ரக் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களிலிருக்கும் ஐ.நா. பணியாளர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என ப்ரக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத் தூதுவர் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹகார, மோதல் நடைபெறும் பகுதிகளுக்கும், சோதனை நடைபெறும் பகுதிகளுக்கும் ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

Exit mobile version