Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்தவர்களை வேட்டையாடும் மோடியின் பினாமி அரசபடைகள்!

பார்ப்பனர்களைத் தவிர்த்து மதுரையை இளங்கோவடிகள் பற்றவைத்தது போன்றே இன்று தமிழ் நாட்டைப் பற்றவைத்துக்கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். மோடியின் அரசு. தமிழ் நாட்டில் சட்டத்திற்கு உட்பட்ட ஜனநாயக அமைப்புக்களைத் தடைசெய்து இந்துத்துவ சர்வாதிகார ஆட்சியைத் திணிப்பதற்கும், தடையின்றி பல்தேசிய நிறுவனங்களின் கொள்ளையை முடுக்கிவிடுவதற்கும் மோடி அரசு முயற்சிக்கிறது. இந்திய மக்களுக்கு மட்டுமன்றி உலக மக்களுக்கும் இந்துத்துவத்தினதும் அதனால் ஆட்கொள்ளப்பட்ட இந்தியாவினதும் கோர முகத்தை அறிமுகப்படுத்திய பெருமை மோடி அரசையே சாரும்.

தனது பினாமி அரசைப் பயன்படுத்தி வேதாந்தா நிறுவனத்திற்காக தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மோடி அரசு, இன்று எஞ்சியிருக்கும் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையும் அழித்து தமிழ் நாட்டைக் காவி மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தமிழ் நாட்டில் தலைமறைவு இயக்கங்களே சாத்தியம் என்ற நிலைக்கு தமிழ் நாட்டு மக்களை உந்துகின்ற மத அடிப்படைவாத இந்திய அரசு இனவாதிகளையும், சினிமா நடிகர்களையும் தமது திட்டத்தை நடைமுறைப்படுத்தப் பயன்படுத்திவருகிறது.

சினிமா நடிகர்களான கமல்ஹாசன், ரஜனிகாந் போன்ற இந்துத்துவ முகவர்களையும், சீமான் போன்ற அருவருக்கத்தக்க இனவாதிகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்படுத்தும் காவிக் கும்பல்கள் தமிழ் நாட்டை எரியூட்டத் தமிழக அரசின் காவல்படையைப் பயன்படுத்தி வருகின்றன.

தூத்துக்குடியில் தனது நண்பர்களுக்காக மோடி அரசு நடத்திய படுகொலைகளைத் தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ் நாட்டில் மக்கள் வெகுசனப் போராட்டங்களையும் கலை பண்பாட்டு நிகழ்வுகளையும் நடத்திவரும் மக்கள் அதிகாரம் என்ற சட்டத்திற்கு உட்பட்ட அமைப்பைச் சார்ந்தவர்களைத் தமிழகம் முழுவதும் காவல்துறை கைது செய்துவருகிறது.

கைதானவர்களைத் தூத்துக்குடிக்குக் கொண்டு செல்லும் காவல்படை அங்கு சாட்சியின்றி சிறைப்படுத்துவருகிறது.

தூத்துக்குடியில் “சமூகவிரோதிகளே” போராட்டம் நடத்தினார்கள் என நிறுவும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்தத் திட்டமிட்ட நாடகத்தின் பின்னர் கைதுகளைத் தீவிரப்படுத்த முயற்சிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. .

இது தொடர்பாக உலகம் முழுவதுமுள்ள மனித உரிமை, மற்றும் ஜனநாயக அமைப்புக்களிடமும் ஆர்வலர்களால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version