Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வெள்ளைக்கொடி விவகார விசாரணை மீண்டும் ஆரம்பம்

இறுதிகட்ட மோதல்களின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடையவந்த புலிகள் உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சரத் பொன்சேகா வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை இன்று வரை (28) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதான சந்தேகநபரான சரத் பொன்சேகா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவில்லை.
சரத் பொன்சேகா சுகயீனமுற்றிருப்பதால், அவரைக் கடற்படை வைத்தியர்கள் பரிசோதனை செய்துள்ளதாகவும், சரத் பொன்சேகா தொடர்பான வைத்திய அறிக்கை கிடைத்தவுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்படுமெனவும், இராணுவத்தின் சட்ட அதிகாரி கருணாரட்ன கொழும்பு மேல் நீதிமன்றிற்கு இன்று அறிவித்துள்ளார்.
குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சரத் பொன்சேகாவிற்கு எதிராக சாட்சியமளிக்க பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா ஆகியோரும் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.
பாதுகாப்பு செயலாளர் நீதிமன்றத்திற்கு பிரசன்னமாகியிருந்தமையால் நீதிமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஏராளமான காவல்துறையினரும், இராணுவத்தினரும் நீதிமன்றத்திற்குள்ளும் வெளியிலும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இன்று (28) ஜெனரல் சரத் பொன்சேகாவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை இராணுவத்தினுள் சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்பட்டுவருவதாக பலர் தகவல்கள் வெளியாகியுள்ளநிலையில் விசாரணைகள் முக்கியத்துவமடைகின்றன.

Exit mobile version