Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தேசிய இன ஒடுக்குமுறையின் குறியீடான சுதந்திர தின மேடையில் சம்பந்தன்:பறை -விடுதலைக்கான குரல்

sampanthanஇலங்கையின் 67 வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்டது. வன்னி இனவழிப்பின் கறைகள் கழுவப்படாத மண்ணில், காலனியாதிக்கம் இலங்கையைத் தமது தரகுகளிடம் ஒப்படைத்த நாளை சுதந்திரதினம் என்று அழைக்கிறார்கள். அதே காலனி ஆதிக்க நாடுகள் இலங்கையை மறு காலனியாக்கும் நோக்குடன் சிங்கள பௌத்த அதிகார மையத்தால் பேரினவாதத்தைத் தூண்டி சிறுபான்மைத் தேசிய இனங்களை அழித்தன.

பல தசாப்த போராட்டங்களின் பின்னர் வடக்குக் கிழக்கு தமிழ்ப் பேசும் மக்கள் பிரிந்து செல்வதற்கான உரிமை கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தின் நியாயத்தை முள்ளிவாய்க்காலோடு குழிதோண்டிப் புதைத்த அதே அதிகாரவர்க்கமும், அதே முகங்களும் இன்று சுதந்திரதினத்தைக் கொண்டாடுகின்றன.

அழித்தவர்களின் அரங்கில் அமைதியாக அமர்ந்து சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறார் சம்பந்தன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையை முன்வைத்தே ஆட்சிக்கு வந்தார். தேசியத்தின் பேரால் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் மக்கள் போராடும் போதெல்லாம் வீடுகளுக்குள் முடங்கிக்கொண்ட சம்பந்தரும் பரிவரங்களும் சுதந்திரதின மேடையில் குந்தியிருந்து ‘தேசியத்தை’ பாடையில் அனுப்பியுள்ளனர்.

தேசிய இன ஒடுக்குமுறையே இலங்கையின் பிரதான எரியும் பிரச்சனை. தேசிய இனங்களுக்கு சுய நிர்ணைய உரிமை வழங்கப்பட்டால் மட்டுமே இலங்கையில் உண்மையான ஜனநாயகம் கிட்டும்.

இந்த நிலையில் தேசியத்தின் பேரால் ஒடுக்குமுறையாளர்களின் மேடையில் ஒடுக்குமுறையின் குறியீடான சுதந்திரதினத்தைக் குதூகலமாகக் கொண்டாடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது போராட்டத்தின் சாபக்கேடு.

அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் முழங்கும் எமது பறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காட்டிக்கொடுப்பை வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரிப்பதும், இலங்கைப் பாராளுமன்ற ஜனநாயகத்தை நிராகரிப்பதும், மக்களை அணிதிரட்டிப் போராடுவதும் இன்றைய ஜனநாயகக் கடமை என்ற செய்தியை மக்கள் உள்வாங்க்கிக் கொள்வார்கள்.

-பறை -விடுதலைக்கான குரல்

Exit mobile version