Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ் நாட்டின் ஜனவரிப் புரட்சி: தமிழக அரசின் சூழ்ச்சிக்கு அடிபணிய மறுக்கும் மக்கள்

சென்னை மரீனா கடற்கரையின் அலைகளின் ஆர்பரிப்பையும், பல்தேசிய பண வெறி சுற்றாடலை அழித்ததனால் தோற்றுவிக்கப்பட்ட அசாதாரண குளிரையும் பொருட்படுத்தாமல் மக்களும் இளைஞர்களும் தங்கள் உரிமைக்காகா உறுதியுடன் போராடுகிறார்கள். அங்கு மதவாதிகள் கிடையாது. இனவாதம் பேசப்படுவதில்லை. உலகின் முன்னேறிய மக்கள் பிரிவு ஒன்றின் நிதானமாக ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டம் வட இந்தியர்களுக்கு மட்டுமல்ல உலக மக்களுக்கும் நாகரீகத்தைக் கற்பிக்கிறது. இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என மேற்கின் தன்னார்வ நிறுவனங்கள் கூச்சல் போட்டன. உலகிலேயே தமிழ் நாட்டில் தான் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உண்டு தமிழ் நாட்டின் என ஜனவரிப் புரட்சி உலகத்திற்குக் கூறுகிறது. அவர்கள் நிதானமாகப் போராடுகிறார்கள் என்றால் அடங்கிப் போகிறவர்கள் இல்லை என்பதை உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்கள். நுறுகளாக இருந்த மக்கள் வெள்ளம் ஆயிரங்களாகின, ஆயிரங்கள் லட்சங்களாகின தமிழ் நாடு அரசு தற்காலிக சமரசத்திற்கு அழைப்புவிடுத்த பின்னர் மக்கள் வெள்ளம் பல லட்சங்களாகின.
அவசர சட்டம் கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்தும் அவர்கள் அதை நிராகரித்துவிட்டனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிரந்தர சட்டம் இயற்றும் வரை நாங்கள் போராட்டத்தை கை விட மாட்டோம் என அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்களும் இளைஞர்களும் சமரசத்திற்குத் தயாரில்லை.
தமிழ் நாட்டில் ஹிந்தி திணிப்பிற்கு எதிராகப் போராட்டம் இதே உத்வேகத்துடன் நடத்தப்பட்டது. ஆனால் அங்கு ஒரு ஒழுங்கமைப்பட்ட தலைமை இருந்தது. மத்திய அரசிற்கும், அதன் உள்ளூர் குரலாக ஒலிக்கும் தமிழக அரசிற்கும் எதிராக நடத்தப்படும் வரலாற்றில் பதியப்பட வேண்டிய இப் போராட்டத்தின் பின்னணியில் யாரும் இல்லை. தன்னெழுச்சியான போராட்டம்! ஆயினும், தமிழக அரசு தற்காலிக சமரத்திற்கு வந்த சில மணி நேரங்களுக்குள், அரசின் சூழ்ச்சிக்கு அடிபணிய மாட்டோம் என மதுரையிலும், மரீனாவிலும் ஒலித்த குரல் தமிழகம் முழுவடும் ஒலித்தது.
அது சாத்தியமானது என்பதை உலகம் இன்னும் பல வருடங்களுக்குப் பின்னரும் பேசிக்கொள்ளும்.
மோடியின் பார்பனீய பெருந்தேசிய அதிகாரவர்க்கத்திற்கு எதிராக மட்டுமன்றி, பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு எதிராகவும், ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும் சுலோகங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் 2011 ஆம் ஆண்டில் ஆரம்பித்து பல மாதங்கள் நடைபெற்ற போராட்டத்தை போராட்டக்காரர்களுக்குத் தெரியாமலேயே அமெரிக்காவின் முகவர் அமைப்பான ஒட்போர் கையகப்படுத்தி போராட்டத்தை அழித்ததை இளைஞர்களும் மக்களும் பார்த்திருக்கிறார்கள். ஆக, அமெரிக்க அரசின் பொருளாதார மற்றும் கலாச்சார ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், இளைஞர்களும் போராடுகிறார்கள்.
இது ஜல்லிக்கட்டுகான போராட்டமாக மட்டும் சில ஊடகங்கள் உருவகப்படுத்தினாலும், மக்கள் டெல்லியின் பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்கிறார்கள். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகக் குரல்கொடுக்கிறார்கள். பெப்சி கொக்காகோலா போன்ற பானங்களைத் தடை செய்ய வேண்டும் என்கிறார்கள். பிட்டா என்ற தன்னார்வ அமைப்பை மட்டுமல்ல அது போன்ற அமைப்புக்களை இயக்கும் பல் தேசிய வர்த்தக நிறுவனங்களையும் தமிழ் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதே தன்னெழுச்சிகப் பேசும் மாணவர்களின் நோக்கமாகவுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்:

NGO களால் கடத்தப்பட்ட வால் ஸ்டிரீட் போராட்டம் – ஓராண்டு நிறைவு-கற்றுக்கொள்ளல் : சபா நாவலன்
Exit mobile version