Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மர்மமாக மரணித்துப்போன ஜெயலலிதா: மாபியாக்கள் ஆதரவுடனான அரசியல் சதி!

jayalalithaஜெயலலிதா மரணித்துவிட்டார். கோடி கோடியாக அப்பாவி உழைப்பாளர்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டு, நிழல் உலக மாபியாக்கள் சூழ தமிழகத்தைச் சூறையாடிய ஜயலலிதா, இப்போது அதே மாபியாக்களின் பிடியில் சிக்குண்டு மரணித்துப் போயிருக்கலாம் என்று சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. சொத்துக்குவிப்பு, சொத்துகுவித்தாலும் கோடிகளைக் கொட்டி திருமண வைபவம் நடத்தலாம் என்று நடத்திக்காட்டிய ஆணவம், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிய வெறித்தனத்துடன் நடத்திய கொலைகள், ஜனநாயக வாதிகள் மீதான கொலை மிரட்டல் என்ற அத்தனை சொத்தையும் தன்னைச் சுற்றி குவித்துக்கொண்ட ஜயலலிதாவின் மரணம் இறுதி வரை மர்மக்கதை போன்றே தொடர்ந்தது.

அவர் சார்ந்த மாபியாக்களின் ஆதரவோடு மிகப்பெரும் அரசியல் சதி ஒன்று நடைபெற்றிருக்கிறது என்பது இன்று வரை பலரது ஊகத்திற்கும் உட்பட்டதான ஒன்றாக மட்டுமே தொடர்கிறது.

மரணித்த போது அவருக்கு வயது 68. முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா இந்திய அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதியாக வாழ்ந்து தமிழகத்தையே சிதைத்திருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே ஆணாதிக்க சமூகத்தால் சிதைக்கப்பட்ட ஜெயலலிதா அச் சமூகத்தின் பிரதிநிதியாக்வே மாறிப்போய் இன்று மீண்டும் சிதைக்கப்பட்டு வெற்று உடலாக வெளிவந்தமை பல அப்பாவிகளின் அனுதாபத்தை ஈர்த்திருப்பது நியாயமானதே. தமிழகத்தின் ஒரு பகுதி அப்பாவிகள் ஜெயலலிதாவின் மரணத்தால் ஆர்ப்பரிக்கின்றனர்.

1991 ஆம் ஆண்டு ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் ஈழ ஆதரவாளர்களையும், தமிழகத்தில் தங்கியிருந்த ஈழ அகதிகளையும் வேட்டையாடியவர் ஜெயலலிதா. இந்தியாவைப் போன்றே இலங்கையிலும் பயங்கரவாதம் அழிக்கப்படுகிறது என்றும் அதற்காக நாம் அனுதாபம் காட்ட முடியாது என்றும் ஆணவத்தோடு கூறியவர் ஜெயலலிதா. போர் என்றால் அழிவுகளும் வழமைதான் என தனது ‘மனிதாபிமானத்தை’ காட்டிய நமது காலத்தின் இரண்டு பெண்கள் ஹில்லாரி கிளிங்டனும் ஜெயலலிதாவும்.

ஈழத் தமிழர்களும் ஜெயலலிதாவிற்கு கண்ணீர்வடிக்கிறார்கள். மரணித்துப்போன ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் பிணங்களை மிதித்து ஜெயலலிதாவின் மரணத்தை இழப்பாகக் கருதும் நமது சமூகம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டு நாளாகிவிட்டது என்பது இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே தெளிவாகத் தெரிகிறது.

ஹில்லாரியின் இறுமாப்பிற்காக, ஜெயலலிதாவின் ஆணவத்திற்காக, கோத்தாபய ராஜபக்சவின் துணிவிற்காக அஞ்சலி செலுத்தும் அளவிற்கு நமது சமூகத்தின் மனிதாபிமானம் குழி தோண்டிப் புதைக்கப்படுவிட்டது அவமானகரமானது! நான்கு தசாப்தங்கள் ஆயுதம் தாங்கிப் போராட்டம் நடத்திய சமூகம் போர்குணமற்ற சந்தர்ப்பவாதக் கோழைகளை ஆயிரமாயிரமாய் வளர்த்துவிட்டிருப்பது எமது சாபக்கேடு.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை வெளிக்கொண்டுவந்த பிரான்சில் வசிக்கும், பாண்டிசேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழிச்சியின் துணிவு பாராட்டுதல்களுகுரியது.

Exit mobile version