Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கோத்தாபயவின் சர்வதேசக் கொலைப்படைக்கு இலங்கை அரசு பச்சைக்கொடி

அவன் கார்ட் மரிடைம் இன் தலைவர் நிசங்க சேனாதிபதியுடன் கோத்தாபய ராஜபக்ச
அவன் கார்ட் மரிடைம் இன் தலைவர் நிசங்க சேனாதிபதியுடன் கோத்தாபய ராஜபக்ச

ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்திற்குப் பின்னதாக ஏகாதிபத்திய நாடுகள் நியமித்த மைத்திரி – ரனில் அரசு சர்வதேச இராணுவப் பயங்கரவாதத்தை எந்த மாற்றமும் இன்றித் தொடர்கிறது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உலகக் கடற்பரப்பில் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கும் அடியாள் படையாகவும் ஏகாதிபத்திய இராணுவங்களுக்குத் துணைப் படையாகவும் செயற்படும் நோக்கில் அவன் கார்ட் மரிரைம் என்ற தனியார் இராணுவப் படை உருவாக்கப்பட்டது. அதனை தோற்றுவித்து வழி நடத்தியவர் கோத்தாபய ராஜபக்ச.

இலங்கையில் தனியார் பாதுகாப்பு நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ள Avant Garde Security Services (Pvt) Ltd என்ற தனியார் இராணுவ நிறுவனத்தின் துணை நிறுவனம் அவன்கார் மரிரைம். 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனம் 2012 ஜனவரிக்கு உள்ளாகவே சிசெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளுல் தனது துணை உருவாக்கிக் கொள்கிறது.

இன்று உலகின் பல நாடுகளிலும் நிறுவனம் வியாபித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரத்தின் கீழ் பதிவு செய்யப்பட இந்த நிறுவனம் சர்வதேச தனியார் பாதுகாப்பு வழங்குனர்களுக்கான குறியீட்டு எண்ணை சுவிஸ் நாட்டின் அரச அங்கீகாரத்தின் கீழ் பெற்றுக்கொண்டது. சுவிஸ் அரசு சர்வதேசப் பாதுகாப்பு நிறுவனமாக அங்கீகரித்ததைத் தொடர்ந்தே அவன்கார் மரிரைம் தனது கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை சர்வதேசச் சட்டங்களுக்கு அமைய ஆரம்பித்தது.

நிறுவனத்தின் யாப்பின் அடிப்படையில் இலங்கை அரசு சர்வதேசக் கடல் பரப்பிற்கான பாதுகாப்பை இந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அவன்கார் மரிரைம் இன் கப்பலான மகா நுவர என்ற கப்பல் மைத்திரிபால சிரிசேன 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெற்றிபெற்று ஆட்சியமைத்துக்கொண்டதும் கொழும்பில் இலங்கைப் போலிஸ் பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அண்ணளவாக 3000 ஆயுதங்கள் கையகப்படுத்தப்பட்டன. இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய கப்பலில் சில வெளி நாட்டவர்களும் தங்கியிருத்தனர்.

நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று ஆயுதங்கள் பரிசோதிக்கப்படும் என போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

பிரித்தானியா இலங்கைக்கு அரசாங்கம் ஆயுதங்கள் வழங்கிய வேளையில் சோமாலியக் கடற் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவே ஆயுதங்களை வழங்குவதாகக் கூறியிருந்தது.

சிசெல்ஸ், மொரிஷியஸ், இலங்கை, கென்யா, தென்னாபிரிக்கா, சூடான், துபாய், கென்யா, தன்சானியா ஆகிய நாடுகளில் நிறுவனங்களைக் கொண்டுள்ள அவன்கார்ட் மரிரைம் கோத்தாபயவின் மற்றொரு இராணுவ முதலீடு.

வெளி நாட்டவர்களுடன் சோதனையிடப்பட்ட மகாநுவர கப்பல்

இந்த வருட ஆரம்பத்தில் அவன்கார்ட் மரிடைம் மைத்திரி – ரனில் அரசால் கையகப்படுத்த வேளையில் இனியொருவில் வெளியான செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“நவ தாராளவாதப் பொருளாதரத்தின் நம்பிக்கைக்குரிய இலங்கைப் பிரதிநிதி ரனில் விக்ரமசிங்க ரக்ன லங்காவையும் அவன்கார்ட் மரிரைமையும் முற்றாக அழிக்க முற்படுவார் என்பது சந்தேகத்திற்குரியதே.

ரக்ண லங்காவின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கும் அவன்கார் மரிரைம் நிறுவனம் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கும் மைத்திரிபால அரசிற்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராட்டங்களை நடத்துவதற்கு இதுவே சந்தர்ப்பம்.”

நேற்று 07.09.2015, கொழும்பு மேலதிக நீதிபதி நிஷாந்த பீரிஸ் அவன்காட் மரிடைம் நிறுவனத்திற்கு எதிரான அனைத்து விசாரணைகளையும் நிரந்தரமாக நிறுத்தியுள்ளார். இலங்கை புலனாய்வுத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்றம் இந்த நடவடிகையை எடுத்துள்ளது. அவன்கார் மரிடைம் இன் தலைவர் நிசங்க சேனாதிபதிக்கு எதிரான பிரையாணத் தடையையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

இத் தனியார் நிறுவனத்தை கோத்தாபய ராஜபக்ச தொடர்ந்து வழி நடத்துவாரா? வன்னிப் படுகொலைகளின் பின்னர் இலங்கையில் இராணுவ வியாபாரத்தை ஆரம்பித்த கோத்தாபய அமெரிக்க இராணுவத்தால் பயிற்சியளிக்கபடவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முழுவதும் சர்வதேச இராணுவப் பயங்கரவாதம் தொடரும் என்பதற்கான குறியீடு இது. இந்துசமுத்திரப் பிரந்தியத்தை இரணுவமயமாக்கும் அமெரிக்க அரசிற்கு அவன்கார்ட் மரிடைம் போன்ற பயங்கரவாத நிறுவனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அவன்கார் நிறுவனம் தொடர்பான மேலதிக விபரங்கள்:

உலகமயமாகும் கோத்தாவின் கொலைப்படைகள் : நிவேதா நேசன்
Exit mobile version