Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வின்டோஸ் 10 : மைக்ரோசொப்டின் உளவுபார்க்கும் சதி!

windows10-spies-on-youஜூலை மாதம் 29ம் திகதியன்று உலகத்தின் பெருந்தொகையான மக்கள் ஒரே செயலைச் செய்ய ஆரம்பித்தனர். மைக்ரோ சொப்ட் நிறுவனம் வெளியிட்ட கணனியை இயக்கும் மென்பொருளான வின்டொஸ் 10 ஐ 14 மில்லியன் பாவனையாளர்கள் பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தனர். இவர்களிலும் அறுதிப் பெரும்பான்மையானவர்களுக்கு தாம் மைக்ரோசொப்டின் சதி முயற்சி ஒன்றில் ஈடுபடுகிறோம் என்று தெரிந்திருக்கவில்லை.

விண்டோஸ் 10 ஐ தரவிறக்கம் செய்வதற்கு முன்பதாக இறுதிப் பயனாளர் உடன்படிக்கை (EULA) ஒன்றை ஏற்றுக்கொண்டாக வேண்டும். 45 பங்கங்கள் கொண்ட அந்த நீண்ட உடன்படிக்கை 12 ஆயிரம் சொற்களைக் கொண்டது. இவ்வாறான உடன்படிக்கைகளை எவரும் வாசிப்பதில்லை. உடனடியாகவே ஏற்றுக்கொள்கிறோம் என்று அழுத்திவிட்டு தொடர்வார்கள். இம் முறை விண்டோஸ் 10 இன் உடன்படிக்கையில் மைக்ரோ சொப்ட் நிறுவனம் பாவனையாளர்களை உளவு பார்ப்பதற்கு அனுமதி வழங்கும் வரிகளும் இணைக்கப்பட்டிருந்தன.

வின்டோஸ் 10 ஐப் பயன்படுத்துகின்ற ஒவ்வொருவரது நடவடிக்கைகளையும், அவர்கள் பயன்படுத்தும் இணையங்கள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் போன்ற எதை வேண்டுமானாலும் மைக்ரோ சொப்ட் உளவு பார்க்கலாம். அதற்குரிய அனுமதி ஆரம்பத்திலேயே மைக்ரோ சொப்டிற்கு வழங்கப்பட்டுவிடுகிறது. அது மட்டுமல்ல எந்த இடத்திலிருந்து கணனியைப் பயன்படுத்துகிறோம், யாரோடு அதிகமாகத் தொடர்பு கொள்கிறோம், எதனை அதிகமாக விரும்புகிறோம் என்பன போன்ற நுண்ணிய தகவல்களை மைக்ரோ சொப்ட் சேகரிக்கும் வகையில் உளவு(spyware) மென்பொருள் வின்டோசுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசு அதன் சொந்தப் பிரசைகள் உட்பட உலகம் முழுவதுமுள்ள அரசுகளைக் கூட எப்படி உளவு பார்க்கிறது என்ற உள்ளகத் தகவல்களை ஸ்னோடென் போன்ற இளைஞர்கள் வெளியிட்டனர்.

இன்று உலகம் முழுவதையும் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் நோக்கத்தின் மற்றொரு பகுதியே விண்டோஸ் ஊடாக வீட்டிற்குள் வந்து குந்தியிருக்கிறது.
‘நான் இப்போது பிரயாணம் செய்துகொண்டிருக்கிறேன் பின்னதாக அழைக்கிறேன்’ என விண்டோஸ் தொலைபேசி ஊடகவோ கணனி ஊடாகவோ உங்கள் நண்பருக்குப் பொய் சொல்லலாம்; மைக்ரோசொப்ட் பெரியண்ணனுக்கு மட்டும் உண்மை சொல்லியே ஆகவேண்டும்.

கணனிகளை இயக்குவதற்கு லினுக்ஸ் போன்ற கட்டற்ற மென்பொருட்களைத் தரவிறக்கம் செய்து கொள்வதன் ஊடாக இவ்வகையான உளவு நிறுவனங்களிடமிருந்து ஓரளவு தப்பிக்கொள்ளலாம்.

இனிமேல் மைக்ரோ சொப்டைப் பிடித்துத்தான் ராஜபக்சவைத் தண்டிக்க வேண்டும் என்று எண்ணத்தில், மைக்ரோ சொப்டிற்கான தமிழர்கள் என்ற அமைப்பினை புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் உருவாக்கினாலும் வியப்படைவதற்கில்லை.

Exit mobile version