
இராணுவப் பொருளாதாரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிங்களப் பகுதிகளில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியது போன்று தோற்றமளித்தது. அழிந்து குட்டிச்சுவராகும் இலங்கையில் மக்கள் எழுச்சிகள் உருவாகாமல் பாதுகாக்க சிங்கள பௌத்த மேலாதிக்கவாதம் தனது அழிவு அரசியலை இன்னும் அதிக வேகத்துடன் ஆரம்பித்துள்ளது. சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளை களத்தில் இறக்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர் சிங்கள பௌத்த அடிப்படை வாதத்தை தீயூட்டி எரிப்பதற்காக பிரான்ஸ் விகாரையின் பௌத்த பிக்கு தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.
சிங்கள குடும்பங்களில் பிள்ளைகள் பிறப்பது குறைந்துள்ளதன் காரணமாக எதிர்காலத்தில் குறைந்தது 5 பிள்ளைகளை பெறும் சிங்கள குடும்பங்களுக்கு பணப் பரிசு வழங்கப்படும என பிரான்ஸ் நாட்டுக்கான பிரதான சங்க நாயக்கர் பரவாஹெர சந்தரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் அடுத்த வருடத்தில் இருந்து அமுலுக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். சிங்கள குடும்பங்கள் குழந்தைகளை பெற்றெடுப்பது குறைந்துள்ளதால், எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க நேரிடும் எனவும் இந்த பாதிப்பு பௌத்த மதத்திற்கும் கெடுத்தியை உண்டுபண்ணும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள குடும்பங்களில் பிள்ளைகள் இல்லாது போனால், துறவறம் பூணவும் பிள்ளைகள் இல்லாமல் போகும் எனவும் இதனால், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள பௌத்தர்களுக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையானது சிங்கள இனத்தின் பாரிய அழிவுக்கு வழிகோலும் என்பதால், தான் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பரவாஹெர சந்தரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.