துபாயில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில், இவர்களின் பங்குதான் குறிப்பிடத்தக்கது. அங்குள்ள வெளிநாட்டவர்களில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டவர்களே அதிகம்.அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகத்தில் பதியப்பட்டுள்ள வெளிநாட்டு நபர்களில் 30 லட்சம் பேர், கட்டடத் தொழிலாளர்களாகத்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அங்கு உருவாகும் புதிய பெரிய கட்டடங்கள் யாவும் இந்தத் தொழிலாளர்களால்தான் வடிவம் பெறுகின்றன.இப்போது உருவாகியுள்ள நெருக்கடியால், துபாயில் கட்டுமானம் உள்ளிட்ட புதிய வேலைவாய்ப்புகளுக்கு இனி இடமில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கு இதுநாள் வரை வேலைபார்த்து வந்த ஆசிய நாட்டவர்கள் பலர் வெளியேறி, தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த தாமஸ் (50) என்பவர் 10 ஆண்டுகளாகத் துபாயில் கட்டுமான நிறுவனத்தில் களப் பொறியாளராகப் பணிபுரிந்தவர். இப்போது அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அவருக்கு வேலையில்லாமல் போய்விட்டது. சமீபத்தில் திருவனந்தபுரம் திரும்பி விட்ட அவர்,”தாய்நாட்டுக்குத் திரும்புவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் வந்த விமானம் முழுவதும் இப்படித் திரும்பி வந்தவர்களால்தான் நிரம்பி வழிந்தது. கூடிய விரைவில் அல்லது கொஞ்சம் தாமதமாக ஆனாலும், 80 சதவீதம்பேர் துபாயை விட்டு வெளியேறி விடுவர்’ என்று தெரிவித்தார்.