Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இசைப்பிரவாகம் மெல்லிசைமன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் : T.சௌந்தர்

MSVதமிழ் இசைத்தொன்ம ராகங்களில் ஆழ்ந்து மெல்லிசையின் உன்னதங்களை நமக்குக் காட்டிய முன்னோடி இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்து விட்டார்.

1940 களில் குடும்ப வறுமையால் சினிமாவில் நுழைந்து , அநதக் கால இசையமைப்பாளர்களின் அரவணைப்பை பெற்று, இசை உதவியாளராக உயர்வு பெற வெறும் அனுதாபம் மட்டும் காரணமாக இருக்கவில்லை. இயல்பான ஆற்றலும் , இசை மீதான தீராத காதலுடன் தான் அவரது இசை வாழ்வு தொடங்கியது.

“புது வசந்தமாமே வாழ்வில்
இனிதாய் சுகமே காண்போமே ” என்ற பாடலுக்கு மெட்டமைக்கப் போராடிக்கொண்டிருந்த இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையாநாயுடுவுக்கு இன்று நாம் கேட்கும் அந்தப்பாடலின் மெட்டுக்கு இதமாய் மெட்டமைத்து காட்டி பாரட்டுப்பெற்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.திருச்சி லோகநாதன் பாடிய அந்தப் புகழ் பெற்ற பாடலே மெல்லிசை மன்னரின் முதல் பாடல்.

அன்றைய புகழ் பெற்ற அத்தனை இசையமைப்பாளர்களின் அறிமுகமும் ,அவர்களது இசைக்கு உதவியாளனாக பயணிக்க வைத்தாலும் இசைமேதை சி.ஆர்.சுப்பராமன் என்ற இசையமைப்பாளரின் உதவியாளனாக மட்டுமல்ல பிரதான ஹார்மோனியக் கலைஞனாக உயர்ந்தமை அவரது இசை வாழ்வுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது.சி ஆர் சுப்பராமன் மரணத்தால் இடையில் நின்று போன அவரது படங்களான தேவதாஸ்,சண்டிராணி போன்ற படங்களை மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து முடித்தார்கள்.

எனினும் தனியே இசையமைக்கும் ஆர்வம் நடிகர் எம் .ஜி ஆர் நடித்த ஜெனோவா [1953] என்ற திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது.அந்தக்காலத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களான எம் .எஸ். ஞாமணி , டி.ஏ.கல்யாணம் போன்ற இசையமைப்பாளர்களும் இணைந்து இசையமைத்தார்கள். அந்தப்படத்தில் இடம் பெற்ற பாடல் பெரிய வெற்றியைத் தரமுடியவில்லை எனினும் ” பரலோக மாத பரிதாபம் இல்லை “[பி .லீலா ] , ” நானறிவேனே உங்கள் ஜாலம் ” [ஏ .எம் .ராஜா +பி. லீலா ], “ஆசையே அலை மோதுதே ” [ஏ .எம் .ராஜா +பி. லீலா ], போன்ற பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

பின்னாளில் இரட்டையர்களாக என் .எஸ் .கிருஷ்ணன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட
மெல்லிசைமன்னர்கள் என்ற இணை 1950 களின் இறுதியிலும் 1960 பத்களிலும் உச்சம் பெறத் தொடங்கியது.

மெல்லிசையில் உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருந்த ஹிந்தி திரைப்பட இசை போல தமிழ் திரையிசையையும் மெல்லிசைப்பக்கம் திருப்பியவர்களில் முதன்மையானவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

சம்பிரதாயமான ராகங்களிலேயே மரபு மாறாத இனிமையும் புதுமையும் மிக்க பாடல்களைத் தந்த அவர்கள் ,தமது காலத்தின் போக்காக அமைந்த உலக வெகுஜன இசையின் [பொப் இசையின் ] போக்குகளை எல்லாம் தமிழ் சினிமாவின் காட்சிக்கு ஏற்பசையை இசை தந்தார்கள்..

கர்னாடக இசை ராகங்களுடன் , ஹிந்துஸ்தானிய சங்கீத ராகங்களையும் ,ஹிந்துச்தானிய வாத்தியக்கருவிகளையும் இணைத்து பிரமிக்க வைக்கும் பாடல்களை அநாயாசமாகத் தந்து நம்மாலும் ஹிந்திப் பாடல்களுக்கு நிகராக இசையமைக்க முடியும் என நிரூபித்தார்கள்.

சாக்ஸபோன் , கிடார் ,ஹார்மோனிகா, ஒபோ , ட்ரம்பெட் ,கிளாரினெட்,பொன்கொஸ் போன்ற மேலைத்தேய , லத்தீன் அமெரிக்க இசைக்கருவிகளை இசை மேதை சி.ராமசந்திரா ஹிந்தி திரைப்படங்களில் பயன்படுத்தி புதுமை செய்தது போல ,அவற்றை தமிழ் திரை இசையில் புகுத்தி வெற்றிகண்டவர் மெல்லிசைமன்னர்கள்.

“உணர்ச்சியில்லாமல் நல்ல இசையை வழங்குதல் சாத்தியமற்றது..” என்பார் வயலின் இசை மேதை யகூடி மெனுகின் [Yehudi Menuhhin ] கூற்றுக்கு இணங்க உணர்வுகளை கிளறிவிடும் அற்புத கானங்களை தன்ன்னிகரற்று தந்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்பது இசைரசிகர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளும் கருத்தாகும்.

அவர்கள் இணைந்து இசையமைத்த பந்தபாசம் ,பாலும் பழமும் , பாகப்பிரிவினை ,பாசமலர் போன்ற படங்கள் மட்டுமல்ல பல்வேறு படங்களிலும் அவர்களின் இசை சோடை போனதில்லை.சாகாவரம் பெற்ற பாடல்களின் சொந்தக்கார்ரர்கள் மெல்லிசைமன்னர்கள்.

தமில்செவ்வியல் இசையில் பாண்டித்தியம் பெற்ற ராமமூர்த்தியும் , உலக இசையின் மீதும் பேரரவம் கொண்ட தேடல்மிக்க விஸ்வநாதனின் கூட்டிணைவு தந்த வெற்றிக்கனிகளை தமிழ் மக்கள் பரிபூரணமாக அனுபவித்தனர்.

1950 களில் வெளிவந்த ” வான் மீதிலே இன்பத் தேன் மாரி பெய்யுதே” சண்டிராணி ], தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்[பெற்ற மகனை விற்ற அன்னை ] , கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே , துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் என்ன பேசுவது[ , நான் அன்றி யார் வருவார் [ மாலையிட்ட மங்கை ] போன்ற சில பாடல்களும் ,பின் 1960 களில் வெளிவந்த பாடல்களை விபரிப்பது அவசியமற்றது.இருந்தாலும் சில பாடல்களை சொல்லியே ஆக வேண்டும்

மலர்ந்தும் மலரத பாதி மலர் போல [பாசமலர் ]
மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் [ பாக்கியலக்சுமி ]
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் [ பாலும் பழமும் ]
ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை [ பணத்தோட்டம் ]
கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே [ கர்ணன் ]

இது போன்ற பாடல்களை பதத்திற்கு கூறி செல்லலாம்.எங்கெல்லாம் நல்லிசை கிடைக்குமோ அங்கெல்லாம் தேனிக்கள் போல சேகரித்து படைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

1965 மனக்கசப்பால் இரு மேதைகளும் பிரிந்தமை தமிழ் இசை ரசிகர்களுக்கு பேரிழப்பானதாகும்.தனித்து இசையமைத்தபின்னரும் வெற்றிக்கொடி நாட்டிக் காண்பித்தவர் விஸ்வநாதன்.

கனதிமிக்க ராகங்களைக் கையாண்டு வெற்றிகண்டு பாமரர்களை மட்டுமல்ல இசை அறிஞர்களையும் வியக்க வைத்தவர் விஸ்வநாதன்.

எத்தனை எத்தனைஇனிய மெட்டுக்கள் , இடையிசைகள் , எத்தனை எத்தனை வாத்தியங்கள் ,அதில் எத்தனை ,எத்தனை வியக்க வைக்கும் பிரயோகங்கள்!

பாட்டு என்றால் பாடுகிற படி இருக்க வேண்டும் என்பதின் இலக்கணமாக அமைந்த வகையில் பாட்டு வரிகளுக்கு உயிரோட்டமான இசையை தந்த நல்லிசையின் முன்னோடி விஸ்வநாதன்.

தனியே பிரிந்து இசையமைத்த சாகாவரமிக்க பாடல்களுக்கு சில உதாரணங்கள்..

பொன்னெழில் பூத்தது புது வானில் [கலங்கரை விளக்கம் ] இந்தப்பாடலின் இடையிசைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
நிலவே என்னிடம் நெருங்காதே [ ராமு [
மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும் [ கொடிமலர் ]
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா [ உயர்ந்த மனிதன் ]
பூமாலையில் ஓர் மல்லிகை [ ஊட்டி வரை உறவு ]
முத்துக்களோ கண்கள் [ நெஞ்சிருக்கும் வரை ]

1960 கள் மட்டுமல்ல 1970 களில் எத்தனை ,எத்தனை இனிமையான பாடல்கள்,,அப்பப்பா ,,!

இயற்க்கை என்னும் இளைய கன்னி [ சாந்தி நிலையம் ]
நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும் [ நிலவே நீ சாட்சி ]
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் [ராமன் எத்தனை ராமனடி ]
பொட்டு வைத்த முகமோ
வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் [ மூற்று தெய்வங்கள் ]
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் [தேனும் பாலும் ]

1970 களின் மத்தியில்

தென்றலுக்கு என்றும் வயது பதினாரன்றோ [பயணம்]
அதிசயராகம் ஆனந்த ராகம் [ அபூர்வ ராகங்கள் ]
வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு [ வாழ்வு என் பக்கம் ]
ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் [ அபூர்வ ராகங்கள் ]

மெல்லிசைமன்னரின் தனித்துவம் வாய்ந்த சிறப்பு என நான் கருதுவது அவரது தனித்துவமிக்க இசை ஆளுமையை பாடக,பாடகிகள் மீது பதிய வைப்பதே!அவரது ஆளுமை பாடும் பாடகர்களின் குரலிலும் துல்லியமாக துருத்தி நிற்கும் வண்ணம் பாதிப்பை ஏற்படுத்தி விடுவதை நாம் கேட்கலாம்.

எந்த பெரிய பாடகர் பாடும் பாடலிலும் விஸ்வநாதனின் இசை ஆன்மா வெளிப்பட்டு நிற்கும்.

திரைபாடங்களுக்கு மட்டுமல்ல ,பக்திப்பாடல்கள் , தனிப்பாட்டல்கள் போன்றவற்றிற்கும் இசையமைத்தவர் மெல்லிசைமன்னர்.வாத்திய இசையாக அவர் வடித்த Thrilling Thematic Tunes என்கிற இசை வடிவம் இசைஞானி போன்றோர் பின்னாளில் செய்த வாத்திய இசை வடிவங்க்ளுக்கு ஆதர்சமாக இருந்தது எனலாம். அவர் இசையமைத்த பக்திப்பாடல்களில் சில ..

புல்லாங் குழல் கொடுத்த மூங்கில்களே
ஆயர் பாடி மாளிகையில்

இலங்கை வானொலியில் ” பொங்கும் பூம்புனல் ” என்ற நிகழ்ச்சியின் முன்னிசை மெல்லிசை மன்னரின் Thrilling Thematic Tunes இல் வருகின்ற அழகிய இசைத்துணுக்காகும்.பிரமிக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்ட புல்லாங்குழல் இசையை நாம் அதில் கேட்டு மகிழ்ந்தோம்.

மெல்லிசையின் வற்றாத ஊற்றாக பொங்கி பிரவாகித்த மெல்லிசைமன்னரின் கற்பனை வளம் விரிந்து சென்றது.தன்னெழுச்சியாக மெட்டுக்களை அள்ளி வீசுவதும் , சளைக்காமல் புதிய புதிய சந்தங்களை அள்ளி வீசுவதிலும் அவருக்கு அவரே நிகராக இருந்தார்.

அவருடன் இணைபிரியா சகபாடியாக இருந்த கவிஞர் கண்ணதாசன் மெல்லிசைமன்னர் பற்றி இப்படி நினைவு கொள்கிறார் ..

” அவனுக்கு இசையை தவிர வேறு ஒன்றும் தெரியாது.அவன் அரசியல், உலக நடப்புக்கள் பற்றி கேட்டால் சிரிப்பாக இருக்கும். ஆனால் இசை என்று வந்தால் , உலகெங்கிலும் என்னென்ன இசை உண்டு என்பது அவனுக்கு தெரியும். Light Music இல் அவன் INTERNATIONAL .”

அவர் இசையமைத்த அற்புத பாடல்களை எப்படி சீரழித்து விட்டார்கள் என்பதை இப்போது காட்சிகளாகக் காண சகிக்க முடியவில்லை.பாடல்களின் சிறப்புக்களால் தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் நடிகர்கள் மட்டுமே.

அவர் படைத்த அற்புத கானங்களால் காண சகிக்காத காட்சிகள் உலாவிக்கொண்டிருக்கின்றன.சகிக்க முடியாத வானொலிகள் , தொலைக்காட்சிகள் உயிர் பெற்றுக்கொடிருக்கின்றன.

இப்பட்டிப்பட்ட ஓர் அபூர்வ இசைமேதையை தகுந்த முறையில் கௌரவிக்காத ஒரு நாட்டில் ,இசை வீணர்களுக்கு டாக்டர் பட்டங்களும்,கௌரவங்களும் கொடுத்து விருதுகளை கேவலப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

“நீராரும் கடலுடுத்த நிலமடந்தை ” தமிழ் நாட்டின் அடையாளப்பாடலை பண்டைத் தமிழர் பொற்றி வளர்த்த முல்லைப்பண்ணான இன்றைய மோகனத்தில் நம் மரபிசையின் மேன்மையை நெகிழ தந்த இசை மேதையை ,வீணாய் போன இந்த சகட்டுமேனி விருதுகள் கொடுத்து கேவலபடுத்த முடியாது.

அது போன்ற விருதுகளைப் பெறுவது நல்லிசை மேதைகளுக்கு பெருத்த அவமானமானதாகும் .

பிறப்பால் மலையாளியாகப் பிறந்து தமிழ் திரை இசையை தன ஆற்றலாலும் ,கடின உழைப்பாலும் வளர்த்த இசை மாமேதை எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் பற்றி இசைஞானி சொல்வது நமக்கும் சாலப்பொருந்துகிறது.

” அவரது இசை என் நாடி , ஊறிக்கிடக்கிறது ” !

அவருடைய பாடல்கள் நல்ல இசை ரசிகர்களின் நாடி ,நரம்புகளிலெல்லாம் ஊறித்தான் கிடக்கிறது.

பாசமலர் படத்தில் அவர் பாடும் ” அன்பு மலர் ஆசை மலர் ” தமிழர்கள் காதுகளில் என்றென்றும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.


Exit mobile version