Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

58 தலித்துகள் படுகொலை வழக்கில் 16 பேருக்கு மரண தண்டனை.

 பிகார் மாநிலத்தில் லட்சுமண்பூர் பாத் என்ற ஊரில் 1997-ம் ஆண்டு 58 தலித்துகள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில்,​​ 16 பேருக்கு மரண தண்டனையும் ​ 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.​ 50 ஆயிரம் அபராதமும் விதித்து ஜெஹனாபாத் மாவட்ட கூடுதல் நீதிபதி விஜய்பிரகாஷ் மிஸ்ரா தீர்ப்பு வழங்கினார்.

​ மேல் ஜாதியைச் சேர்ந்தவர்களின் ரணவீர் சேனா என்ற அமைப்பினர் இந்தப் படுகொலைகளை நிகழ்த்தினர்.​ அப்போது இது அரசியல் அரங்கில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.​ மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா,​​ சமதா கட்சிகளின் தலைவர்கள் அப்போது வலியுறுத்தினர்.

​ தலித்துகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த மேல் ஜாதியினர் ரணவீர் சேனை மூலம் லட்சுமண்பூர் பாத் கிராமத்தைச் சேர்ந்த தலித்துகளை வீடுகளிலிருந்து வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றனர்.​ அப்போது இதைக் கேள்விப்பட்டு பதறித் துடிக்காதவர்களே கிடையாது.

​ இந்தக் கொலைக்குப் பின்னால் அரசியல் சதித் திட்டம் ஏதும் இருக்குமா என்று ஆராய அப்போதைய முதலமைச்சர் லாலு பிரசாத்,​​ விசாரணைக் கமிஷனை நியமித்தார்.​ சி.பி.​ தாக்கூர் போன்ற மூத்த பாஜக தலைவர்கள் கமிஷன் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

​ பிறகுதான் இது நில உடமையாளர்களுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்குமான மோதல் என்பது உறுதியானது.​ இதில் ஜாதி வெறியும் சேர்ந்ததால் இரக்கமற்ற முறையில் அப்பாவி தலித்துகள் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியவந்தது.

​ ​ இந்த வழக்கு நீதிமன்றங்களில் அலைக்கழிக்கப்பட்டே வந்தது.​ 2008 டிசம்பர் 23-ம் தேதி தான் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்பட்டது.​ இந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிதான் இந்த வழக்கில் விசாரணை ஒருவழியாக நடந்து முடிந்திருக்கிறது.

​ இந்த வழக்கில் மொத்தம் 152 பேர் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டாலும் 91 பேர்தான் சாட்சியம் அளித்தனர்.​ நடுவில் 1999-ல் இந்த வழக்கு ஜெஹனாபாதிலிருந்து பாட்னா நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டது.​ பிறகு மீண்டும் ஜெஹனாபாதிலேயே விசாரணை நடைபெற்றது.

​ மரண தண்டனை பெற்றவர்கள்:​ கிரிஜா சிங்,​​ சுரேந்திர சிங்,​​ அசோக் சிங்,​​ கோபால்சரண் சிங்,​​ பலேஷ்வர் சிங்,​​ துவாரகா சிங்,​​ விஜேந்திர சிங்,​​ நவல் சிங்,​​ பலிராம் சிங்,​​ நந்து சிங்,​​ சிவமோகன் சர்மா,​​ பிரமோத் சிங்,​​ சத்ருகன் சிங்,​​ ராம்கேவல் சர்மா,​​ தர்மா சிங்,​​ நந்த சிங்.

​ ஆயுள் தண்டனை பெற்றவர்கள்:​​ பப்லு சர்மா,​​ அசோக் சிங்,​​ மிதிலேஷ் சர்மா,​​ தரீக்ஷன் செஜத்ரி,​​ நவீன் குமார்,​​ ரவீந்திர சிங்,​​ சுரேந்திர சிங்,​​ சுநீல் குமார்,​​ பிரமோத் குமார்,​​ சந்திரசேகர் சிங்.

​ இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே,​​ குற்றஞ்சாட்டப்பட்டிருந்த புகால் சிங்,​​ சுதர்சன் சிங் ஆகியோர் இறந்துவிட்டனர்.

Exit mobile version