
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதைக் கண்டித்து தீக்குளித்து இறந்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜின் உடல் அவர் தீக்குளித்த இடத்திலேயே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயராஜ் நேற்று முன்தினம் தீக்குளி்ததார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்றும், உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முதல் தகவல் அறிக்கையின் நகலை தங்களிடம் காண்பிக்க வேண்டும், கைப்பற்றப்பட்ட விஜயராஜ் எழுதிய கடிதத்தை ஒப்படைக்க வேண்டும், அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜபக்சே மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், மரண வாக்குமூலத்தை தங்களிடம் தெரிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உடலை வாங்க முடியாது என்று கூறினர்.
பின்னர் போலீசார் முதல் தகவல் அறிக்கை நகலைக் காட்டியதுடன், விஜயராஜ் எழுதிய கடிதம், கொடுத்த வாக்குமூலம் ஆகியவற்றை கொடுத்தனர். ஆனால் பிரதமர் மற்றும் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்வது எளிதல்ல என்பதை விளக்கினர். அதன் பிறகே அவரது உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளித்தனர்.
உடனே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆட்டோ டிரைவர் விஜயராஜின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் அவர் தீக்குளித்த சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.