Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பொது பல சேனாவிற்கு நோர்வே நிதி வழங்கிய சதி உறுதியாகிறது :வேறு எந்த அமைப்புக்கள்?

தலித் முன்னணி உறுபினர்களுடன் ஞானசார தேரர்
தலித் முன்னணி உறுபினர்களுடன் ஞானசார தேரர்

பொது பல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு ராஜபக்ச ஆட்சியில் கோத்தாபயவின் ஆதரவுடன் பல் வேறு வன்முறைகளில் ஈடுபட்டுவந்தது, இந்த அமைப்பிற்கு ராஜபக்ச அரசு பச்சைக்கொடி காட்டியது, பௌத்த சிங்களப் பேரினாவாதத்தை முடுக்கிவிட்டது. இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் இந்த அமைப்பினால் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஏற்கனவே பௌத்த சிங்கள தீவிரவாதத்தால் நச்சூட்டப்பட்டிருந்த பலர் பொது பல சேனாவில் இணைந்துகொண்டார்கள்.

ஞானசார தேரர் என்ற பௌத்த பிக்கு மற்றும் நோர்வே அரசிற்கும் இடையிலான தொடர்புகளும், நோர்வே அரசு பொது பல சேனாவிற்கு வழங்கிய நிதி உதவியும் இனியொருவில் கட்டுரை ஆதாரங்களாக வெளியாகின.

திலந்த விதானகே

பொது பல சேனா ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஞானசார தேரர் உட்பட்ட பௌத்த துறவிகள் குழுவினர் நோர்வே நாட்டிற்குச் சென்று பல அரச பிரமுகர்களைச் சந்தித்தனர். நோர்வே செல்வதற்கான விமானப் பயணச்சீட்டை இலங்கைக்கான நோர்வே தூதுவரே ஏற்பாடு செய்ததாக ஒப்புகொண்டிருந்தார். நோர்வேயின் தன்னார்வ நிதிக் கொடுப்பனவு நிறுவனமன NORAD இன் நிதியில் செயற்பட்ட WIF என்ற இன் நிறைவேற்று இயக்குனராக பதவி வகித்த திலந்த விதானகே என்பவரே பொதுபல சேனாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். துறவிகள் குழுவுடன் நோர்வே சென்றவர்களுள் திலந்த விதானகேயும் ஒருவர். (கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.)

அமெரிக்க மற்றும் நோர்வே அரசுகள் இணைந்து மகிந்தவை நீக்க முனைந்த காலப்பகுதியில் பொது பல சேனாவிற்கு ஏன் நிதி வழங்க வேண்டும் என்ற கேள்விகள் பரவலாக எழுந்தன.

அதற்கான விடை ஆட்சி மாற்றத்தின் போது கிடைத்தது.

பிளேக்குடன் கோத்தாபய ராஜபக்ச

போர் முடிந்த கையோடு இலங்கை சென்ற அமெரிக்க உதவி அரச துறைச் செயளாளர் ரொபேர் ஓ பிளேக் கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்தார். இலங்கை இராணுவத்தினரின் ஒரு பகுதியை ஆப்கானிஸ்தானில் போர் புரிவதற்காக அனுப்பிவைக்குமாறு கோத்தபயவை ஓ பிளேக் கேட்டுக்கொண்டதாக விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

பிளேக்கின் கோரிக்கையை நிராகரித்த கோத்தாபய, ஆப்கானிஸ்தானிற்கு துருப்புக்களை அனுப்பினால் இஸ்லாமியர்களின் வாக்குகளைத் தேர்தலில் இழக்க நேரிடும் என கோத்தா ஓ பிளேக்கிடம் கூறினார்.

அதன் பின்னர் ராஜபக்ச குடும்பத்தை ஆட்சியிலிருந்து அகற்ற இஸ்லாமியத் தமிழர்களை மகிந்தவின் எதிரியாக்க வேண்டும் என்ற திட்டம் வகுக்கப்பட்டதன் விளைவே பொது பல சேனா. மகிந்த ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதும் பொது பல சேனா மகிந்தவிற்கு எதிராகச் செயற்பட ஆரம்பித்தது.

இப்போது பொது பல சேனாவிற்கு வெளி நாட்டுநிதி உதவி வழங்கப்பட்டது தனக்குத் தெரியும் என்றும் பிரான்சில் ஞானராச தேரருக்கு இரகசியக் குடும்பம் ஒன்று இருப்பதாகவும் அந்த அமைப்பில் செயற்பட்ட ஜா எல பிரதேச சபை உறுப்பினர் அஞ்சு பெரேரா தெரிவித்துள்ளார்.

பொது பல சேனாவை ஆரம்பிப்பதற்காக நோர்வே சென்ற ஞானசார தேரர், அங்கிருந்து பிரான்ஸ் வழியாகவே இலங்கை சென்றார். பிரான்சில் தமிழர்கள் நடத்தும் தலித் முன்னணி என்ற அமைப்பை ஞானசார தேரர் சந்தித்தார்.

அதே வேளை நோர்வே அரசின் NORAD நிறுவனம் இலங்கையில் தலித் அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகங்கள் போன்றவற்றிற்கு நிதி வழங்குவதாகத் தனது இணையத்த்ல் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தலித் முன்னணியுடன் உடன்பாட்டு அடிப்படையில் பல பிரமுகர்கள் செயற்பட்டு வருகின்றனர். பிள்ளையானின் ஆலோசகராகவிருந்த எம்.ஆர்.ஸ்டாலின், நடிகர் சோபா சக்தி போன்றோர் முன்னணியுடன் நெருக்கமாகச் செயற்படுகின்றனர்.

இவை தவிர, பிரான்சிலுள்ள சம உரிமை இயக்கத்கின் பிரமுகர்கள் தலித் முன்னணியுடன் உடன்பாட்டு அடிப்படையில் செயற்படுகின்றனர். பிரேம்குமார் குணரத்தினம் தலைமையில் ஜே.வி.பி இலிருந்து பிளவுண்ட குழுவினரால் உருவாக்கப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் ஒரு பிரிவாகவே சம உரிமை இயக்கம் இயங்கி வருகிறது. வடக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

சம உரிமை குழுவினருக்கு நோர்வே அரசு நிதி வழங்கி வருவதற்கான நேரடியான ஆதாரங்கள் எமது தேடல்களில் சிக்கவில்லை.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கு ஆதரவாகச் செயற்படும் தமிழ் சிவில் சமூக அமையம் இலங்கையிலுள்ள சிவில் அமைப்புக்களில் ஒன்றாகும். தனது இணையத்தில் குறிப்பிவது போன்று தமிழ் சிவில் சமூக அமையத்திற்கு நோர் எட் நிதி வழங்கிவருகிறதா என்பதற்கான ஆதாரங்கள் இல்லை இது குறித்த அந்த அமைப்பே தெளிவுபடுத்த வேண்டும். (தமிழ் சிவில் சமூக அமையத்திடம் மன்னிப்புக் கோருகிறோம் : இனியொரு…)

தமிழர்களின் பிரதேசத்திற்கு உதவி வழங்குமாறு  USAIDபோன்ற நிறுவனங்களுடன் அமெரிக்காவில் ஒன்றுகூடிய கஜேந்திரகுமார்: 2005

அமெரிக்காவையும் மேற்கு நாடுகளையும் பிடித்துவந்து தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்தருவோம் எனக் கூறும் கஜேந்திரகுமார், சம்பந்தன் கும்பல்கள் இன்று வாக்குப் பொறுக்கக் கிளம்பியுள்ளனர். அமெரிக்கா சென்று கூட்டம் போட்டு அந்த நாட்டின் உளவு நிறுவனமான USAID  ஐ இலங்கைக்க்குக் கூட்டிவந்த கஜேந்திரகுமார் இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடைத் தரகராகச் செயற்பட்டார். இவை அனைத்தும் இன்று பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் வாக்குப் பொறுக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே புதிஅ மக்கள் நலன் சார்ந்த அரசியல் உருவாகும் வழிகள் திறக்கப்படும்.

இன்றும் இந்த உளவு நிறுவனங்களின் பிடியிலேயே புலம்பெயர் அமைப்புக்கள் செயற்படுகின்றன. இவர்கள் அனைவரும் இணைந்து தமிழர்களின் தலைமைகள் என்று மீண்டும் மீண்டும் தமிழ் மக்களை அழிவின் விழிம்பிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

எது எவ்வாறாயினும் முப்பது வருடத் தியாகங்கள், இழப்புக்கள் ஊடாகக் கட்டியெழுப்பப்பட்ட சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் அமெரிக்கா நோர்வே போன்ற ஏகாதிபத்தியங்களின் கரங்களில் திட்டமிட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து விடுதலை பெறும் வரை அழிவுகள் தொடரும்.

பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்
பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்(2)
NORAD: http://www.norad.no/en/toolspublications/publications/2009/study-of-the-impact-of-the-work-of-forut-in-sri-lanka–building-civil-society/
Exit mobile version