அவரது மனைவி பார்வதி வேலுப்பிள்ளையும் நேற்று விடுதலை செய்யப்பட்டார். திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலுடன் இவரையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொறுப்பேற்று நேற்றிரவு யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்.
காலஞ்சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் தொடர்பாக மரண விசாரனை நடைபெற வேண்டும் எனத் தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மரண விசாரனை நடைபெற்றதாகவும்,
பிரேதப் பரிசோதனை நடைபெற்று, சட்ட வைத்திய அறிக்கையின்படி இயற்கை மரணம் என்ற சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இதே வேளை சிவாஜிலிங்கம் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக இந்திய உளவுப்படையால் ஒழுங்கு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் என்ற பரவலான சந்தேகம் நிலவுகிறது.
“அன்னாரின் மனைவி பார்வதி வேலுப்பிள்ளை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்பட்டுள்ளார்” என்றும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை அன்னாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இன்று யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் உட்பட 3 பிரமுகர்கள இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக் தங்களுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.